Wednesday, December 31, 2003

EU Presidency


இந்த 2003ல் இத்தாலி ஜெர்மனி இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பது ஐரோப்பிய நாடுகளிடையே கவலையளிக்கும் ஒரு விஷயமாகி இருக்கின்றது.

இத்தாலியின் சில்வியோ பெர்லுச்கோனி, இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைத்துவத்திலிருந்து விலகுகின்றார். மற்ற முந்தைய தலைவர்களோடு ஒப்பிடுகையில் இவரை பலரால் வெகு நாட்களுக்கு நிச்சயமாக மறக்க முடியாது; இந்த புகழ் அவரது திறமையான (??) வழி நடத்தலுக்காக
அல்ல; மாறாக அவரது தலைமைத்துவத்தின் போது அவரது பேச்சு ஜெர்மானியர்களைப் பாதித்த அளவிற்கு இதுவரை வேறு எப்போதும் நடந்ததில்லை.

தனிப்பட்ட முறையில், செல்வந்தரான பெர்லுச்கோனி, இத்தாலியின் பல முக்கிய தொலகாட்சி நிறுவனங்களை தனது கையில் வைத்திருப்பவர். power of media எந்த அளவிற்கு ஒருவரது செல்வாக்கை உயர்த்தி வைக்கும் என்பதில் இவரும் ஒரு நல்ல உதாரணம் என்று தாராளமாகச்
சொல்லலாம். தமிழகத்திலும் இந்த நிலைதானே இருக்கின்றது. அரசியல்வாதிகள் கைகளில் வானொலி தொலைகாட்சி நிலையங்கள் மாட்டிக் கொள்ளும் போது சுய விளம்பரம் செய்வதற்கு வேறு யாரையும் நாட வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லையே!



EU Parliment நடந்து கொண்டிருக்கும் போது பெர்லுச்கோனி ஜெர்மனியின் மார்ட்டின் சூல்ஸ் என்ற அரசியல்வாதியை நாஸி அங்கத்துவராக வைத்து பேசிய வார்த்தைகளை ஜெர்மானியப் பத்திரிக்கைகள் இன்றைக்கும் விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

"Mr. Schulz, I know there is in Italy a man producing a film on the Nazi concentration camps, I'd like to suggest you for the role of guard. You'd be perfect." மார்ட்டின் பெர்லுச்கோனியைக் கடுமையாக விமர்சனம் செய்தமைக்காக இந்த தனிப்பட்ட தாக்குதலை பொது மேடையில் முன்வைத்தார் பெர்லுச்கோனி. இவர்கள் இருவருமே பின்னர் தங்கள் அத்துமீறிய வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாலும் பத்திரிக்கைகள் இதனை சும்மா விட்டு விடவில்லை. மனித உறிமை மீறல், தனிப்பட்ட தாக்குதல், அடிமை மனப்பான்மை என வர்ணித்து பெர்லுச்கோனியை இன்றளவும் புகழ்பாடிக் கொண்டே தான் இருக்கின்றன.

அதற்குப் பிறகு, இத்தாலிக்குச் செல்லும் ஜெர்மானிய சுற்றுப் பயணிகளை விமர்சித்தும் ஒரு பேச்சு வளர அதைக் கண்டு ஜெர்மானிய அதிபர் தனது இத்தாலிய உல்லாசப்பயணத்தை ரத்து செய்ததும் மற்றொரு கதை. (எனது முந்தை செப்டம்பர் மாத பதிவுகளில் இதனைக் காணலாம்.)

பெர்லுச்கோனி, அவரது தலைமைத்துவத்துவத்தின் போது எந்த புதிய முயற்சியையும் செய்யவில்லை என்பது மற்ற அங்கத்துவ நாடுகளின் தலைவர்களின் பேச்சாகி போயிருக்கின்ற இந்த காலகட்டத்திலும், தான் மிக அதிகமாகவே சாதித்து விட்டதாக பெருமை பேசிக்
கொண்டிருக்கின்றார் பெர்லுச்கோனி. அடுத்த தலைவர் எந்த அளவிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருமையை வளர்க்கப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

Tuesday, December 30, 2003

Children under poverty

ஜெர்மனியின் வறுமை நிலை நிர்மாணிப்பு சங்கம் வெளியிட்டிருக்கும் இவ்வாண்டிற்கான அறிக்கையின் படி இந்த நாட்டில் வறுமையில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை வருகின்ற இரண்டு ஆண்டுகளில் 1.5 மில்லியனாக உயரும் எனத்தெரிகின்றது. தலைநகரமான பெர்லினில் மட்டும் 100,000 குழந்தைகள் வறுமை நிலையிலேயே வாழ்கின்றனர் என்கின்றது இந்த அறிக்கை.



ஜெர்மனியைப் பொறுத்தவரை வறுமை நிலை எனப்படுவது யார் ஒருவர் சராசரி வறுமானத்திற்கு 50 விழுக்காடு குறைவாக வாழ்கின்றார்களோ அவர்களையே குறிக்கும். இந்த கணக்கெடுப்பின் படி, single parent என்று சொல்லப்படும் தாய் அல்லது தந்தை ஒருவரோடு வாழும் குழந்தைகள் தான் இந்த எண்ணிக்கையில் ஒரு பாதியினர். மற்ற ஒரு பாதி 4 குழந்தைகளுக்கும் மேம்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களின் குழந்தைகள்.

ஜெர்மனியில் இப்போது நிலவி வரும் வேலையில்லா பிரச்சனை இந்த நிலைக்கு ஒரு காரணமாக இருந்தாலும், பெருகி வரும் இளம் வயது தாய்மார்களின் எண்ணிக்கையும், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே குழந்தை பெற்று வளர்க்கும் பெண்களின் எண்ணிக்கையின் வளர்ச்சியுமே இந்த நிலைக்கு காரணம் என்று தாராளமாகச் சொல்ல முடியும். கல்லூரிப் படிப்பை எட்டுவதற்கு முன்னரே குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள் இங்கு இருக்கவே செய்கின்றனர்.

குழந்தைகள் பராமரிப்பு என்பது ஜெர்மனியைப் பொறுத்தவரை மிகவும் பொருளாதார ரீதியாக சிரமமான ஒன்றே. இங்கு பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கம் மாதச் செலவிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவுத் தொகையாக ஒவ்வொரு பெற்றோருக்கும் வழங்குகின்றது.

அப்பா அம்மா இருவருமே இருந்தாலும் சரி, அப்பா இல்லாமல் அம்மா மட்டுமே பராமரிக்கும் குழந்தையாக இருந்தாலும் சரி இந்தத் தொகை வழங்கப்படுகின்றது. ஆனாலும் குழந்தையைப் பார்த்துக் கொள்வது, குழந்தைக்களுக்கான உணவுப்பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் ஆகிய அன்றாட செலவுகளை சமாளிப்பதற்கு இந்தத் தொகை நிச்சயமாகப் போதாது. அதோடு குழந்தைக்கான மருத்துவ இன்சூரன்ஸ் வேறு இருக்கின்றது.




குழந்தை பெற்ற பெண்கள் உடனே வேலைக்குச் செல்ல முடிவதுமில்லை. குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கு இங்கு பாட்டி தாத்தா என்று பெரிய குடும்பங்களும் இருப்பதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்த்துக் கொள்வதையே விரும்புவதால் குழந்தை பெற்ற
பெண்கள் வீட்டில் இருந்து தங்கள் குழந்தை வளரும் வரை பார்த்துக் கொள்வது அவசியமாகின்றது. அல்லது முழு நேர வேலையை அரை நாள் வேலையாக மாற்றிக் கொண்டு வேலையைத் தொடர வேண்டியிருக்கின்றது.

கடந்த ஆண்டுகளில் தனியாக குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் தாய்மார்களுக்கு சலுகைகள் கிடைத்து வந்தன. சென்ற ஆண்டு முதல் இந்த சலுகைகளும் நிறுத்தப்பட்டன. இப்போது வருகின்ற ஆண்டுகளில் மேலும் பல சலுகைகள் குறைக்கப்படவிருப்பதால் தனியாக குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கப் போவது தவிர்க்கப்பட முடியாத ஒன்றுதான்.

Monday, December 22, 2003

Dowry - a growing social phenomenon

சில நாட்களுக்கு முன்னர் போப்லிங்கன் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழ் நண்பர் ஒருவரின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். பல பொது விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் பேச்சு ஐரோப்பாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களிடையே இருந்து வரும் திருமண வரதட்சணைப் பற்றியும் ஆரம்பித்தது.



நான் 1996-ல் 2 வார காலம் இலங்கைப் பயணம் சென்றிருந்த போது, அங்கு உள்நாட்டிலிருந்து வெளியாகும் தினசரிப் பத்திரிக்கையைப் படிக்கும்போது வரன் தேடுவோரின் பட்டியல் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றி வெளிவந்திருந்த விளம்பரங்களைப் பார்த்ததைப் பற்றி அவர்களிடம் விவரித்தேன். ஒரு மருத்துவராக வேலை செய்யும் பெண்ணுக்கு மாப்பிள்ளைத் தேடும் பெற்றோர் பெண்ணோடு சேர்த்து லட்சக் கணக்கில் வரதட்சணை மற்றும் ஒரு முழு வீடு போன்றவற்றையும் சேர்த்துத் தருவதாக குறிப்பிட்டிருந்தது என் ஞாபகத்தில் இன்றும் மறையாமல் இருந்தது. அதைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போது ஐரோப்பாவிற்கு வந்த பின்னர் வரடதட்சணை என்பது எந்த அளவிற்கு மேலும் வளர்ந்திருக்கின்றது என்று நண்பர்கள் சொன்னதைக் கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது.



சில மாதங்களுக்கு முன்னர் ஜெர்மனியில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கு லண்டனில் இருக்கும் மாப்பிள்ளைக்கும் திருமணம் நடத்தியிருக்கின்றார்கள். அதற்கு பெண் வீட்டர் சார்பாக 100 பவுன் நகை மற்றும் ஏறக்குறைய 1 லட்சம் இங்கிலாந்து பவுனும் (ரொக்கம்) கொடுத்திருக்கின்றார்கள். பெண் ஒரு புத்தகக் கடையில் விற்பனையாளராக வேலை செய்கின்றாள். மாப்பிள்ளை லண்டனில் ஒரு கடையில் வேலை செய்கின்றார். என்ன நடந்ததோ தெரியவில்லை. திருமணம் நடந்து ஒரு மாதம் முடிவதற்குள் அந்தப் பெண் சேர்ந்திருக்கப் பிடிக்காமல் ஜெர்மனிக்குப் பிடிவாதமாகத் திரும்பிவிட்டாள். முதலில் பெற்றோர்கள் இதற்குச் சம்மதிக்கவில்லையாம். பின்னர் வேறு வழிய்ல்லாமல் பெண்ணை திரும்ப அழைத்துக் கொண்டார்களாம்.

இவ்வளவு வரதட்சனை கொடுத்தும் கூட நிம்மதியற்ற திருமணமாகவே இது முடிந்திருக்கின்றது. இதைபோல பல கதைகள் இங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கல்வியும் வாழ்க்கை தரமும் உயர்ந்து வரும் போது மனித நேயமும் பண்பும் வளர வேண்டும் என நாம் எதிர்ப்பார்ப்பது இயற்கை. ஆனால் இங்கு நிலைமை சற்று வித்தியாசமாகவே மாறிக்கொண்டிருக்கின்றது. அதிகமாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமைகின்ற போது 'அதிகமாக எங்களால் வரதட்சனை கொடுக்க முடியும்' என்று பெண்ணைப் பெற்றவர்கள் நினைப்பதும், 'ஐரோப்பாவில் தானே பெண் இருக்கின்றாள். அதிகமாகவே வரதட்சணை கொடுக்கட்டுமே' என்று மாப்பிள்ளை வீட்டாரும் நினைக்கும் மனப்போக்கு வளர்ந்து கொண்டு வருகின்றது. இங்கேயே வளர்ந்து படித்து வரும் தமிழ் இளைஞர்கள் இதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதை மறுக்க முடியாது. சில மாதங்களுக்கு முன்னர் நான் பேசிக்கொண்டிந்த 16 வயது தமிழ் பெண் ஒருத்தி இந்த மனப்போக்கை பற்றி தனது பெற்றோர் முன்னிலையிலேயே குறை கூறி பேசிய போது அவளுடைய சிந்தனை வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ந்தேன். இளம் தலைமுறையினர் தாம் நமது சமுதாயத்தில் மேலும் படர்ந்துள்ள விலங்குகளைப் போக்க முடியும் என்பதை இந்தப் பெண் போன்றவர்களைப் பார்க்கும் போது உணர்ந்து சந்தோஷப்பட முடிகின்றது.

Tuesday, December 9, 2003

Cologne



கெல்ன் ஜெர்மனியின் பழம் பெரும் நகரங்களில் ஒன்று. ஜெர்மனியின் மத்திய பகுதியில் இருக்கும் இந்த நகரம் ஜெர்மனியின் மிக அழகிய நகரங்களில் ஒன்று என்றும் தாராளமாகச் சொல்லலாம். Cologne என்னும் இந்தப் பெயர் ரோமானியப் பேரரசர் Claudius -ஸின் மனைவியின் ஞாபகமாக வைக்கப்பட்டது. இவரது காலம் 50 A.D. கெல்ன் நகரின் எல்லா இடங்களிலும் ரோமானியர்களின் ஆட்சியை ஞாபகப்படுத்தும் வகையில் பல நினைவுச் சின்னங்களைப் பார்க்க முடியும்.

கெல்ன் நகருக்குச் சிறப்பினைத் தருவது கெல்ன் டோம் தான். மிகப் பிரமாண்டமான இந்த தேவாலயத்தின் கலை அழகை சொல்வதற்கு வார்த்தைகள் கிடையாது. கடந்த முறை நான் அங்கு சென்றிருந்த போது தேவாலயத்தின் ஒரு பகுதி திருத்தி அமைக்கப்பட்டுக் கொண்டிருந்ததது. தேவாலயத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு சில நிமிடங்கள் தியானம் செய்து விட்டு வெளியே நடந்தது மறக்கமுடியாத இனிமையான நினைவுகள். சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது, சர்வ சாதாரணமாக ஒரு இளைஞன் ஓடி வந்து 1 EUR தரமுடியுமா என் என்னைத் தடுத்து நிறுத்திக் கேட்டான். நான்றாக உடை அணிந்திருந்த அவனுக்கு ஏறக்குறைய 25 வயதிருக்கும். "பியர் வாங்க வேண்டும்; பணம் தருகிறாயா" என கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் அவன் என்னைக் கேட்டது உண்மையிலேயே திகைக்க வைத்தது.

இந்த நகருக்கு ரோமானியர்கள் தான் கிருஸ்துவ மதத்தை கொண்டுவந்தனர். அவர்களது தாக்கத்தால் தான் இங்கு பல தேவாலயங்கள் கட்டப்பட்டன. 12ம் நூற்றாண்டிலிருந்து கெல்ன் நகரத்திற்கு Sancta (புனித நகரம்) எனும் தகுதி வழங்கப்பட்டது. உலகிலேயே 4 நகரங்களுக்குத்தான் இந்த சிறப்புண்டு; அவை ரோம், ஜெருஸலம், பைஸண்டியம் மற்றும் கெல்ன் ஆகியவையே.

கெல்ன் நகரத்தின் மற்றொரு சிறப்பு ரைன் நதி. ரைன் நதியை இரண்டு கரைகளிலும் இணைக்கும் பல பாலங்களை இங்கு காண முடியும். ரைன் நதியில் படகு சவாரி செய்வதும் இனிமையான ஒரு அனுபவம் தான். ஜெர்மனிக்கு வருபவர்கள் கண்டிப்பாக பார்த்து மகிழ வேண்டிய ஒரு நகரம் கெல்ன் என்றால் அது மிகையாகாது.

இதற்கெல்லாம் மேலாக தமிழர்களாகிய நமக்கு சந்தோஷத்தைத் தரும் மற்றொரு விஷயம் என்னவென்றால் இங்கு இருக்கும் கெல்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் துறை. உலகின் இரண்டாவது பெரிய தமிழ் நூல்களின் எண்ணிக்கையைக் கொண்ட தமிழ் துறையாக இது இருந்து வருகின்றது என்றால் ஆச்சரியம் தானே!

Sunday, December 7, 2003

பெர்லின்

ஜெர்மனியின் மிக முக்கிய நகரங்களில் பெர்லினும் ஒன்று. இந்நாட்டின் தலைநகரமாக இருப்பது மட்டுமன்றி கலாச்சார மையமாகவும் திகழ்வதுதான் பெர்லின் நகரின் தனிச்சிறப்பு என்று சொல்ல வேண்டும்.

முன்னர் கிழக்கு-மேற்கு பெர்லின் என இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்த பெர்லின் இப்போது ஒரு தனி நகரமாக இருந்து வருகின்றது. பெர்லின் சாலைகளில் நடக்கும் போது மற்ற நகரங்களில் இல்லாத அளவிற்கு பல இன மக்களை சர்வ சாதாரணமாக இங்கு காணமுடியும் என்பது முற்றிலும் உண்மை. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெர்மனியின் வாசலாக இருப்பது பெர்லின் தான். பல நாடுகளிலிருந்து அகதிகளாக ஜெர்மனிக்குள் நுழைபவர்கள் பெர்லினைத்தான் மையமாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பது அதிகாரப்பூர்வமாகக் காவல்துறை வெளியிட்டிருக்கும் ஒரு செய்தி.

ஸ்டுட்கார்ட் நகரில் எனது அலுவலகத்தில் என்னோடு வேலை செய்து கொண்டிருந்த எனது இனிய நண்பன் ஸ்வென், ஸ்டுட்கார்ட் நகரின் அவசர வாழ்க்கை பிடிக்காமல் வேலையை உதறி விட்டு வாழ்க்கையை இனிமையாக கழிக்க வேண்டும் என முடிவெடுத்து பெர்லினுக்குச் சென்று விட்டான். பெர்லின் சாலைகளில் இருக்கும் தெருவோரக் கடைகளில் இயற்கையயும் வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டு பியர் சாப்பிட்டு வாழ்க்கையை சுகமாகக் கழிப்பதாக (நிரந்தர வேலையில்லாவிட்டாலும்) அவ்வப்போது அவன் எனக்கு தகவல் அனுப்புவதுண்டு.

ஜெர்மனி முழுக்க இருக்கும் மக்கள் தொகையில் பெர்லினில் தான் மிக அதிகமானோர் வேலையில்லாமல் இருப்பதாக கணக்கெடுப்புக்கள் கூறுகின்றன. அதில் இன்னொரு அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் ஜெர்மனியின் இந்த புகழ் பெற்ற நகரம் இப்போது மாநிலத்தின் (பெர்லின்) செலவுகளை எதிர் கொள்ள முடியாமல் திண்டாடுகின்றது என்ற செய்திதான். பெர்லினிலுள்ள ஒரு புகழ் பெற்ற தொல்பொருட்காட்சி நிலையம் அதற்கான பாதுகாப்புச் செலவுகளைப் பெற முடியாததால் இப்போது மூடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் இந்த மாநிலத்தின் முதல்வர் மத்திய அரசாங்கம் தங்கள் மாநிலத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று அறை கூவல் விடுத்திருந்தார். இதுதான் இன்றைய பெர்லினின் நிலமை.

ஜெர்மனி பொருளாதார மறு சீரமைப்பு செய்வதில் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் பலனாக இப்போது பல புதிய தொழில் வாய்ப்புக்கள் மலர ஆரம்பித்து சில நடுத்தர வகை நிறுவனங்கள் இலாபம் ஈட்ட ஆரம்பித்திருப்பதாக நேற்றைய வர்த்தக செய்தியில் கேள்விப்பட்டேன். பல மாதங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கும் ஒரு நல்ல செய்தி. இந்த நிலை தொடரவேண்டும்!

Tuesday, December 2, 2003

Job Bank!

நேற்று, டிசம்பர் 1 அன்று அதிகாரப்பூர்வமாக ஜெர்மனியின் வேலையில்லாதவர்கள் தங்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்வதற்கும், தங்கள் இல்லத்திலிருந்தவாறே உள்நாட்டில் வேலை தேடுவதற்குமாக பிரத்தியேகமாக வலைப்பக்கம் ஒன்றினை ஜெர்மனி அரசாங்கம் ஆரம்பித்து வைத்தது. உள்நாட்டில் உள்ள 3 மில்லியன் வேலை தேடும் மக்களுக்குப் பலனளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏகப்பட்ட கெடுபிடிகள்; பிரச்சனைகள்; ஏற்பாட்டு நடவடிக்கைகள்; இதனை நேரடியாக கண்டும் உணர்ந்தும் அனுபவித்துக் கொண்டிருக்கும் எனக்கும் எந்த வகையில் தொடர்ந்து இந்த வலைப்பக்கம் செயல்படப்போகின்றது என்பதில் ஒரு ஆர்வம் இருக்கின்றது. சில தனியார்
நிறுவனங்களோடு சேர்ந்து எங்கள் நிறுவனமும் இதில் கணிசமான சேவையை நேரடியாக வழங்குவதால் தான் எனக்கும் கொஞ்சம் கூடுதல் ஆர்வம்.

பலமுறை பல்வேறு வகையான சோதனைகளைக் கணினிகளுக்கு வழங்கி சோதித்துப் பார்த்து விட்ட பிறகும் முதல் நாளன்றே ஏகப்பட்ட பிரச்சனைகள் பிறக்கத் தொடங்கி விட்டன. வேலையில்லாதவர்களுக்குப் பல நாள் காத்திருந்த ஆர்வம். வலைப்பக்கம் வந்து விட்டது என்று உள்நாட்டு செய்தி நிறுவனங்கள், பத்திரிக்கைகள் அனைத்தும் செய்திகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் போது பொது மக்கள் இந்த வலைப்பக்கத்திற்குச் செல்லாமல் இருப்பார்களா? எத்தனை நாட்கள் இந்த வசதிக்காக காத்திருந்திருப்பார்கள்?

முன்பெல்லாம் வேலை தேடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட நிலையத்திற்குச் சென்று அங்கு தங்கள் பெயர்களைப் பதிந்து கொண்டு அதன் பின்னர் அங்கேயே பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சில கணினிகளைக் கொண்டு தகவல் வங்கியில் வேலைகளைத் தேடுவர். இதற்கென்று தனியாக நேரமும் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் ஜெர்மனியில் வேலை தேடுபவர்களுக்கு இனிமேல் இந்த தொல்லையே இல்லை. உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் ஜெர்மனியில் வேலை தேடுவதற்கான வசதி இப்போது உருவாக்கப்பட்டு விட்டது.

மாலையாவதற்குள் வலைப்பக்கத்திற்கு சேவை வழங்கும் web server அதிகமான பயனீட்டைத் தாங்க முடியாமல் திக்கித் திணர ஆரம்பித்து விட்டது. மில்லியன் கணக்கில் மக்கள் வலைப்பக்கத்திற்குள் சென்று தங்கள் பெயரை பதிய முயலும் போது பாவம் அந்தக் கணினி; அதனால் என்ன செய்ய முடியும். இதைப் பலரும் சத்தியமாக எதிர்பார்க்க வில்லை. ஆனாலும் அதிவேக கணினி; பல புதிய தொழில் நுட்பங்களை தன்னுள்ளே கொண்ட கணினி. ஓரளவு சமாளிக்கவே செய்தது. அலுவலகத்தில் இன்று இது தான் எங்களுக்குப் பேச்சாகிப் போனது. எதிர்பார்த்ததை விட ஒரே நாளில் தகவல் வங்கி மிக மிக மிக பெரிதாக வளர்ந்து விட்டது ஒரே நாளில்.

ஜெர்மனியில் வேலையில்லா நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே தான் வருகின்றது. இந்த இணையத் தொடர்பினை வழங்கும் கணினி சேவை எந்த அளவிற்கு இந்த நிலையை எதிர்கொள்ள முடியும் என்பதை காலம் தான் சொல்ல முடியும்.!

Thursday, November 27, 2003

Job discrimination!

மக்களை தொழில் அடிப்படையில் வேறுபடுத்தி சிலரை தாழ்வாக மதிப்பிடுவதும் சிலரை உயர்ந்து மதிப்பிடுவதும் நமது ஆசிய நடைமுறையில் வழக்கமாகிப் போய்விட்ட ஒன்று. வீட்டில் வேலை செய்யும் பெண்ணையோ, கார் ஓட்டும் டிரைவரையோ சமமாக நாற்காலியில் உட்கார வைத்து பேசக்கூடத் தெரியாத மனிதாபிமானமற்ற சமுதாயமாக நமது சமுதாயம் இருக்கின்றது. யாராவது ஒருவரை தாழ்மைப் படுத்தியும், வேலை வாங்கியும் மகிழ்ச்சி அடையும் பழக்கம் நம் ஆசிய பண்பாட்டில் ஊறிப் போய்விட்டது.



ஜெர்மனியில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பமாக இருந்தாலும் சரி, வசதியான பணக்காரக் குடும்பமாக இருந்தாலும் சரி, வீட்டின் அனைத்து காரியத்தையுமே வீட்டில் உள்ளவர்கள் தான் செய்ய வேண்டும். வீட்டிற்குப் புதிதாகக் குடிபோகும் போது நாமே சுயமாக வீட்டிற்கு வர்ணம் பூச வேண்டும். தரைக்கு நாமே சுயமாக கம்பளம் ஒட்ட வேண்டும். அது தவிர மின்சாரக் கோளாறாக இருந்தாலும் தொலைபேசி கோளாறாக இருந்தாலும் சரி, அனைத்தையுமே நாமே சுயமாகச் செய்ய வேண்டும்.

இதையெல்லாம் செய்வதற்கே ஆள் இல்லையா எனக்கேட்கலாம். ஆட்கள் இருக்கின்றார்கள். ஆனால் இம்மாதிரியான உடல் உழைப்பு வேலைகளுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் என்பது மிக மிக அதிகம். உதாரணத்திற்கு, வீட்டிற்கு வர்ணம் பூசும் ஒருவருக்கு ஒரு பொறியியளாளருக்குக் கிடைக்கும் சம்பளத்தை விடவும் அதிகமான சம்பளம் கிடைக்கும். ஒரு டெக்னீஷியன் மெர்ஸ்டிஸ் பென்ஸ் கார் வாங்கும் அளவிற்கு சம்பாதிக்கும் நிலை இங்கு உள்ளது. இது நம்பமுடியாத கதையல்ல; உண்மை.

எல்லாவிதமான தொழிலுமே, மதிக்கத்தக்க ஒன்றுதான் என்ற நிலை இங்கு அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கப்படுகின்ற ஒன்று என்பது முற்றிலும் உண்மை. சமையலறையில் வேலை செய்யும் ஒரு பெண் அனைத்து சுதந்திரங்களோடும் பாகுபாடின்றியும் ஒரு பொறியியளாளரோடு ஒரு விருந்தில் கலந்து கொள்ள முடியும். தொழில் அடிப்படையில் பிரித்து வைத்து கௌரவக் குரைச்சலாக எடைபோடுவது இல்லை. மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கும் எண்ணம் என்பது மிக முக்கியமான அம்சம். நமது ஆசிய வாழ்க்கை முறையில் இது இன்றளவும் ஏட்டிலே தான் இருக்கின்றதே தவிர நடைமுறைப்படுத்தப்படவேயில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

Sunday, November 23, 2003

Privacy

கூட்டுக் குடும்பம் தேவையா; தனிக்குடித்தனம் தேவையா என்ற பட்டி மன்ற ஆராய்ச்சிகள் இன்னமும் நமது சமுதாயத்தில் ஒரு கேள்வியாகவே இருந்து கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் இந்த மாதிரியான கேள்விக்கு இடமே இல்லாத ஜெர்மானியர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்வது அவசியம் என நினைக்கின்றேன்.

ஏறக்குறைய 19 அல்லது 20 வயது அடையும் ஜெர்மானிய இளைஞர்கள் திருமணம் என்ற ஒரு நிலை வருவதற்கு முன்னரே தனிக்குடித்தனம் செல்ல ஆரம்பித்து விடுகின்றனர். ஜெர்மனியில் பல இடங்களில் 1 அறை கொண்ட அடுக்கு மாடி வீடுகள் அதிகமாகவே இருக்கின்றன. இங்கு வந்த புதிதில் இது எனக்கு ஒரு கேள்வியாகவே இருந்தது. (மலேசியாவில் 2 அறைக்கும் மேம்பட்ட வீடுகள் தான் கட்டப்படும்) பிறகு தான் தெரிந்து கொண்டேன் இந்த கேள்விக்கான பதிலை!

பல்கலைக் கழகத்திற்குச் செல்லும் போதே குழந்தைகள் பெற்றோர்களை விட்டுப் பிரிந்து தனியாக வீடு தேடிக்கொண்டு சென்று விடுகின்றனர். தனிப்பட்ட சுதந்திரம் என்பது மிக அவசியம் என்பதை அவர்கள் கட்டாயமாகக் கடைபிடிக்கின்றனர். குழந்தைகள் தங்களை விட்டுப்பிரிந்து தனியாக வீடுபார்த்துக் கொண்டு செல்வதைப் பற்றி பெற்றோர்கள் எந்தக் கவலையும் கொள்வதில்லை. மாறாக அதனை விரும்பி வரவேற்கின்றனர். இது சர்வ சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வாழ்க்கை முறையாகிவிட்டது. படிக்கின்ற காலம் தொட்டே ஒருவர் தனது சுய தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு பக்குவப்படுவது தேவை என இவர்கள் நினைக்கின்றனர். இதை நினைத்து எந்த பெற்றோரும் பச்சாதாபப்படுவதில்லை; வருத்தப்படுவதுமில்லை. குழந்தைகளின் தனிப்பட்ட வளர்ச்சியைக் கண்டு சந்தோஷப்படுபவர்களாகவே பெற்றோர்கள் இருக்கின்றனர்.

ஜெர்மானியர்களைப் பொறுத்த வரையில் ஒரு 25 வயது இளைஞனோ அல்லது யுவதியோ இன்னமும் பெற்றோர்களோடு ஒரே வீட்டில் தங்கியிருக்கின்றார்கள் என்றால் அது ஒரு வகையில் அவமானமாகவே கருதப்படுகின்றது. அப்படிக் கேள்விப்பட நேர்ந்தால் அதனை ஒரு ஹாஸ்யமாக்கி சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்கள்.

தனியாக இருக்கும் போதே இவர்கள் தனிக்குடித்தனம் போய்விடுகின்ற நிலையில் எங்கே மனைவி வந்துதான் தனிக்குடித்தனம் அமைக்க வேண்டும் என்ற நிலை வரப்போகின்றது???

Friday, November 21, 2003

பார்வை

ஆசியர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கின்றன. பொதுவாக வெள்ளையர்களைப் பற்றிய தவறான பல கருத்துக்கள் நமது மனங்களில் ஊறிப் போய் இருக்கின்றது. இவர்களோடு பழகும் போதுதான் அவர்களும் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் நம்மைப் போல பல வகையில் உயர்ந்தவர்களே என்பதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.

அபிப்ராயங்கள் என்பது யாராவது ஒருவர் சொல்லக் கேட்டோ அல்லது ஏற்கனவே இருக்கின்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டோ வருவது எனும் போது அதில் நூற்றுக்கு நூறு உண்மை இருப்பதில்லை. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். நான் ஜெர்மனி வருவதற்கு முன்னர், லண்டனில் சில ஆண்டுகள் தங்கியிருந்து திரும்பிய நண்பர் ஒருவர், "வெள்ளையர்களுக்குத் தேவாலயங்களுக்குச் சென்று வழிபடுவதில் ஆர்வம் இல்லை. இப்போதெல்லாம் தேவாலயங்கள் மற்ற மதத்தினரால் வாங்கப்பட்டு அவை வேறு சமயத்தினரின் வழிபடு இடமாக மாறி இருக்கின்றது" என்று கூறினார். அந்தக் கருத்து மனதில் பல நாட்கள் எனக்கு இருந்தது. ஜெர்மனி வந்து இங்குள்ள மக்கள் எந்த அளவுக்கு கிறிஸ்தவ மதத்தில் ஈடுபாடு கொண்டுள்ளனர் என்பதை நேராகப் பார்க்கும் போதுதான் அந்தக் கூற்றில் இருக்கும் பிழை தெரிய வந்தது. லண்டனுக்கு அந்தக் செய்தி உண்மையானதாக இருக்கலாம்; ஆனால் ஜெர்மனியைப் பொறுத்தவரையில் இதில் உண்மை இல்லை.

ஆக ஒரு செய்தியைக் கேட்கும் போது அதனை எல்லோருக்கும் பொதுவாக பயன்படுத்தி விட முடியாது. ஜெர்மனி முழுதுமே ஜெர்மன் மொழியைத் தான் பேசுகின்றனர். ஆனாலும் பகுதிக்குப் பகுதி மொழியில் வித்தியாசங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஜெர்மனியின் வடக்குப் பகுதியில் 'ஹோஹ் டோ ய்ச்' பேசுகின்றனர். பவேரியா பகுதிக்கு வந்தால் பவேரிய கலவையாக ஜெர்மன் மொழி வருகின்றது. ஷ்வாபியன் பகுதி, அதாவது நான் இருக்கும் பகுதியில் ஷ்வேபியன் ஜெர்மன் பேசுகின்றனர்; தமிழகத்தில், கொங்கு தமிழ், ஐயங்கார் தமிழ், செட்டி நாட்டுத் தமிழ் என்று இருப்பது போல. ஆக நாட்டிற்குள்ளேயே பேசப்படும் ஒரு மொழியிலேயே இம்மாதிரியான வேறுபாடுகள் இருக்கும் போது ஒரு கருத்தை பொதுக் கருத்தாக வைக்க முடியுமா?

ஜெர்மானியர்களோடு பழகும் நல்ல வாய்ப்பு எனக்கு அமைந்திருப்பதால் அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அதிகமாகவே தெரிந்து கொள்ள முடிகின்றது. அந்த வேறுபாடுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும் என நினைக்கின்றேன். அவற்றை ஒவ்வொன்றாக அடுத்தடுத்த குறிப்புக்களில் உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.

Thursday, November 20, 2003

Potato

போப்லிங்கன் நகரத்தின் அழகை மேம்படுத்துவதில் காய்கறித் தோட்டங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் குளிர் காலத்திலும் உருளைக் கிழங்குகள் பயிரடிப்பட்டு வருகின்றன. குளிர்காலத்திலும் உருளைக் கிழங்குச் செடிகள் அழகழகாய் வளர்ந்திருப்பது கண்ணுக்கு அதிக குளிர்ச்சி.



ஜெர்மானியர்களின் உணவுகளில் மிக முக்கிய பங்கு வகிப்பது உருளைகிழங்கு. உருளைக் கிழங்குகளை அடிப்படையாக வைத்தே முக்கியமான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. முழு உருளைக் கிழங்குகளை அவித்து அதனைக் கொஞ்சம் நெய்விட்டு வருத்து சாப்பிடுவது இவர்களுக்கு மிக மிகப் பிடித்தமான ஒன்று. அவித்த உருளைக்கிழங்கைப் பிசைந்து மாவாக்கி அதில் நெய்யும் பாலும் விட்டு கலந்து அதனை மற்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடுவது இன்னொரு வகை. இப்படி பலவகைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.




சென்ற வருடத்தோடு ஒப்பிடுகையில் இந்த வருடம் விளைச்சலுக்கு உகந்த வருடமாகவே படுகின்றது. சென்ற வருடம் பெருத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் அதனால் ஏற்பட்ட சேதங்கள் ஆகியவை நாட்டின் மொத்த காய்கறி விளைச்சளையும் பேரளவுக்குப் பாதித்திருந்தன. ஆனால் இந்த வருடம் இந்த சிரமம் இல்லை. பார்க்கின்ற இடமெல்லாம் இந்த ~5 டிகிரி (பகலில்) குளிரிலும் உருளைக் கிழங்கு போன்ற காய்வகைகள் பயிடப்படுகின்றன என்பது ஒரு செய்திதானே.



நானும் உருளைக்கிழங்கு செடியை வளர்த்துப் பார்ப்போமே என குளிர்சாதனப்பெட்டியில் இருந்த முளைத்த இரண்டு உருளைக் கிழங்குகளைஒரு தொட்டியில் நட்டு வைத்துப் பார்த்தேன். செடி உயரமாக வளர்ந்து இலை நிறம் மாறும் போதுதான் உருளைக்கிழங்குகள் வளர்ந்திருக்கும் என நண்பர்கள் சொல்லியிருந்ததால், எப்போது இலையின் நிறம் மாறும் எனக் காத்திருந்தேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஓரளவு இலைகள் பெரிதாகி மஞ்சள் நிறம் தென்படவும் ஆர்வம் பொறுக்காமல் செடியைப் பிடிங்கிப் பார்த்தேன். குட்டி குட்டியாக வட்ட வடிவத்தில் ஐந்தாறு உருளைக் கிழங்குகள். நட்டு வைத்து வளர்த்ததில் பலன் கிடைக்காமல் இல்லை!

Thursday, November 6, 2003

Tamil vs. English

அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்த ஒரு சம்பவம். புதிதாக எங்கள் குழுவில் இளம் ஜெர்மானியப் பெண் ஒருத்தி வேலையில் சேர்ந்திருக்கின்றாள். காலையில் வந்ததும் அவளுடைய உதவியாளர் இல்லாததைக் கண்டதும் என்னிடம் சில தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாமே என்று என்னிடம் வந்து பேச்சுக் கொடுத்தாள்.

ஜெர்மானியர்களே 99.9% விழுக்காடு வேலை செய்யும் இந்த நிறுவனத்தில் நான் ஒரு ஆசியன் இருந்த போதும் எந்த தயக்கமுமுன்றி எனக்குப் புரியுமா புரியாதா என்ற சிறு கவலையுமின்றி மிகச் சகஜமாக ஜெர்மானிய மொழியிலேயே பேசிக் கொண்டிருந்தாள். இவள் மட்டும் இப்படியில்லை. நான் பார்க்கும் ஏறக்குறைய அனைத்து ஜெர்மானியர்களுமே வேறு இனத்தைவர்களைப் பார்த்தால் கூட தங்கள் மொழியில் தான் பேசுகின்றனர். ஜெர்மனிக்கு வந்து விட்டால் ஜெர்மானியர் அல்லாத பிறரும் ஜெர்மன் மொழியில் தான் பேசவேண்டும்; பேசுவார்கள் என அவர்கள் எதிர்பார்க்கின்ரனர். தங்களுக்கும் தங்கள் மொழியின் மேல் பற்று; அதே பற்றை மற்றவர்களும் கொண்டிருக்க வேண்டும் என்றும் நினைக்கின்றனர்; அதுவும் எந்த தயக்கமுமின்றி நினைக்கின்றனர்.

நம்மை நாமே குறைத்துச் சொல்வதாக நினைக்க வேண்டாம். இதே நிலையில் ஒரு தமிழரை வைத்துக் கொள்வோம். தமிழ் மொழிக்கு தமிழர்கள் கொடுக்கும் மரியாதையை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பிற மொழியில் அதிலும் குறிப்பாக ஆங்கிலத்தில் பேசுவதுதான் நாகரிகம் என்ற மாயையில் தான் பெரும்பாலோர் இருக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நண்பரை சந்திக்க அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். தமிழகத்திலிருந்து ஜெர்மனிக்கு வந்து குடியேறிவிட்ட ஒரு குடும்பம். பேச்சு வாக்கில் குழந்தையின் பள்ளிக்கூடத்தில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றிய பேச்சு வந்தது. தமிழ் குழந்தையாக இருப்பதால் பள்ளியில் குழந்தையின் தாய்மொழியைப் பற்றிய விபரத்தைக் கேட்டிருக்கின்றனர். ஜெர்மானிய மொழி தாய்மொழியில்லை அல்லவா? குறிப்பேட்டில் தமிழ் என்றுதானே எழுதப்படவேண்டும். ஆனால் அந்த தாயார் குழந்தையிடம் உனது தாய்மொழி ஆங்கிலம்; அதனால் ஆங்கிலம் என்றே எழுது என்றார்.

என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்தச் செய்தி. தனது தாய்மொழியைப் பற்றி எழுதக் கூட கூச்சப்படும் சமுதாயத்தினர் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறது. தமிழ் எனது மொழி என்று சொல்லிக் கொள்வதில் மன வருத்தம் அடையும் கூட்டத்தினர் இவர்கள். ஆங்கிலம் தான் எங்கள் மொழி என்று சொல்லிக் கொள்ளும் இவர்களைப் போன்றவர்கள் தங்கள் முகத்தையும் நிறத்தையும் ஒரு முறைக்குப் பலமுறை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றே நினைக்கின்றேன். அதிலும் குறிப்பாக ஐரோப்பாவில் இருந்து கொண்டு தாய்மொழி பற்று வளரவில்லை என்றால் இம்மாதிரியானவர்கள் ஐரோப்பாவில் இருந்தும் நமது இனத்திற்கு மொழிக்கும் சற்றும் பயனில்லை.

Tuesday, November 4, 2003

Autumn



நாளுக்கு நாள் குளிர் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இலையுதிர்காலம் முடிந்து குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருப்பதன் அறிகுறிகளைக் காணமுடிகின்றது.

இயற்கையின் சீரான ஓட்டத்தை இந்த நான்கு காலங்களான குளிர்காலம், வசந்த காலம், இலையுதிர்காலம், கோடைகாலம் இவை நான்கும் எந்த மாறுதலும் இன்றி ஒழுங்காக வந்து கொண்டிருப்பதைக் கொண்டே உணர முடிகின்றது.

இயற்கையின் அதிசயத்தில் இதுவும் ஒன்று தானே. மரங்களெல்லாம் தீப்பிடித்து எறிவது போன்ற தோரணையில் வர்ணங்களெல்லாம் மாறி மஞ்சளாகவும், இளஞ்சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் மரங்களில் காட்சியளிக்கின்றன. இந்த இலைகளெல்லாம் மரங்களிலிருந்தும் கிளைகளிலிருந்தும் விழுவதற்கு ஏதுவாக ஏறக்குறைய தினமும் மழையும் பெய்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் இலைகளில்லா மரங்களின் கிளைகள் மட்டும் தான் கண்களுக்குத் தென்படும்.

அடுத்த ஏப்ரல் வரை மரங்களின் பச்சை இலைக்காகக் காத்திருக்க வேண்டும். பகல் நேரமும் குறைந்து கொண்டே வருகின்றது. இப்போதெல்லாம் காலை 8 மணிக்குத்தான் பகலின் வெளிச்சத்தைப் பார்க்க முடிகின்றது மாலை 6 மணிக்கெல்லாம் மாலை இருள் சூழ்ந்து விடுகின்றது.

இன்னும் கொஞ்ச நாளில் 5 மணிக்கெல்லாம் இருள் வந்துவிடும். வெளிச்சத்தையே பார்க்க முடியாமல் அலுவலகத்திலேயே பொழுதைக் கழிக்கும் நாட்களில் ஒரு நாள் முடிந்தது என்ற பிரக்ஞையே இல்லாமல் போய்விடுகின்ற நிலையும் எனக்குச் சென்ற வருடங்களில் ஏற்பட்டதுண்டு. காலம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இயற்கையும் யாருக்காகவும் தனது நியதியிலிருந்து மாறாமல் தனது கடமைகளைச் செய்து கொண்டே இருக்கின்றது!

Sunday, November 2, 2003

Vegetarian food

விடுமுறைக்கு மலேசியா திரும்பும் போதெல்லாம் நண்பர்கள் சிலர் கேலியாக என்னிடம் கேட்பதுண்டு. அசைவமாக மாறிவிட்டாயா என்று. "ஜெர்மனியில் என்ன சைவ உணவு உனக்குக் கிடைக்கப்போகின்றது? உணவு ஒரு பெரிய பிரச்சனை தானே," என்று நினைத்து என்னை கேள்வி மேல் கேள்வியாக கேட்பர். நான் ஜெர்மனிக்கு வருவதற்கு முன்னரும் இதைப் பற்றி யோசித்திருக்கின்றேன். முழுதாக ஐரோப்பிய உணவு என்பது எப்படியிருக்கும் என்ற ஒரு சிந்தனை இல்லாமலேயே வந்து இறங்கி விட்டாலும், இங்கு வந்த நாளிலிருந்து எனக்கு உணவைப் பொருத்தவரை எந்த பிரச்சனையும் இருந்ததில்லை.






நாள் செல்லச் செல்லத்தான் ஜெர்மனியில் பலர் சைவமாக இருக்கின்றனர் என்ற விஷயத்தையே தெரிந்து கொண்டேன். சைவமாக இருப்பவர்கள் எல்லாம் இலங்கையிலிருந்து இங்கு வந்திருக்கும் சைவர்கள் அல்ல. மாறாக, இங்கேயே பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் ஜெர்மானிய இளைஞர்கள் தான் என்பது தான் நான் தெரிந்து கொண்ட உண்மை. நான் பழகும் பல இலங்கைத் தமிழர்களில் பரம்பரை பரம்பரையாக இலங்கையில் சைவ சமயத்தையும் சைவ உணவு பழக்கத்தையும் கடைபிடித்து வந்தவர்கள் கூட இங்கு வந்த பின்னர் அசைவ உணவுக்காரர்களாக மாறி விட்டிருக்கின்றனர் என்பது தெரிய வந்தது. (எந்த உணவு வகை விருப்பமோ அதை அவரவர் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஒரு குறிப்புக்காகத் தான் இதனை எழுதுகிறேன்)

சைவ உணவு சாப்பிடும் ஜெர்மானியர்களில் சிலர் மிகக் கடுமையான சைவத்தைக் கடைபிடிக்கின்றனர். அவர்களில் vegan என்ற சைவ உணவு பழக்கம் உடையவர்கள் இறைச்சி மீன் இவற்றோடு பால் வகைகளையும் கூட தவிர்த்து விடுகின்றனர். இதனால், சீஸ், சாக்லெட் போன்றவற்றையும் கூட தவிர்க்கின்றனர். வெறும் காய்கறி, கிழங்கு தானிய வகைகளை பால் சேர்க்காமலேயே இவர்கள் சாப்பிடுகின்றனர்.




என்னைப் பொறுத்தவரை ஜெர்மனியில் சைவ உணவுக்காக நான் சிரமப்பட்டதே கிடையாது. எனது அலுவலகத்திலே இருக்கின்ற 3 உணவு விடுதிகளிலும் கட்டாயமாக ஒரு சைவ உணவு மெனு இருக்கும். வெறும் சாலட் மட்டுமல்ல; விதம் விதமான பாஸ்டா, ஆசிய உணவு வகை, பீஸா, விதம் விதமான உருளைக்கிழங்கு மெனு வகைகள் என சைவ உணவு மெனு தினமும் அசத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. (அதற்காக இட்லி, தோசை, வடை எல்லாம் கிடைக்குமா எனக் கேட்காதீர்கள் ) அதோடு எனது அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர்களில் பலர் சைவ உணவுகளை விரும்பியே வாங்கிச் சாப்பிடுகின்றனர்.

சைவ உணவுப் பழக்கம் என்பது ஒரு மதமோ அல்லது ஜாதியோ சம்பந்தப்பட்ட விஷயமல்ல. அது ஒரு வகை உணவுப் பழக்கம். சைவ உணவினால் உடலுக்கு நண்மையே என்னும் கருத்து அறிவியல் பூர்வமாக நாளுக்கு நாள் உலக மக்களிடையே பரவி வருகின்றது. நல்லது என்று தெரியும் போது அதனை அனைவரும் முடிந்த
அளவு கடைபிடிப்பதில் தவறில்லையே

Thursday, October 30, 2003

Child Prostituition

ஜெர்மனி செக் ஆகிய நாடுகளின் எல்லையில் விரிவாக வளர்ந்து வரும் விபச்சாரம் பற்றிய செய்திகள் சென்ற செவ்வாய் அன்று செய்திகளில் வெளியாகியது. பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றது இந்தச் செய்தி. பொதுவாகவே பலர் ப்ராக் (செக் நாட்டின் தலைநகரம்) செல்ல விரும்புவர். ப்ராக் மற்றும் செக் எல்லையில் பொருட்கள் மலிவாகக் கிடைக்கும். இதற்காக பல ஜெர்மானியர்கள் இங்கு செல்வதுண்டு. ஆனால் விபச்சாரத்திற்காகவும் ஜெர்மானியர்கள் இங்கு செல்கின்றனர் என்ற செய்தி கொஞ்சம் அதிர்ச்சியைத் தான் உருவாக்கியிருக்கின்றது.

மிகச் சிறிய, 8 வயதிற்கும் கீழான செக் குழந்தைகள் இந்த அவல நிலைக்குத் தங்கள் குடும்பத்தினராலேயே தள்ளப்படுகின்றனர். பெரும்பாலும் இந்தக் குழந்தைகளைப், பெற்றோர் அல்லது உறவினர் எல்லைப்புர சாலைகளில் வருகின்ற ஜெர்மானியர்களின் கார்களில் ஏற்றி விட்டுவிடுகின்றனராம். இந்தக் குழந்தைகளுக்கு 5 - 25 EUR வரை கொடுத்து விட்டு தங்கள் காரியம் முடிந்தவுடன் தப்பித்து விடிகின்றனர். இங்கேயும் இப்படிப்பட்ட அவல நிலையா என நினைக்கும் போது வேதனையாகத் தான் இருக்கின்றது.

ஜெர்மானிய செய்தி நிறுவனம் ஒன்று, கார்களில் வருபவர்களில் பெரும்பாலோர், பவேரியா மற்றும் சாக்ஸெனி பகுதிகளிலிருந்து வருகின்றனர் என்று ஜெர்மானிய வாகன எண்குறிப்பின் அடிப்படையில் சமூக நல ஊழியர்கள் கண்டு பிடித்திருப்பதாகத் தெரிவிக்கின்றது. மேலும், இந்தக் குழந்தைகள் பரவலாகக் கிழக்கு ஐரோப்பாவின் ஏழை நாடுகலிலிருந்து இங்கு அழைத்து வரப்படுவதாகவும் தெரிகின்றது.

UNICEF நிறுவனத்திற்காக சமூக சேவகி கேத்ரீன் இந்த அவலத்தைப் பற்றிய ஒரு அறிக்கையை எழுதி சமர்ப்பித்திருக்கின்றார். இந்த அறிக்கையின் அடைப்படையில் இப்போழுது செய்திகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. ஆனாலும் இந்த செய்தியை செக் நாடு மறுத்திருக்கின்றது.

எட்டு வயதே நிரம்பிய குழந்தைகள் சுயமாக தாங்களே பேரம் பேசி விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்களாம். வருமை மனித நேயத்தை எப்படியெல்லாம் கொல்கின்றது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

Tuesday, October 28, 2003

New Blog - Malaysia in Focus




நண்பர்களே,

மலேசிய நாட்டில் வாழும் தமிழர்கள், தமிழ் மொழியின் நிலை மற்றும் கலாச்சாரம், வாழ்க்கை முறை போன்ற பல தகவல்களைத் தொகுக்கும் வகையில் சிறப்பு வலைப்பூ ஒன்றினை அமைத்திருக்கின்றேன். இந்த வலைப்பூவை வாசித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

URL: http://subaillam.blogdrive.com

அன்புடன் - சுபா

Monday, October 27, 2003

%Insurance%


சேன்சலர் ஷ்ரூடரின் Agenda 2010 திட்டமானது அமுலுக்கு வர வாய்ப்பே இல்லை என கங்கணம் கட்டிக் கொண்டு சண்டைப் போட்டுக் கொண்டிருந்த அனைவரையும் அமைதியடையச் செய்ய வைக்கும் வகையில் இந்த திட்டத்தின் ஒரு அங்கமான சுகாதார திட்டத்தின் மறு சீரமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்டு விட்டது. கடந்த வெள்ளியன்று முழுமையாக இந்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட இந்த நிகழ்வு ஜெர்மனியின் சாதாரண மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.


இந்த திட்டம் அமுலாக்கம் செய்யப்படும் போது, தற்பொழுது 14.3 சதவிகிதமாக இருக்கும் பொது இன்சூரன்ஸ் கட்டணம் 13.6 சதவிகிதமாகக் அடுத்த ஆண்டில் குறைக்கப்பட்டு பின்னர் 2006ம் வாக்கில் 12.15 சதவிகிதமாகக் குறைக்கப்படும். இதன் வழி ஏறக்குறைய 20 பில்லியன் EUR சேமிக்கப்படும் என அரசாங்கம் நம்புகின்றது. ஆனாலும் இந்த திட்டத்தின் வழி சில சிரமங்களும் பொது மக்களுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. முன்பு மருத்துவமனை செலவு முழுவதுமே இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தலையில் விழுந்து விடும். ஆனால் இந்த திட்டம் வரும் போது, ஒரு சிறு பங்கினை நோயாளிகளும் ஏற்றுக் கொள்ளப்பட் வேண்டிய நிலை ஏற்படும்.

ஜெர்மனியில் ஒவ்வொரு நபரும் கட்டாயமாக சுகாதார இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டும். இந்த இன்சூரன்ஸின் அடிப்படையில் தான் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இன்சூரன்ஸ் இல்லாத பட்சத்தில் யாரும் மருத்துவ சேவையைப் பெறமுடியாது. பற்பல சங்கடங்களை அனுபவித்த பின்னர் ஆயிரக்கணக்கில் செலவு செய்து தான் மருத்துவ சேவைகளைப் பெற முடியும். இந்த நிலையை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மக்களிடம் பணத்தைக் கறந்து விடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் ஒரு கனிசமான தொகையை இன்சூரன்ஸுக்காக அழ வேண்டியது நிர்பந்தமாகி விட்டது. என்ன செய்வது??

Sunday, October 26, 2003

New entries in EU!

ஐரோப்பிய நாடுகளில் அவ்வளவாகப் பிரசித்தி பெறாத நாடுகளில் ஒன்றாக சில ஆண்டுகளுக்கு முன் வரை பெல்ஜியம் இருந்து வந்தது. European Union செயலகமாக அது தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரமாண்டமான பார்லிமண்ட் கட்டப்பட்டு, அதன் பின்னர் பற்பல அனைத்துலக அரசியல் திருப்புமுனை மாநாடுகள் நடத்தப்பட்டு வருவதால் இப்போது ஐரோப்பாவின் மிகப் பிரசித்தி பெற்ற நகரமாக Brussels உருவாகிவிட்டது.

சென்ற ஆண்டின் இறுதியில் டென்மார்க்கில் நடந்த ஒரு மாநாட்டில் இதுவரை இந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் சேராமல் இருக்கும் மேலும் 10 நாடுகளையும் உள்ளினைக்கும் வகையில் அவைகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இவற்றுள் பழைய கிழக்கு ஐரோப்பிய சோவியத் ஆட்சி நாடுகளும் அடங்கும். பொதுவாகவே ஏழை நாடுகளாக முத்திரை குத்தப்பட்டுள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மேற்கு ஐரோப்பிய பணக்கார நாடுகளின் 'பந்தா' நிறைந்த குழுவில் சேர்வதற்கான ஒரு அழைப்பு என்று சில பத்திரிக்கையாளர்களும் இதை வர்ணித்தனர். இந்த திட்டத்தின் வழி ஐரோப்பிய ஒன்றியத்தின் பரப்பானது அதன் எல்லையை வடக்கில் ரஷ்யா, மற்றும் கிழக்கில் உக்ரேன், தெற்கில் அரபு நாடுகள் வரை விரிவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்ட இந்த பத்து நாடுகள் எஸ்தோனியா, லாத்வியா, லிதுவானியா, ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, போலந்து, செக், ஸைப்ரஸ், ஹங்கேரி, மற்றும் மால்டா ஆகியவையே.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதன் வழி இந்த 10 நாடுகளும் பல்வகையான பொருளாதார முன்னேற்றத்தைக் காணமுடியும் என்பது உறுதி என்றாலும், அதில் இணைவதற்கான முன்னேற்பாடுகள் இவர்களுக்குப் பற்பல தலைவலியைத் தோற்றுவித்திருக்கின்றது என்றே சொல்லவேண்டும். பொதுவாக இந்தக் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கல்வித் தரம், சமுதாய மேம்பாடு, மற்றும் சுகாதார வசதிகள் போன்றவற்றில் இந்த நாடுகள் கட்டாயமாக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. இந்த பத்து நாடுகளுமே மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தினர் ஆவதற்கான முயற்சிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு என்பதை மறுக்கவே முடியாது. அதிலும் குறிப்பாக போலந்து அரசாங்கமும், அந்நாட்டு மக்களும் பல வகையில் தமது வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றதை ஏற்றுக் கொண்டு விட்டனர்.

ஸைப்ரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்குத் தயாராகத் தான் இருக்கின்றது. ஆனால் உள்நாட்டு பூசலின் காரணமாக சிறு தொய்வு ஏற்பட்டிருக்கின்றது இப்போது. இப்படி ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பிரச்சனைகளோடு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தாலும் வெகு விரைவில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளும் என்பதில் கொஞ்சமும் மாற்றமில்லை.

Saturday, October 25, 2003

தீபாவளி 2003

தீபாவளியை மலேசியாவில் கொண்டாடும் விதமே வேறு; இங்கு ஜெர்மனியில் கொண்டாடும் விதமும் வேறு. மலேசியாவில் தீபாவளி என்பது இந்தியர்களின் மிக முக்கிய பண்டிகை என்பதால் அதற்கு அரசாங்க விடுமுறை உண்டு. 1 மாதத்திற்கு முன்னரே ஆயத்த வேலைகளில் எல்லாரும் ஈடுபட்டு விடுவோம். புதிய உடை வாங்குவது, விதம் விதமான பலகாரங்கள் செய்வது, வீட்டு அலங்காரப் பொருட்கள் வாங்குவது என்பதெல்லாம் மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய வேலைகள். தீபாவளியன்று சீனர்கள் மலாய்க்காரர்கள் என, இன மத வேறு பாடின்றி அனைவரும் சந்தோஷமாக உண்டு களிக்கும் நாள் அது. ஆனால் இங்கு வேறுவிதம்.

அலுவல் நிமித்தமாக Basel(Swiss) செல்ல வேண்டிய கட்டாயம். தீபாவளி நாளான வெள்ளிக் கிழமை மதியம் தான் வீடு வந்து சேர்ந்தேன். முதல் நாள் நான் இருக்கும் போப்லிங்கன் நகரில் கடுமையான பணி பெய்திருக்கின்றது. என் வீட்டின் கூறைகள் மற்றும் கார் மேலெல்லாம் பணி கொடிக் கிடந்தது. இந்த 5 வருடங்களில் இதுதான் எனக்கு முதல் "பணி தீபாவளி".

மாலையில் Stuttgart விநாயகர் ஆலயத்தில் கலாச்சார நிகழ்ச்சிக்கான ஒரு ஏற்பாடு செய்திருந்தோம். ஆக எனது அலுவலகத்தில் புதிதாக ஓராண்டு பயிற்சிக்காக சேர்ந்திருக்கும் ஜமால் என்ற நண்பரையும் அழைத்துக் கொண்டு ஆலயத்திற்குப் புறப்பட்டேன். (குறிப்பு: இலங்கைத் தமிழர்கள் தீபாவளியை விமரிசையாகக் கொண்டாடுவதில்லை. அவர்களுக்குப் பொங்கல் தான் மிகச் சிறப்பான பண்டிகை) கலை நிகழ்ச்சியில் ஒரு கர்நாடக சங்கீத கச்சேரியும் பரத நாட்டிய நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கணினி துறையைச் சேர்ந்த பல தமிழ் நாட்டு இளைஞர்கள் இப்போது 1 அல்லது 2 வருட சிறப்பு அழைப்பின் பேரில் Bosch, Daimler போன்ற நிறுவனங்களுக்கு வருகின்றனர். இவர்களில் கர்நாடக இசையைப் பயின்றவர்களும் இருக்கின்றனர் என்பதால் இவர்களில் ஒருவரான திரு ரவி என்பவரை இந்த நிகழ்வைச் செய்து
தருமாறு கேட்டிருந்தோம். ரவி, 18 வருட சங்கீத அனுபவம் கொண்ட ஒரு இளைஞர். மிக அழகாக தமிழ் கீர்த்தனைகளைப் பாடினார். விநாயகனே வினை தீர்ப்பவனே என ஆரம்பித்து வைத்தார். இடையில் கல்யாண வசந்தாவில் ஒரு கன்னட விருத்தத்தையும் சேர்த்துக் கொண்டார். On demand, மேலும் குறையொன்றுமில்லை, சாந்தி நிலவ வேண்டும், சம்போ ஷிவ சம்போ போன்ற தமிழ் கீர்த்தனைகளையும் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.



ஜெர்மனியில் கர்நாடக சங்கீத நிகழ்வுகள் நடப்பது மிக மிக அரிது. வருடத்திற்கு 3 அல்லது நான்கு கச்சேரிகள் இந்த நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் நடந்து கொண்டிருக்கும். அவ்வளவுதான். ஆக இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது ஒரு வகையில் அதிர்ஷ்டம் தானே.




அதற்குப் பிறகு நடராஜ பதத்திற்கு சிறுவன் பிரசவன் அபிநயம் பிடித்து ஆடினான். சிறப்பாக இருந்தது அவனது நாட்டியம்.

மற்றொரு விஷேஷம் என்னவென்றால் இந்த தீபாவளி பூஜைக்கு ஆலயத்திற்கு இந்துக்கள் மட்டுமன்றி ஜெர்மானியர்களும், சிங்களத்தவர்களும், முஸ்லிம் தமிழ் நண்பர்களும் வந்திருந்ததுதான். பல்லின ஒற்றுமையைக் காட்டும் பண்டிகையாகவே இது மாறி இருந்தது. பல நாட்கள் சந்திக்காத நண்பர்களையெல்லாம் சந்தித்ததில் மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்க இல்லம் திரும்பும் போது மணி 12:30 ஆகிவிட்டிருந்தது.!

Tuesday, October 21, 2003

பனி தொடக்கம்..

சில நாட்களாக காலையில் எழுந்ததும் முதல் வேலையாக எனது அறையின் ஜன்னல் வழியாக வெளியே நிற்கும் எனது காரைப் பார்ப்பதுதான் எனது வேலையாகிப் போய்விட்டது. கார் காணாமல் போய்விடுமே என்ற பயம் ஒன்றுமில்லை. மாறாக கண்ணாடி முழுதும் பணியால் இருகிப் போயிருக்கின்றதா என்று பார்ப்பதற்க்காகத்தான். இன்றும் அப்படித்தான்; எழுந்ததும் ஓடிவந்து ஜன்னல் வழியாகப் பார்த்தால் ஒரே ஆச்சரியம். பனிமழை பெய்து கொண்டிருந்தது. இந்த winter -ன் முதல் பனிமழை இன்று ஆரம்பித்து விட்டது. மலைப்பாங்கான இடங்களில் ஏற்கனவே பனிமழை ஆரம்பித்து விட்டாலும் போப்லிங்கனில் இன்று தான் முதல் முறையாக கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பணியைப் பார்க்கின்றேன்.

தமிழ் சினிமா படங்களில் பனிமழையில் கதாநாயகனும் நாயகியும் ஓடியாடி விளையாடுவதைப் பார்த்து பனியென்றால் சுகமாக இருக்கும் என்று தப்புக் கனக்குப் போட்டிருந்தவர்களில் நானும் அடங்குவேன். இந்த மாயையெல்லாம் ஜெர்மனிக்கு வந்த சில மாதங்களிலேயே மறைந்து போய்விட்டன. பனியில் snow man
செய்து விளையாடுவதும் snow ball செய்து விளையாடுவதும் மகிழ்ச்சியான ஒன்றுதான். ஆனால் பனிக்காலத்தில் பனியினால் ஏற்படும் சிரமங்களை எண்ணிப்பார்க்கும் போது ஒரு வகையில் பயமாகத்தான் இருக்கின்றது.

நான் ஜெர்மனிக்கு வந்து 2 வாரங்கள் தான் இருக்கும். பல்கலைக்கழகத்தில் வகுப்புக்கள் ஆரம்பித்து விட்டன. அப்போது ஜனவரி மாதம். கடும் பனி பெய்யும் நேரம். அந்த நேரத்தில் நான் கீல் நகரில் இருந்தேன். அங்கு பொதுவாகவே நல்ல பனி பெய்யும். முதல் நாள் வெள்ளிக்கிழமை வகுப்பிற்குச் சென்றிருந்த போது பனி இல்லை. அதனால் பல்கலைக் கழகத்தின் மற்றொரு Campus இருக்குமிடத்திற்கு map வைத்துக் கொண்டு சுலபமாகச் சென்று சேர்ந்து விட்டேன். அடுத்த சில நாட்களில் பனி பெய்ய ஆரம்பித்து தரையெல்லாம் பனியால் மூடிக்கிடந்தது. வகுப்புக்குக் கிளம்பிய நான், முதல் நான் வெற்றிகரமாக வகுப்பிற்குச் சென்று விட்ட தைரியத்தில் எனது campus நோக்கி நடக்க ஆரம்பித்தேன். முதல் நான் சென்றபொழுது அடையாளத்திற்காக சில இடங்களை (landmark) ஞாபகம் வைத்திருந்தேன். அதன் அடிப்படையில் தேடிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.




டக்கின்றேன்.... நடக்கின்றேன்.... நடந்து கொண்டே இருக்கின்றேனே தவிர பல்கலைக்கழக campus வரவேயில்லை. பனி மூடிவிட்டதால் பல சாலைகள் அடையாளமே தெரியவில்லை. எல்லா இடங்களும் மாறிப்போய் காட்சி அளிக்கின்றன. வெகுதூரம் நடந்திருப்பேன். கண்டிப்பாக வழியை விட்டிருப்பேன் என்று தெரிந்ததும் சாலையில் நடந்து கொண்டிருந்தவர்களை அனுகி ஆங்கிலத்தில் கேட்டால் அவர்களுக்கு சுத்தமாக ஆங்கிலமே தெரியவில்லை. மனதைத் தளரவிடாமல் நடந்து கொண்டே இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக பயம் வர ஆரம்பித்து விட்டது. கண்களில் கண்ணீர் வர துடைத்துக் கொண்டே மேலும் நடந்து கொண்டேயிருந்தேன். மேலும் சிலரை அனுகிக் கேட்கலாம் என தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு இளைஞனிடம் கேட்டேன். என்னிடம் அந்த campus வரைபடமும் இருந்ததால் அதையும் காட்டி அவனிடம் ஆங்கிலத்தில் கேட்க ஓரளவு அவனுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பஸ் எடுத்துச் செல்லுமாறு கூறினான். அதுமட்டுமலாமல் என்னோடு சிறிது நேரம் இருந்து, சரியான பஸ்ஸில் என்னை ஏற்றிவிட்டு , ஓட்டுநரிடம் என்னை குறிப்பிட்ட campus இருக்கும் இடத்தில் இறக்கி விடுமாறும் கேட்டுக் கொண்டான். உதவும் உள்ளம் படைத்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கத்தான் செய்கின்றார்கள்..இல்லையா!

இந்தப் பனியால் இந்த மாதிரி சிரமங்கள் மட்டுமல்ல.. மேலும் பல இருக்கின்றன..!

Sunday, October 19, 2003

Germany's Economy and Structural reform!

ஜெர்மனியின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே போகின்றனவே அன்றி குறைந்தபாடில்லை. வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே செல்கின்றது; குழந்தைகள் பிறப்பு சதவிகிதம் மிகக் குறைந்து வருகின்றது; இவையெல்லாம் நாட்டின் சேன்சலர் கெர்ஹாட் ஷ்ரூடருக்குத் தொடர்ந்து இருந்து வரும் தலைவலிகள். இவற்றோடு குறைந்த வருவாய் தரும் வேலைகள் மற்ரும் சம்பள உயர்வின்மை போன்ற பல காரணங்கள் அரசாங்கம் தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகளின் பட்டியலில் சேர்ந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் சேர்த்து Euro zone-னின் மிகக் குறைந்த வளர்ச்சியைக் காட்டும் நாடாக தற்போது ஜெர்மனியை ஆக்கியுள்ளன.


இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வதற்கான ஒரு உபாயமாக ஸ்ரூடர் 'Agenda 2010' என்ற ஒரு திட்டத்தை வெளியிட்டிருந்தார். இதன் அடிப்படையில் சில குறிப்புக்களை நான் எனது ஜூலை மாத வலைக்குறிப்புக்களில் அலசியிருந்தேன். இந்த புதிய திட்டத்தின் வழி தற்போது இயங்கி வரும் சமூக இலவச சேவைகள், மற்றும் அளவுக்கு மீறிய சலுகைகள் போன்றவற்றை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றனதீவை, இந்த இலையுதிர்காலத்தில் பார்லிமெண்டில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.


பொதுமக்கள், இந்த திட்டத்தின் வழி ஜெர்மனியின் தற்போதைய அரசாங்கம்
அமுல்படுத்தவிருக்கும் மாற்றங்களுக்காக காத்திருக்கின்றனர். புதுவருடத்தில் இந்த திட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. இதன் வழி ஜெர்மனியின் பொருளாதரம் மிகத் துரித வளர்ச்சியைக் காண முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

அரசாங்கம் எடுத்திருக்கும் புதிய திட்டங்களைப் பற்றிய விபரங்களை நாளைத் தருகிறேன்..

Friday, October 3, 2003

Germany reunification day!

இன்று ஜெர்மனியில் விடுமுறை. கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் 1991ம் ஆண்டு அக்டோ பர் 3ம் தேதி ஒன்றாக இணைந்ததை நினைவு கூறி மகிழும் நாள் இது. ஜெர்மனி முழுதுமாக இந்த விடுமுறை நாள் அளிக்கப்படுகின்றது.

ஜெர்மானியர்களில் அதிலும் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு வகையில் இது விடுதலை கிடைத்த ஒரு நாள் என்றே சொல்ல வேண்டும். ஜெர்மானியர்களைப் பிரித்திருந்த பெர்லின் சுவர் இந்த நாளில் இடிக்கப்பட்டது. இரண்டு ஜெர்மனியும் ஒன்றிணைந்ததனால் கிழக்கு ஜெர்மனியில் இருந்த மக்கள் பலரால் மேற்கு ஜெர்மனிக்கு சுலபமாக வர முடிந்தது. இங்குள்ள வேலை வாய்ப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றோடு சுதந்திரக் காற்றையும் சுவாசிக்க முடிந்தது.

இன்றளவும் இந்த இரண்டு ஜெர்மனிக்கும் உள்ள வேறு பாட்டினை ஓரளவு காணமுடியும். மக்களின் சிந்தனை ஓட்டம் வாழ்க்கை முறை ஆகியவற்றில் இந்த இரண்டு ஜெர்மனியிலும் இருந்து வருகின்ற மக்களிடம் குறிப்பிடத்தக்க வித்தியாசங்களைக் காணமுடியும். கல்வி தொழில் எனப் பல பொருளாதார அடிப்படையிலான காரணங்களை முன் வைத்து இவர்கள் இப்போது கலந்து விட்டாலும், சிந்தனையில் இருக்கின்ற வேறு பாட்டினை வைத்துப் பார்க்கும் போது இவர்கள் பெரும்பாலும் தங்களை தனித்துக் கொள்ள அதாவது கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள், அல்லது மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு பெருமைப் படத்தான் செய்கின்றனர்.

Tuesday, July 22, 2003

ப்ளம்ஸ்

இளம் வயதில் எங்கள் வீட்டுக்கு அருகில் (பினாங்கில்) சிறிய காட்டுப்பகுதி ஒன்று இருந்தது. அங்கே முந்திரி மரங்களும் புளிய மரங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். நான் எனது பள்ளி நண்பர்களோடு அங்கு விளையாடச் செல்வதுண்டு. எனது நண்பர்களில் சிலர் நன்றாக மரம் ஏறுவார்கள். எனக்கும் ஆசைதான்; ஆனால் முயற்சி செய்து செய்து கீழே விழுவதால் அந்த முயற்சியை சுத்தமாக கைவிட்டு விட்டேன். ஆனால் நண்பர்கள் மரம் ஏறி பழங்கள் பறித்துப் போட அதை ரசித்துச் சாப்பிட்டு மகிழ்ந்தது மிக சுவாரசியாமான ஒரு விஷயம்.

நேற்று எனது நண்பி ஒருவருடன் நான் வசிக்கும் போப்லிங்கன் நகரத்து ஏறிக்கரைக்கு வேலை முடிந்து காற்று வாங்கச் சென்றிருந்தேன். பேசிக்கொண்டே வந்து குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு வந்து அமர்ந்தோம். அவளது குழந்தைகளை விளையாட விட்டு விட்டு பேசிக் கொண்டிருக்கையில் ஒரு 40 வயத்கு மதிக்கத்தக்க குர்டிஸ் இனத்துப் பெண்மணி ஒருத்தி எங்களை கொஞ்சம் பயம் கலந்த பார்வையோடு பார்த்து சிரித்தார். மீண்டும் மீண்டும் அவர் அப்படி மிரட்சியோடு எங்களைப் பார்ப்பதும் பக்கத்தில் இருக்கும் மரங்களைப் பார்ப்பதுமாக இருப்பதைக் கவனித்த எனக்கு ஏதோ ஒன்று அங்கு நடக்கின்றது என்று தோன்றியது. உற்று கவனிக்க, அங்கிருக்கும் ப்ளம்ஸ் மரத்தின் மேல் யாரோ ஒருவர் ஏறி பழங்கள் பறித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. மரத்தைக் குலுக்க குலுக்க நிறைய ப்ளம்ஸ் பழங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுவதைக் காண முடிந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படிப்பட்ட ஒரு காட்சி. அதுவும் ஜெர்மனி வந்து சேர்ந்த இந்த நான்கு ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்க்க முடிந்தது.

ஒரு பொது இடத்தில் இருக்கின்ற பழ மரங்களிலிருந்து ஜெர்மானிய மக்கள் பழங்களைப் பறித்து இதுவரை நான் பார்த்ததில்லை. மரங்களில் உள்ள அப்பழங்கள் அப்படியே வீணாகித் தரைம் போது மரத்தின் மேல் இருந்த அந்தச் சிறுவன் கீழிறங்குவது தெரிந்தது. நன்றாக பார்த்தால் அது ஒரு பெண். அதுவும் 30 அல்லது 35 வயது மதிக்கத்தக்க பெண். இதைப் பார்த்த எனக்கு ஒரே ஆச்சரியம். எவ்வளவு தைரியமாக ஒரு பொது இடத்தில், மரத்தில் ஏறி இவள் பழம் பறித்துப் போடுகின்றாளே என்று! கீழே இறங்கிய உடனே இரண்டு பெண்மனிகளுமாகச் சேர்ந்து எல்லா பழங்களையும் ஒரு துணிப்பைக்குள் அவசர அவசரமாக எடுத்து திணிக்க ஆரம்பித்து விட்டனர்.

உடனே எனது தோழியிடம் இதைப்பற்றி கேட்க அவள் இது அவ்வப்போது சகஜமாக இங்கு நடக்கும் விஷயம் தான் என்றாள். மேலும், இந்த இடம் பொது மக்களுக்காக உள்ள ஒன்று என்றாலும் மாலை ஆறு மணிக்கு மேல் இங்கு ஜெர்மானியர்கள் வருவதில்லை. அவர்கள் பொதுவாக மதிய வேளைகளில் தான் இங்கு வருவர். 6 மணிக்கு மேல் இங்கு அதிகமாக துருக்கிய இனத்தவரும் குர்டிஸ் இனத்தவரும் தான் நிறைந்திருப்பர். அதனால் இவர்களுக்க்கு அவ்வளவாக பயம் இருப்பதில்லை என்றாள். இதுவும் ஒரு ஆச்சரியமான ஒரு தகவலாகவே எனக்குப் பட்டது. பொதுவாக ஜெர்மனியில் பார்க்கும் போது இனவேறுபாடு என்ற ஒன்று இருப்பதைக் காண முடிவதில்லை. ஆனாலும் மறைமுகமாக பல இடங்களின் மக்களின் தனித்துவம் வேறுபட்டு வெளிப்படுவதைக் காணத்தான் முடிகின்றது.

வருமானம் (வரி)

உலக பொருளாதார நிலையில் மந்தம் என்பது தொடர்ந்தவாறே இருக்கின்றது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகிய ஜெர்மனியின் பொருளாதாரம் மிக மிக மோசமாகிக் கொண்டிருப்பது தற்போதைய உண்மை. ஐரோப்பிய உறுப்பிய நாடுகளிலேயே பணக்கார நாடுகளில் ஒன்றான ஜெர்மனி கடந்த ஆண்டின் மிகக் குறைந்த பொருளதார வளர்ச்சியை கண்டிருப்பது இங்குள்ள அரசியல் நிலையை அதிகமாகவே பாதிக்கத் தான் செய்துள்ளது..!

பல திட்டங்கள் பல மாற்றங்கள் என்று அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதில் மிக மிக சந்தோஷமான ஒரு அறிவிப்பு என்று இப்பொழுது இந்த நாட்டில் பல மூலைகளிலும் மக்கள் பேச ஆரம்பித்திருக்கும் விஷயம் வருமான வரியைப் பற்றியதைத்தான். ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் வருமான வரி என்பது எறக்குறை 50% என்பது அனைவரும் அறிந்தது. ஐரோப்பாவில் சம்பளம் அதிகம் என்றாலும் இந்த மிகக் கூடிய வருமான வரியைக் கட்டி கையில் மிஞ்சுவது வருமானத்தில் பாதியே. DM-லிருந்து EURO மாற்றம் வந்ததிலிருந்து (2001) விலை வாசி உயர்ந்து வருவதையும் மக்கள் உணர்த்தவர்களாகவே இருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு தனி நபர் வரிமான வரியை 46% லிருந்து 10% அதாவது 36%க்கு குறைக்கும் முடிவைப்பற்றியும் அதனை 2004 ஆரம்பத்திலிருந்து அமுலுக்குக் கொண்டுவருவதைப்பற்றியும் அரசாங்கமும் அதிபர் ஷ்ரூடரும் பேச ஆரம்பித்திருப்பது சந்தோஷமான விஷயமாகத் தான் இருக்கின்றது.

இது உண்மையிலேயே சாத்தியப்படுமா; சொல்வதைப்போல அடுத்த வருட ஆரம்பத்தில் அமுலுக்கு வருமா? என்ற சந்தேத்தை விட மற்றோரு சந்தேகம் மக்கள் மனதில். ஜெர்மானிய நண்பர்கள் பலரும், அதுவும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளவர்கள் இந்த மாற்றத்தைக் கேள்விப்பட்டு அவ்வளவாக திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை. காரணம் என்னவென்றால், குடும்பம் குழந்தைகள் உள்ளவர்கள் தற்போது ஏறக்குறைய 18% - 27% வரையிலான வருமான வரியைத்தான் செலுத்துகின்றனர். ஆகவே இந்த மாற்றம் ஓரளவே இவர்களுக்கு உதவ முடியும். ஆனால் வருமான வரி குறைகின்ற அதே வேளையில் பொருட்களின் விலையோடு கூடுகின்ற VAT (Value added Tax) நிச்சயம் உயரும் என்பது இவர்களின் கணிப்பு. அதிலும் முக்கியமாக எண்ணெய் விலை அதிகரிப்பதை யாரும் தடுக்க முடியாது எனபதையும் மறுப்பதற்கில்லை. ஆக மக்களின் பொருளாதாரத்தைச் சீர்செய்ய அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகள் மற்ற பின் விளைவுகளையும் சேர்த்துக் கொண்டே வருவதைத் தான் பார்க்க முடிகின்றது.

Monday, July 21, 2003

விடுமுறைக்கு இத்தாலி

ஜெர்மனியில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில். இரவு பத்து மணி வரை சூரியன் மறைவதில்லை. பகல் நீண்ட நேரமாக இருப்பதால் நிறைய காரியங்கள் செய்ய முடிகின்றது. குளிர்காலத்தில் மதியம் 5 மணிக்கெல்லாம் சூரியன் மறைந்து விடுவதைப் பார்த்து புலம்பிக் கொண்டிருந்த எனக்கு இப்போது பெரிய மகிழ்ச்சி. ஆனாலும் வெயிலின் கடுமையும் பாதிக்கத்தான் செய்கின்றது. காலை 5 மணிக்கெல்லாம் விடிந்து விடுகின்றது.

ஜெர்மானியர்கள் பொதுவாக இந்த நேரத்தில்தான் விடுமுறையைத் திட்டமிடுகின்றனர். வடக்குப் பகுதியைத்தவிர மற்ற பகுதிகளில் கடற்கரை இல்லாததால் பெரும்பாலும் ப்ரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்று விடுமுறையைக் கழிப்பது பழகிப்போன விஷயம். அதிலும் இந்த வருடம் வெயில் மிகக் கடுமையாக இருப்பதால் பலரும் இத்தாலியக் கடற்கரைகளை முற்றுகையிட்டுவிட்டனர்.

இந்த செய்தி அறிந்த இத்தாலிய அமைச்சர் ஒருவர் ஜெர்மானியர்கள் படையெடுத்து தங்கள் கடற்கறையை சூழ்ந்து கொள்வது பார்க்க மிக மோசமாக இருக்கின்றது என்று பத்திரிக்கையில் வர்ணிக்க, தனது விடுமுறையை இத்தாலியில் கழிக்க திட்டமிட்டிருந்த ஜெர்மானிய சான்சலர் ஷ்ரூடர் (அதிபர்) பயணத்தை ரத்து செய்து விட்டார். அந்த அமைச்சர் மன்னிப்புக் கேட்காத வரை தான் விடுமுறைக்காக இத்தாலி செல்லப்போவதில்லை என்று உறுதியெடுத்து ஜெர்மனியிலேயே இப்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார் என்றும் தகவல். ஆனால் முறையற்று பேசிய அந்த இத்தாலிய அமைச்சர் தான் எந்த தவறும் செய்யவில்லை; ஆகவே மன்னிப்புக் கேட்க முடியாது என்று கூறி விட்டார்.

ஆனால் இதையெல்லாம் பற்றி மக்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இத்தாலியர்களைக் கேட்டால், ஜெர்மானியர்கள் வருவது தங்களுக்கு பெரிய வருவாயைத் தருகின்றது என்று கூறுகின்றனர். ஜெர்மானியர்களும் வருந்தியதாகத் தெரியவில்லை. ஓய்வைக் கழிப்பதிலேயே முழுமனதோடு ஈடுபட்டு சந்தோஷித்திருக்கின்றனர். அவரவர்களுக்கு அவரவர் வேலை...