Wednesday, July 28, 2021

உண்டெரூல்டிங்கன்(ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிருப்பு - 2


வீடுகளைக் கட்டி குடியிருப்புகளை உருவாக்க எப்போது மனித குலம் தனது முயற்சியைத் தொடங்கியது என நம் எல்லோருக்குமே எப்போதாவது மனதில் கேள்விகள் எழுந்திருக்கும், அல்லவா?
கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழாய்வுகள் வெளிப்படுத்திய, நாம் அறிந்த தமிழ்நாட்டு அகழாய்வுகள் போல உலகின் ஏனைய பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகளையும் தெரிந்து கொள்வோமே. இது ஒப்பாய்வுகளுக்கு உதவும் என்பதோடு பொதுவாகவே ஹோமோ சேப்பியன்களான இந்த மனித குலத்தின் வாழ்விடங்கள் உருவாக்கல் என்ற பொது குணத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் உதவும் அல்லவா?
ஜெர்மனியின் உண்டெரூல்டிங்கன் பகுதியில் ஏறக்குறைய பொ.ஆ.மு 3917 ஆண்டு காலகட்டம் வாக்கில் உருவாக்கப்பட்ட வீடுகளின் மாதிரிகள் இங்கு உள்ள மிக முக்கிய காட்சிப் பொருள்களாக அமைகின்றன. காலவரிசைப்படி ஒவ்வொரு வீடுகளும் முன்னர் இப்பகுதியில் மக்கள் அமைத்த வீடுகளின் தொல் படிமங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் மாதிரிகளாக இங்கே உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் முதலில் வருவது ஹோர்ன்ஸ்டாட் வீடு (Hornstaat Haus).
இந்த வகை வீடுகள் இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுப் பணியின்போது ஏரிக்கு மிக ஆழமான பகுதிகளில் கிடைத்துள்ளன. அடிப்படையில் ஒரு அறை மட்டும் கொண்ட மரத்தாலும் குச்சிகளும் கட்டப்பட்ட வீடுகள். இவ்வகை வீடுகள் கட்டப்பட்ட காலமாக பொ.ஆ.மு. 3917 ஆம் ஆண்டு என ஆய்வாளர்கள் நிகழ்த்திய கரிம ஆய்வுகளின் வழி உறுதி செய்கின்றார்கள். இந்த வகை வீடுகளின் தொல் படிமங்கள் 1980ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை கான்ஸ்டன்ஸ் ஏரிக்கரையில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை. இந்த அகழ்வாய்வை பாடன் ஊர்ட்டன்பெர்க் மாநிலத்து வரலாற்று சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பு (State office of Historic Monuments) நிகழ்த்தியது.
இந்த வீடுகளை உருவாக்க பயன்படுத்தப்பட்ட மரத் தூண்கள் 4 - 9 மீட்டர் உயரம் கொண்டவை. சுவர்கள் களிமண்ணால் பூசப்பட்டு மேற்கூரைகள் ரீட் கானரி வகைப் புற்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு மாதிரியாக வைக்கப்பட்டுள்ள இந்த வீடு 1996 ஆம் ஆண்டு முதலில் உருவாக்கப்பட்டு அதன் பின்னர் மீண்டும் 2011 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
.
பொ.ஆ.மு. 3900 எனும்போது இன்றைக்கு ஏறக்குறைய 6000 ஆண்டுகால பழமையான தொல் எச்சங்கள் என்பதை அறிய முடிகின்றது. ஐரோப்பாவில் தொல் மனிதர்கள் வாழ்ந்த பல இடங்கள் பற்றிய செய்திகள் இன்று நமக்கு கிடைக்கின்றன. அந்த வகையில் இந்தப் பகுதியில் கிடைத்திருக்கின்ற இந்த குடியிருப்புகளின் எச்சங்கள் நமக்கு இப்பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் நீண்ட கழிகளையும், களிமண், மற்றும் புல் சருகுகளையும் கொண்டு வீடுகளைக் கட்டும் திறன்களையும் கொண்டிருந்தனர் என்பதையும், ஓரிடத்தில் தங்கி வாழ்வது, உணவுகளைச் சேகரிப்பது என்ற பழக்கங்களையும் கொண்டிருந்தனர் என்பதையும் இந்த அகழாய்வுச் செய்தி உலகுக்கு வெளிப்படுத்தியது.
அடுத்த பதிவில் இங்கு கிடைத்த மேலும் சில தொல்பொருட்கள் பற்றிய செய்திகளைப் பகிர்கிறேன்.


ஹோர்ன்ஸ்டாட் வீடு (Hornstaat Haus)


ஹோர்ன்ஸ்டாட் வீடு (Hornstaat Haus)

ஹோர்ன்ஸ்டாட் வீடு (Hornstaat Haus)

தொடரும்..
சுபா

Sunday, July 25, 2021

உண்டெரூல்டிங்கன்(ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிறுப்பு - 1

உலகம் முழுவதும் இன்று தொல்லியல் கள ஆய்வுகள் என்பது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்ற ஒரு துறையாக வளர்ந்து வருகின்றது. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், பொருந்தல், அழகன்குளம், கீழடி போன்ற இடங்களில் நடைபெறுகின்ற அகழாய்வுகள் பற்றிய செய்திகள் இன்று பத்திரிகை செய்திகள் அல்லது ஆய்வாளர்களின் அறிக்கைகள் என்ற எல்லையைக் கடந்து பொது மக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் தனிநபர் ஆய்வுகளாகவு,ம் பதிவுகளாகவும் பேஸ்புக், வாட்ஸ் அப் ட்விட்டர் பதிவுகளாக இக்காலத்தில் வெளிவருகின்றன.

தமிழ்நாட்டு தொல்லியல் செய்திகளை அறிந்து கொள்கின்ற அதேவேளை தமிழ்நாட்டிற்கு வெளியே நடைபெறுகின்ற, அல்லது நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகள் மனித குலத்தின் தொன்மை பற்றிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகின்றது. இத்தகைய அறிவு உலகளாவிய அளவில் மனித குலத்தின் தோற்றம், வளர்ச்சி, மற்றும் நிலைத்தன்மை, போராட்டங்கள், வெற்றி, அரசு உருவாக்கம், இடப்பெயர்வு, புலம்பெயர்வு என்கின்ற பல்வேறு மனிதகுல அசைவுகளை பற்றி அறிந்துகொள்வதில் தெளிவைத் தருவதாக அமையும்.
தொல்லியல் ஆய்வுகளை மிக நீண்டகலமாக, செயல்படுத்தி வரும் நாடுகளில் ஒன்று ஜெர்மனி. ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள் பல்வேறு அருங்காட்சியகங்களிலும், பல்கலைக்கழக ஆய்வுக் கூடங்களிலும், கண்காட்சி பகுதிகளிலும் மட்டுமன்றி அகழாய்வுகள் நடத்தப்பட்ட பகுதிகளிலேயே அருங்காட்சியகங்களாக அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களைக் கொண்டது ஜெர்மனி. ஒவ்வொரு பெரிய நகரமாகட்டும், சிறு நகரமாகட்டும், கிராமம் ஆகட்டும்... எல்லா பகுதிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இந்தப் பதிவு கற்கால மனிதர்களின் குடியிருப்பு ஒன்றினை பற்றியது.

Pfahlbaumuseum Unteruhldingen - உண்டெரூல்டிங்கன் கற்கால மனிதர்கள் குடியிருப்புகள் அருங்காட்சியகம் ஜெர்மனியின் கொன்ஸ்டன்ஸ் ஏரிக்கு அருகே உள்ளது.

இன்று உலகளாவிய வகையில் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் 111 கற்கால மனிதர்களின் குடியிருப்புகளில் ஒன்றாகவும் இது அமைகிறது.
ஜெர்மனிக்கு தெற்கிலும், சுவிசர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகளுக்கும் அருகிலேயும் உள்ளது இப்பகுதி. 1853-1854 ஆகிய காலகட்டத்தில் இந்த ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களது வலைகள் அடிக்கடி தண்ணீருக்கு அடியில் மாட்டி கிழிந்து போனதை அவர்கள் அன்றைய நகர அதிகாரிகளிடம் தெரிவிக்க அவர்கள் கடலுக்கடியில் ஆய்வு செய்யும் சிலரை அனுப்பி சோதனை செய்த போது இது மிகப்பெரிய ஒரு கண்டுபிடிப்பாக அமையும் என யாரும் முதலில் எதிர்பார்க்கவில்லை. வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மனித குல வாழ்விடப் பகுதிகளுள் ஒன்றாக இப்பகுதி இருந்தது என்பதும் அவர்கள் வாழ்வியல் கூறுகள் தொடர்பான ஏராளமான தொல்பொருட்கள் இங்கு கிடைத்ததும் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தன.

இங்கு அகழாய்வை நிகழ்த்திய குழுவில் இடம்பெற்றவர்களுள் ஒருவர் ஃபெர்டினன் கெல்லர். இவரே இப்பகுதிக்கு 'Pile Dwelling' என பெயரிட்டு தனது ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

அடுத்து இங்கு மக்கள் வாழ்ந்த கி.மு 3000 கால அளவிலான வீடுகள், இங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பற்றி தினம் சில குறிப்புகளாக வழங்குகின்றேன்.

உண்டெரூல்டிங்கன்(ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிறுப்பு அருங்காட்சியகத்திற்கு நேற்று சனிக்கிழமை 24.7.2021 சென்றிருந்த போது பதிந்த காட்சி.


ஏரிக்கு அடிப்பகுதியில் கடலில் புதையுண்ட மக்கள் வாழ்விடப் பகுதி.

ஃபெர்டினன் கெல்லர்

முகப்புப் பகுதியில் பயணம் தொடங்கும் இடம்.


தொடரும்..
-சுபா

Monday, June 28, 2021

மூன்சன் தமிழ்ப்பள்ளி - நூல் அறிமுகம்

 ஜெர்மனியின் தெற்கு மாநிலமான பவேரியாவின் தலைநகரான மூன்சன் நகரம் ஜெர்மனியின் பொருள்வளமிக்க ஒரு நகரம். இங்கு ஏராளமான உலகளாவிய தொழிற்கூடங்களும் ஆயுவு நிலையங்களும் இருக்கின்றன. இலங்கையிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் வந்த தமிழ் மக்கள் இங்கு கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். இங்கு சில வார இறுதி தமிழ்ப்பள்ளிக்கூடங்களும் இயங்கி வருகின்றன.


மூன்சென் தமிழ்ப்பள்ளி (ஜெர்மனி) மாணவர்களைக் கடந்த சனிக்கிழமை சந்தித்து அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சியளிக்கின்றது. 31 மாணவர்கள் இந்தத் தமிழ்ப்பள்ளியில் பயில்கின்றனர். எனது கீழடி-வைகை நாகரிகம் நூலை அவர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியை இந்தப் பள்ளியின் அமைப்பாளர் தம்பி சத்தியமூர்த்தியும் ஏனைய ஆசிரியர்களும் ஏற்பாடு செய்திருந்தனர். குழந்தைகள் பாவாடை சட்டை, வேட்டி எனத் தமிழ் பண்பாட்டு உடைகளுடன் வந்திருந்தனர். அழகான காட்சியாக இது இருந்தது.

நூல் அறிமுகத்துக்குப் பின்னர் மாணவர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் வந்து நூலை எனது கையெழுத்துடன் பெற்றுக் கொண்டு சென்றனர். அதன் பின்னர் அவர்களாகவே சுயமாகச் சிந்தித்து என்னிடம் சில கேள்விகளையும் எழுப்பினர். பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்து கேட்காமல் அவர்களே சுயமாக எழுப்பியக் கேள்விகள். தமிழ் மொழியிலேயே மாணவர்கள் உரையாடினர் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
குறிப்பு : குழந்தைகளின் முகத்துடனான புகைப்படங்களைப் பொது வெளியில் பகிரக்கூடாது என்ற சட்டம் இருப்பதால் முழுமையான புகைப்படங்களை இங்கு நான் பகிரவில்லை.








நூலைப் பெற விரும்புவோர் பயில் பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது கீழ்க்காணும் பக்கத்திலும் ஆர்டர் செய்து பெறலாம். https://www.commonfolks.in/.../d/keezhadi-vaigai-naagarigam

-சுபா