Saturday, May 28, 2022

135 மில்லியன் யூரோவிற்கு ஒரு கார்

 



ஏலத்தில் வருகின்ற பொருட்களைப் பற்றி கேள்விபட்டிருப்போம். அண்மையில் ஜெர்மனியில் ஏலம் விடப்பட்ட ஒரு 1955 Mercedes Coupe 300 SLR மாடல் இதுவரை ஒரு கார் ஏலத்தில் விடப்பட்ட அனைத்து ரெக்கார்டுகளையும் முறியடித்துள்ளது.

135 மில்லியன் யூரோவிற்கு இதனை ஒருவர் ஏலத்தில் எடுத்திருக்கின்றார். இந்தத் தொகையை நினைத்தாலே தலை சுற்றுகிறது. 🙂
இந்த வாகனம் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சேகரிப்பில் இருந்தது. இதில் இரண்டு வாகனங்கள் மட்டுமே இருந்த நிலையில் அதில் ஒன்றை ஏலத்திற்கு விடுவதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. ஏலத் தொகையில் வருகின்ற பணத்தை கொண்டு இளம் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை மற்றும் ஆய்வுப் பணிகள் ஆகியவற்றில் மாணவர்களுக்குப் பொருள் உதவி செய்வதற்காக என mercedes-benz நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதனை ஏலத்தில் எடுத்தவரது பெயர் பற்றி அந்த அமைப்பு எந்தத் தகவலும் வெளியிடவில்லை. அதனை ஏலத்தில் எடுத்த நபர் இந்தக் காரை சிறப்பு நிகழ்ச்சிகளில் இப்போது இருக்கும் அதே mercedes-benz அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜெர்மனியில் பணியில் நான் வசிக்கும் பாடன் ஊர்டெம்பெர்க் மாநிலத்தில்தான் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அருங்காட்சியகம் இருக்கிறது. புகைப் படத்தில் காட்டப்படும் காரைப் போல மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தொடக்கம் முதல் வெளியிட்ட அத்தனை வகை கார்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
-சுபா

Friday, May 27, 2022

சார்லமெக்னே விருது - 2022

பெலாரஸ் நாட்டின் எதிர்கட்சி தலைவர் சுவெட்லேனா திக்கானோஸ்கயா, ஜனநாயகச் சார்பு மனித உரிமை செயற்பாட்டாளர் வெரோனிக்கா ஸெப்காலோ, மரியா காலெனிகாவா ஆகிய மூவருக்கும் ஜெர்மனியின் மிக உயரிய விருதான சார்லமெக்னே விருது வழங்கப்பட்டுள்ளது.

இதில் சுவெட்லேனா திக்கானோஸ்கயா, வெரோனிக்கா ஸெப்காலோ, இருவரும் பெலாரசில் அவர்கள் மனித உரிமை போராட்டத்திற்காக நாடு கடத்தப்பட்டவர்கள் என்பதும், மரியா காலெனிகாவா தற்சமயம் சிறையில் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மரியாவிற்காக அவரது சார்பில் அவரது சகோதரி இந்தப் பரிசை பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் - `நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம்` என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மேலும் அறிய..
Belarusian opposition leader Svetlana Tikhanovskaya and pro-democracy activists Veronica Tsepkalo and Maria Kalesnikava have been honoured in Germany with the Charlemagne Prize.
The award, the oldest and best-known of its kind with a history going back to 1950, is awarded each year in the city of Aachen and recognises work to foster and further European unity.
Both Tikhanovskaya and Tsepkalo are living in exile, while the third laureate Maria Kalesnikava, is imprisoned in Belarus and was represented by her sister.
In an address at the ceremony on Thursday, German Foreign Minister Annalena Baerbock told the recipients: "We stand by your side... we hear you, and we have not forgotten you."

https://www.euronews.com/2022/05/26/tikhanovskaya-and-belarusian-activists-receive-europe-s-top-honour-for-services-to-unity?fbclid=IwAR3evEVtns79sr30Sd08e6qeavqldpGIgoNhiXd37rcZWc1_DCjfKb1qyPo

Wednesday, May 25, 2022

திருமதி கோசல்யா

 ஜெர்மனியில் தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த திருமதி கோசல்யா அவர்கள் 23.5.2022 அன்று காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைகின்றேன். ஜெர்மனியில் அவரது இலக்கியப் பங்களிப்பும் செயல்பாடுகளும் என்றும் அனைவராலும் போற்றப்படும்.

அவருக்கு எனது அஞ்சலிகள்.
அவர் கணவர் இறந்த சில நாட்களில் அலுவலகப் பணிக்காக நான் டூசல்டோர்ஃப் சென்றிருந்த போது அருகாமை ஊரில் இருந்த அவரது இல்லம் சென்றிருந்தேன். அடையாளம் தெரியாத வகையில் உடல் இளைத்து சோர்ந்திருந்தார்.
அப்போது தனியாக ஃபேஸ்புக் கணக்கு ஒன்று தொடங்கி அவரை தொடர்ந்து எழுதச் சொன்னேன். முன்பு போல இயல்பாக நிகழ்வுகளுக்குச் சென்று வாருங்கள் எனக் கூறினேன்.
கணவரை இழந்த வலி ஒருபுறம் - சுற்றத்தாரின் செயல்கள் ஏற்படுத்தும் வலி ஒரு புறம் என வருந்தியவருக்கு ஒரு கடிதம் ஃபேஸ்புக் வழியாக எழுதினேன் - அவரைச் சுற்றி உள்ளவர்களும் வாசிக்கவேண்டும் என்பதற்காக.
அதனை கீழே மீள்பதிவாகப் பதிகிறேன்
---
17.6.2016
கோசல்யாவிற்கு ஒரு கடிதம்!!
அன்பு கோசல்யா,
துன்பங்களும் இன்பங்களும் மாறி மாறித்தான் நம் வாழ்க்கையில் அமைகின்றன . துன்பத்திலேயே மிக கொடுமையானது இறப்பினால் ஒருவரை இழப்பது. இறந்தவர் உணர ஏதுமில்லை; ஆனால் அவரோடு அன்போடு பழகியோருக்கு அது தொடரும் வேதனையே.

இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது, வாழ்க்கையில் ஒவ்வொரு நாள் செல்லும் போதும் பலவற்றை இழக்கின்றோம். பலரது மரணங்கள், முற்றுப்புள்ளியை விரும்பாது ஓடிக்கொண்டிருக்கும் மனத்தை இழுத்துப் பிடித்து, நின்று நம்மை இறப்பை பற்றி யோசிக்க வைக்கின்றது.

பிரிவோ அல்லது மரணமோ நடந்து விட்டால் - அது மீட்க முடியாதது. வாழ்க்கை அத்துடன் நின்று விடவில்லை. வாழ்க்கையில் பல பரிமாணங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் செய்வதற்கு பல கடமைகள் இருக்கின்றன. அவை தொடரப்பட வேண்டும். பிரிந்தோரை நினைத்து ஒடிந்து உட்கார்ந்து வேதனைப்படுவதால் இறந்தோர் மீண்டு வரப்போவதில்லை.

நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கை நமக்கு இந்தப்பாடத்தை உணர்த்திக் கொண்டே இருக்கின்றது. புதிய உயிர்கள் தோன்றுகின்றன, வளர்கின்றன. இருக்கும் உயிர்கள் மறைகின்றன. அதே போல சில உறவுகள் முறிகின்றன. புதிதாய் உறவுகள் முளைக்கின்றன.

மாற்றத்தை யோசித்து சரியாக வடிவமைத்து ஏற்றுக் கொள்வது காலத்தின் கட்டாயம்.

உங்கள் நிலையில் இழப்பை மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது மிக அவசியம். இணையராக இணைந்தே பல காலங்கள் பல நடவடிக்கைகள் செய்து விட்டு இன்று தனியாகச் செய்ய வேண்டுமே என யோசிக்கும் போது மனம் பதைக்கலாம். நம்மைச் சூழ்ந்திருக்கும் தமிழ் மக்கள் எப்படி வரவேற்பார்கள் என யோசிக்கலாம்.

ஏன் பொட்டு வைக்கின்றாய்?
தாலிபோடுகின்றாளே .. எனக் கேட்போரை ஒதுக்கி விட்டு மனதிற்குத் தோன்றுவதை விரும்புவதைச் செய்க!

மகிழ்ச்சியான காலத்தில் ஓடி வந்து உறவை நாடும் நண்பர்கள் இக்கட்டான இச்சூழலில் ஒரு முறையும் வந்து பார்த்து ஆறுதல் வார்த்தைச் சொல்ல முடியாதவர்களாகத் தன்னைக் காட்டிக் கொண்டால், அந்த நட்பின் நம்பகத்தன்மையை உணர்ந்து கொள்க!
நட்பு என்பது துன்ப காலத்தில் துணை இருக்கும் போது தான் வெளிப்பட வேண்டும். இன்ப நேரத்தில் சேர்ந்து மகிழ்ந்திருக்க மட்டுமல்ல! ஆக ,சரியான நட்பை விழிப்புடன் தேர்ந்தெடுத்து உங்கள் தமிழ்க்கல்விப்பணிகள் அனைத்தும் எந்தத் தொய்வும் இல்லாமல் தொடர வேண்டும். இதுவே உங்கள் துணைவரின் விருப்பமாகவும் இருக்கும்.
நீங்கள் கொடுத்த கற்பூரவல்லிச் செடியை நட்டுள்ளேன். அது உயிர்பெர்று வளரும். கிளைவிடும் பெரிதாகும். நம்பிக்கை இருக்கின்றது!
நான் நினைக்கின்றேன்.. இங்கே ஜெர்மனியில் நீங்கள் செய்ய வேண்டிய கல்விப்பணி நிறையவே உள்ளது. நல்ல ஆசிரியருக்கு ஓய்வு என்பது கிடையாது அல்லவா!
நீங்கள் நல்ல தமிழ் ஆசிரியர். தமிழ்ப்பணியை மகிழ்ச்சியுடனும் நிறைந்த உற்சாகத்துடனும் புதுப்பொலிவுடனும் மீண்டும் தொடர்க. நல்ல நட்புக்களின் ஆதரவுடன்!



அன்புடன்
சுபா

Tuesday, May 24, 2022

ஜெர்மனியில் அணு ஆலைகள் மூடப்படும் நிலை


தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஷிய-உக்ரேன் போரினால் ஐரோப்பாவில் எரிவாயு சக்தி பற்றாக்குறை நிலவுகின்றது என்பதை அறிந்திருப்போம். ஜெர்மனியின் பொருளாதாரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதற்காகப் பொதுமக்கள் நலன் சார்ந்த சில திட்டங்களை ஜெர்மனி அரசு திட்டமிட்டு வருகின்றது. அந்த வகையில் 3 மாதங்களுக்கு வரி குறைக்கப்பட்ட பெட்ரோல்-டீசல், 3 மாதங்களுக்குக் குறைக்கப்பட்ட பொதுப்பயணக் கட்டணம் என்பவை அவற்றுள் சில.
எரிவாயு சக்தி பற்றாக்குறை எழுந்த போதும் கூட அணு ஆலைகளை முடக்கும் ஜெர்மனியின் திட்டம் தொடர்கின்றது. மாற்று சக்தியாக காற்று, நீர் வழி மின்சாரம் உற்பத்தி அதிகரிக்கும் செயல்பாடுகள் நடக்கின்றன.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் மேலும் 3 அணு ஆலைகள் ஜெர்மனியில் திட்டமிட்டபடியே மூடப்பட்டன. அவை Brokdorf, Schleswig-Holstein மாநிலத்தில், Grohnde, Lower Saxony மாநிலத்தில், மற்றும் Unit C, Gundremmingen, Bavaria மாநிலத்தில்.
மேலும் 3 அணு ஆலைகள் மட்டுமே உபயோகத்தில் உள்ளன. அதில் ஒன்று நான் வாழும் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்திலும் இருக்கின்றது. இவை மூன்றுமே இவ்வாண்டு இறுதியில் மூடப்படும்.
ஃபுக்குஷிமா அணு ஆலை வெடிப்பு ஏற்படுத்திய பேரிடருக்கு அடுத்து அன்றைய ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் படி ஜெர்மனியில் உள்ள அணு ஆலைகள் 2022 வாக்கில் முழுவதும் மூடப்படும் என அரசு அறிவித்திருந்தது.
2022 இறுதி அணு ஆலைகள் அற்ற ஐரோப்பிய நாடாக ஜெர்மனி புதிய பரிணாமம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
-சுபா
24.5.2022
https://www.iamexpat.de/expat-info/german-expat-news/germany-closes-three-its-last-six-remaining-nuclear-power-plants?fbclid=IwAR0EdzWZWLPk_qJdWuUFCJlaeSpWFePsBC3G9TIdN9vTyJ2l1h2x4jk5Vkk