Monday, April 16, 2012

ஈஸ்டர் பண்டிகை ஏற்பாடுகள்


நண்பர்களே,

வருகின்ற வெள்ளிக்கிழமை உலகம் முழுதும் உள்ள கிறிஸ்துவ சமயத்தைப் பேணும் நண்பர்கள் புனித வெள்ளி கொண்டாட உள்ளனர். இங்கு ஜெர்மனியில் இதனை ஒட்டி எப்போதும் வெள்ளிக்கிழமையும் அதனை அடுத்து அவரும் திங்கள் கிழமையும் நாடு முழுவதும் பொது விடுமுறையாகக் கொண்டாடப்படுகின்றது.

புனித வெள்ளிக்குத் தேவாலயத்திற்குச் சென்று மக்கள் வழிபடுவது ஒரு புறமிருக்க அந்த நான்கு நாட்கள் குடும்பத்தினர் ஒன்று கூடி மகிழ்ச்சியுடன் இருக்கும் ஒரு விழாவாக கொண்டாடப்படுவதையே இங்கு நான் பார்க்கின்றேன். பொதுவாகவே கிற்ஸ்மஸ் போல இங்கே ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன்னரே சிறிய அங்காடிக் கடைகள் போடப்பட்டு பரிசுப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை நாம் காண முடியும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரிசுப் பொருட்களைச் சேகரிப்பது இக்கால கட்டத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம்.

குழந்தைகள் என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு இந்த நான்கு நாட்களுமே கொண்டாட்டமாகத்தான் இருக்கும். பல வர்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட முட்டைகளை கடைகளில் காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்திருப்பதைக் காணலாம். உணவு விடுதிகளில் சாப்பிட்டு விட்டு புறப்படும் போது தட்டில் ஒரு வர்ணம் பூசிய அவித்த முட்டையை வைத்துத் தருவார்கள். இதுவும் ஒரு வழக்கம். அதிலும் குறிப்பாக ஜெர்மானிய மற்றும் கிரேக்க பழமையான உணவகங்களில் இந்த நடைமுறை வழக்கில் இருப்பதை நான் அனுபவப்பூர்வமாகப் பார்த்திருக்கின்றேன்.

ஞாயிற்றுக் கிழமை தான் கொண்டாட்டம் மிகுந்த நாள். அன்று வர்ணம் பூசிய முட்டைகளைச் செடிகளுக்கும் புதர்களுக்குள்ளும் மறைத்து வைத்து விடுவார்கள் பெற்றோர்கள். இந்த முட்டைகளை ஈஸ்டர் முயல்கள் ஒளித்து வைத்துள்ளன என்று சொல்லி அவற்றை கண்டுபிடிக்கச் சொல்வர் பெற்றோர். குழந்தைகள் இந்த முட்டைகளை தேடி கண்டு பிடித்துக் கொண்டு வர வேண்டும். முட்டை வேட்டை என்பது இந்த பண்டிகையின் போது மிக முக்கியமாக அதிலும் குழந்தைகள் இருக்கின்ற குடும்பங்களில் தவிர்க்க முடியாத ஒரு அங்கம்.

புனித வெள்ளி அன்று பெரும்பாலான கிறிஸ்துவர்கள் அதிலும் பழமையான கலாச்சாரத்தை உறுதியாகப் பின்பற்றுபவர்கள் மதிய உணவில் மீன் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். விதம் விதமான மீன் சமையல் உணவு அன்று உணவங்களில் பிரத்தியேகமாக தயாரிக்கப்படும்.

Frohe Ostern (ஃப்ரோ ஓஸ்டர்ன்) Happy Ester என்று நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நாளில் மக்கள் வாழ்த்துப் பரிமாறிக் கொள்வர். வெள்ளியிலிருந்து திங்கள் மாலை வரை இந்த வாழ்த்துப் பரிமாற்றம் இருக்கும். தேவாலயங்களில் சனிக்கிழமை மாலை பெரிய அளவில் அதிலும் கத்தோலிக்க தேவாலயங்களில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பூஜைகள் (mass prayer) ஞாயிற்றுக் கிழமை காலை வரை நடைபெறும். Ostersonntag - ஈஸ்டர் ஞாயிறு அன்று குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி மதிய உணவு சேர்ந்து உண்பது சிறப்பான ஒரு வழக்கம்.

Osterhase  (ஈஸ்டர் முயல்) இந்த பண்டிகையில் சிறப்பு அங்கமாக இருக்கின்றது. அதே போல ஈஸ்டர் மரமும் ஒரு சிறப்பு அங்கமே. ஈஸ்டர் மரம் என்பது ஏதாவது ஒரு மரத்திலோ அல்லது செடியிலோ வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்ட  முட்டைகளைக் கட்டி தொங்கவிட்டு வைப்பது. ஆக இந்த இரண்டு அங்கங்களும் குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக செய்யப்படுபவையாகக் கருதப்பட்டாலும் ஏறக்குரைய எல்லா இல்லங்களிலும் இந்த நாளின் போது செயற்கை (ப்ளாஸ்டிக்) முட்டைகள் கட்டி அலங்கரிக்கப்பட மரங்களைக் காண்பது சகஜம்.

இன்று மதியம் எங்கள் தெருவில் உள்ள அங்காடிக்கடைக்குச் சென்றபோது அங்கு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு செய்யபப்ட்டிருந்த அலங்காரக் காட்சிகள் சிலவற்றை புகைபப்டம் எடுத்தேன்.  அவை இங்கே..



ஈஸ்டர் முயல்கள் பலகாரங்கள் தயாரிக்கின்றன..





ஈஸ்டர் முயல் (முழுதும் சாப்பிடக்கூடியது)



முட்டைகளை அலங்கரிக்கும் ஈஸ்டர் முயல்



ஈஸ்டர் முட்டைக்கு வர்ணம் பூசும் இரு ஈஸ்டர் முயல்கள்



ஈஸ்டர் மரங்களை அலங்கரிக்கும் ஈஸ்டர் முயல்கள்




ஈஸ்டர் வாழ்த்து சொல்லும் முட்டையை தயாரித்து விட்டன இந்த ஈஸ்டர் முயல்கள்



குழந்தைகளை மகிழ்விக்க பொம்மை விளையாட்டு

கதை சொல்லும் பொம்மை...!


அன்புடன்
சுபா

Monday, April 2, 2012

2012ம் ஆண்டு.. மீண்டும் தக்காளி சோதனை




சீதோஷ்ணம் தற்சமயம் ஏறக்குரை 15 டிகிரியிலிருந்து -1 வரை சென்று கொண்டிருக்கின்றது. ஆனாலும் சில நாட்கள் அவ்வப்போது 18 டிகிரி வரை எட்டிப் பார்த்துச் செல்கின்றது. செடிகள் விற்கும் நர்செரிகளில் இப்போதே காய்கறிச் செடிகளும் வந்து விட்டன. தக்காளி, நீளமான வெள்ளரிக்காய் செடி குள்ளமான வெள்ளரிக்காய் செடி, மூலிகைச் செடிகள் போன்றவை சென்ற வாரமே சந்தைக்கு வந்து விட்டன.

நான் பொதுவாக மே மாத நடுவில் தான் காய்கறிச் செடிகள் வாங்குவது வழக்கம். பூச்செடிகள் வாங்கச் சென்ற நான் 4 தக்காளிகளும் இன்னும் சில காய்கறிச் செடிகளும் வாங்கி வந்து நட்டுவைத்திருக்கின்றேன்.

தக்காளியில் இம்முறை 2 செடிகள் சாதாரண தக்காளி வகையைச் சார்ந்தவை தேர்ந்தெடுத்தேன். அடுத்து Pflaumen Cherrytomate (Plum cherry Tomato)  San Marzano Tomate   என இரண்டு புதிய வகை தக்காளிச் செடிகளையும் வாங்கி நட்டு வைத்திருக்கின்றேன். இவை பிழைத்து காய் காய்க்கும் போது தான் எப்படி காட்சி அளிக்கப்போகின்றன என்று தெரியும்.




மலேசியாவில் வருஷம் முழுதும்தக்காளிச் செடிகளை எப்போது வேண்டுமானாலும் பயிரிடலாம். வருடம் முழுதும் கிடைக்கும் நல்ல வெயில் இருப்பதால் எல்லா மாதங்களும் தக்களிச் செடி நட்டு வைக்க முடிகின்றது. இங்கே குளிர் காலத்தை கட்டாயம் தவிர்த்தே ஆக வேண்டிய நிலை உள்ளது.

மேலும் 2 வகை செடிகளை வாங்கி வந்து நட்டுள்ளேன். அவற்றைப் பற்றி அடுத்த பதிவில்...!

சுபா... என் தோட்டத்திலிருந்து!.


Sunday, April 1, 2012

மாண்டல் (பாதாம்) பூக்கள் திருவிழா

திருவிழாக்களில் தான் எத்தனை வகை?

சென்ற வாரம்  சிற்றூரானா கிம்மல்டிங்கன் நகரில் நடக்கும் ஒரு சாலைத் திருவிழாவிற்குச் செல்வோம் என புறப்பட்டோம். பொதுவாக ஒரு ஸ்ட்ரீட் பார்ட்டி என்றால் அந்த ஊரின் பெயரோடு இணைந்து திருவிழாவின் பெயர் அழைக்கப்படும் இந்த சாலைத் திருவிழாவைச் சற்று வித்தியாசமாக டோய்ச் மொழியில் Gimmeldingen Mandelblütenfest என்று அழைக்கின்றனர். மாண்டல் என்று டோய்ச் மொழியில் குறிப்பிடப்படுவது பாதாம் பருப்பு.


மாண்டல் மலர்கள்

பாதாம் மரங்கள் ரைன் நதிக் கரையை ஒட்டிய அழகிய நகரமான நோய்ஸ்டாட் வைன் ஸ்ட்ராஸ பகுதியின் அருகில் இருக்கும் ஒரு சிற்றூர் தான் கிம்மல்டிங்கன். சற்று மலைப்பாங்கான நகரம். ஜெர்மனியின் மிக முக்கிய வைன் தயாரிப்பு நகரங்களில் ஒன்று நோய்ஸ்டாட். ஜெர்மனிக்குச் சுற்றிப் பார்க்க வருபவர்கள் இந்தத் திராட்சை தோட்டங்களைப் பார்த்து மனதைப் பறிகொடுப்பர் என்பது உண்மை. கொள்ளை அழகைத் தாங்கி நிற்கும் இந்தச் சற்று மலைப்பாங்கான பகுதியின் அருகில் தான் கிம்மல்டிங்கன் நகரம் உள்ளது.




ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா இது. பாதாம் மரங்கள் இளம் சிவப்பு மலர்களைத் தாங்கி நிற்கும் அழகே அழகு. இவற்றைப் பார்த்துக் கொண்டே மலைகளில் ஏறிச் சென்று திருவிழாவில் விற்கப்படும் பொருட்களைப் பார்த்துக் கொண்டும் உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிடுவதும் மனதைக் கவரும் அம்சங்கள். இவ்வகை சாலை திருவிழாக்களை ரசிக்கக் காத்திருக்கும் ஜெர்மானியர்களுக்கு ஜெர்மன் பியர்களை ருசிப்பதற்கும் கரி உர்ஸ்ட், சாப்பிடுவதற்கும் நண்பர்களோடு பேசி மகிழ்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு.



விக்கிபீடியாவில் உள்ள செய்தியின்படி இந்த கிம்மல்டிங்கன் பாதாம் திருவிழா 1934ல் தான் முதன் முதலாகத் தொடங்கப்பட்டதாம். இடையில் இரண்டாம் உலகப்போரின் காரணமாக சில ஆண்டுகள் இத்திருவிழா தடைபட்டாலும் மீண்டும் இவ்விழா தொடர்ந்து நடைபெற ஆரம்பித்து இப்போது ஆண்டுத் திருவிழாவாக அமைந்துள்ளது.



இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத்திருவிழா சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இங்குள்ள ப்ரோட்டஸ்டெண்ட் தேவாலாயத்தில் தொடங்கப்படும். சனிக்கிழமை முடிந்து பின்னர் ஞாயிற்றுக் கிழமை மாலை வரை கடைகள் போடப்பட்டு விற்பனைகள நடைபெறுவதோடு இசை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெறும்.


வலது புறத்தில் தேவாலயம்

மரங்களையும் பூக்களையும் ரசித்ததோடு நான் spinatknoedel என்ற ஒரு வகை உணவை வாங்கி ருசிபார்த்தேன். இது கீரையை உடைந்த ரொட்டியுடன் சேர்த்து உருண்டையாக்கி தயாரிக்கபப்ட ஒரு வகை உணவு. அத்துடன் காரட் இஞ்சி கலந்த ஒரு சூப்பும் சாப்பிட்டேன். வித்தியாசமான சுவையில் அமைந்த உணவு வகை. அதற்குப் பின்னர் டம்ப்நூடல் எனப்படும் ஒரு வகை இனிப்புப் பலகாரத்தையும் வாங்கி அனைவரும் சுவைத்தோம். இது பார்ப்பதற்கு இட்லி போல இருக்கும். இதனை வனிலா சாஸுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம் அல்லது வைன் சாஸுடன் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.


டம்ப்நூடல்



நாட்டியமாடும் தோரணையில் ஒரு மாண்டல் மரம்


அழகான மதியம், அருமையான உணவு, உள்ளதைக் கொள்ளைக் கொழில் இயற்கைச் சூழல் - இவற்றை ரசித்து மாலையில் வீடு திரும்பினேன்.


சுபா



மாண்டல் பூக்களைப் போன்ற இனிப்புக்கள்






சுபா