Tuesday, July 22, 2003

ப்ளம்ஸ்

இளம் வயதில் எங்கள் வீட்டுக்கு அருகில் (பினாங்கில்) சிறிய காட்டுப்பகுதி ஒன்று இருந்தது. அங்கே முந்திரி மரங்களும் புளிய மரங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். நான் எனது பள்ளி நண்பர்களோடு அங்கு விளையாடச் செல்வதுண்டு. எனது நண்பர்களில் சிலர் நன்றாக மரம் ஏறுவார்கள். எனக்கும் ஆசைதான்; ஆனால் முயற்சி செய்து செய்து கீழே விழுவதால் அந்த முயற்சியை சுத்தமாக கைவிட்டு விட்டேன். ஆனால் நண்பர்கள் மரம் ஏறி பழங்கள் பறித்துப் போட அதை ரசித்துச் சாப்பிட்டு மகிழ்ந்தது மிக சுவாரசியாமான ஒரு விஷயம்.

நேற்று எனது நண்பி ஒருவருடன் நான் வசிக்கும் போப்லிங்கன் நகரத்து ஏறிக்கரைக்கு வேலை முடிந்து காற்று வாங்கச் சென்றிருந்தேன். பேசிக்கொண்டே வந்து குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு வந்து அமர்ந்தோம். அவளது குழந்தைகளை விளையாட விட்டு விட்டு பேசிக் கொண்டிருக்கையில் ஒரு 40 வயத்கு மதிக்கத்தக்க குர்டிஸ் இனத்துப் பெண்மணி ஒருத்தி எங்களை கொஞ்சம் பயம் கலந்த பார்வையோடு பார்த்து சிரித்தார். மீண்டும் மீண்டும் அவர் அப்படி மிரட்சியோடு எங்களைப் பார்ப்பதும் பக்கத்தில் இருக்கும் மரங்களைப் பார்ப்பதுமாக இருப்பதைக் கவனித்த எனக்கு ஏதோ ஒன்று அங்கு நடக்கின்றது என்று தோன்றியது. உற்று கவனிக்க, அங்கிருக்கும் ப்ளம்ஸ் மரத்தின் மேல் யாரோ ஒருவர் ஏறி பழங்கள் பறித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. மரத்தைக் குலுக்க குலுக்க நிறைய ப்ளம்ஸ் பழங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுவதைக் காண முடிந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படிப்பட்ட ஒரு காட்சி. அதுவும் ஜெர்மனி வந்து சேர்ந்த இந்த நான்கு ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்க்க முடிந்தது.

ஒரு பொது இடத்தில் இருக்கின்ற பழ மரங்களிலிருந்து ஜெர்மானிய மக்கள் பழங்களைப் பறித்து இதுவரை நான் பார்த்ததில்லை. மரங்களில் உள்ள அப்பழங்கள் அப்படியே வீணாகித் தரைம் போது மரத்தின் மேல் இருந்த அந்தச் சிறுவன் கீழிறங்குவது தெரிந்தது. நன்றாக பார்த்தால் அது ஒரு பெண். அதுவும் 30 அல்லது 35 வயது மதிக்கத்தக்க பெண். இதைப் பார்த்த எனக்கு ஒரே ஆச்சரியம். எவ்வளவு தைரியமாக ஒரு பொது இடத்தில், மரத்தில் ஏறி இவள் பழம் பறித்துப் போடுகின்றாளே என்று! கீழே இறங்கிய உடனே இரண்டு பெண்மனிகளுமாகச் சேர்ந்து எல்லா பழங்களையும் ஒரு துணிப்பைக்குள் அவசர அவசரமாக எடுத்து திணிக்க ஆரம்பித்து விட்டனர்.

உடனே எனது தோழியிடம் இதைப்பற்றி கேட்க அவள் இது அவ்வப்போது சகஜமாக இங்கு நடக்கும் விஷயம் தான் என்றாள். மேலும், இந்த இடம் பொது மக்களுக்காக உள்ள ஒன்று என்றாலும் மாலை ஆறு மணிக்கு மேல் இங்கு ஜெர்மானியர்கள் வருவதில்லை. அவர்கள் பொதுவாக மதிய வேளைகளில் தான் இங்கு வருவர். 6 மணிக்கு மேல் இங்கு அதிகமாக துருக்கிய இனத்தவரும் குர்டிஸ் இனத்தவரும் தான் நிறைந்திருப்பர். அதனால் இவர்களுக்க்கு அவ்வளவாக பயம் இருப்பதில்லை என்றாள். இதுவும் ஒரு ஆச்சரியமான ஒரு தகவலாகவே எனக்குப் பட்டது. பொதுவாக ஜெர்மனியில் பார்க்கும் போது இனவேறுபாடு என்ற ஒன்று இருப்பதைக் காண முடிவதில்லை. ஆனாலும் மறைமுகமாக பல இடங்களின் மக்களின் தனித்துவம் வேறுபட்டு வெளிப்படுவதைக் காணத்தான் முடிகின்றது.

வருமானம் (வரி)

உலக பொருளாதார நிலையில் மந்தம் என்பது தொடர்ந்தவாறே இருக்கின்றது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகிய ஜெர்மனியின் பொருளாதாரம் மிக மிக மோசமாகிக் கொண்டிருப்பது தற்போதைய உண்மை. ஐரோப்பிய உறுப்பிய நாடுகளிலேயே பணக்கார நாடுகளில் ஒன்றான ஜெர்மனி கடந்த ஆண்டின் மிகக் குறைந்த பொருளதார வளர்ச்சியை கண்டிருப்பது இங்குள்ள அரசியல் நிலையை அதிகமாகவே பாதிக்கத் தான் செய்துள்ளது..!

பல திட்டங்கள் பல மாற்றங்கள் என்று அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதில் மிக மிக சந்தோஷமான ஒரு அறிவிப்பு என்று இப்பொழுது இந்த நாட்டில் பல மூலைகளிலும் மக்கள் பேச ஆரம்பித்திருக்கும் விஷயம் வருமான வரியைப் பற்றியதைத்தான். ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் வருமான வரி என்பது எறக்குறை 50% என்பது அனைவரும் அறிந்தது. ஐரோப்பாவில் சம்பளம் அதிகம் என்றாலும் இந்த மிகக் கூடிய வருமான வரியைக் கட்டி கையில் மிஞ்சுவது வருமானத்தில் பாதியே. DM-லிருந்து EURO மாற்றம் வந்ததிலிருந்து (2001) விலை வாசி உயர்ந்து வருவதையும் மக்கள் உணர்த்தவர்களாகவே இருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு தனி நபர் வரிமான வரியை 46% லிருந்து 10% அதாவது 36%க்கு குறைக்கும் முடிவைப்பற்றியும் அதனை 2004 ஆரம்பத்திலிருந்து அமுலுக்குக் கொண்டுவருவதைப்பற்றியும் அரசாங்கமும் அதிபர் ஷ்ரூடரும் பேச ஆரம்பித்திருப்பது சந்தோஷமான விஷயமாகத் தான் இருக்கின்றது.

இது உண்மையிலேயே சாத்தியப்படுமா; சொல்வதைப்போல அடுத்த வருட ஆரம்பத்தில் அமுலுக்கு வருமா? என்ற சந்தேத்தை விட மற்றோரு சந்தேகம் மக்கள் மனதில். ஜெர்மானிய நண்பர்கள் பலரும், அதுவும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளவர்கள் இந்த மாற்றத்தைக் கேள்விப்பட்டு அவ்வளவாக திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை. காரணம் என்னவென்றால், குடும்பம் குழந்தைகள் உள்ளவர்கள் தற்போது ஏறக்குறைய 18% - 27% வரையிலான வருமான வரியைத்தான் செலுத்துகின்றனர். ஆகவே இந்த மாற்றம் ஓரளவே இவர்களுக்கு உதவ முடியும். ஆனால் வருமான வரி குறைகின்ற அதே வேளையில் பொருட்களின் விலையோடு கூடுகின்ற VAT (Value added Tax) நிச்சயம் உயரும் என்பது இவர்களின் கணிப்பு. அதிலும் முக்கியமாக எண்ணெய் விலை அதிகரிப்பதை யாரும் தடுக்க முடியாது எனபதையும் மறுப்பதற்கில்லை. ஆக மக்களின் பொருளாதாரத்தைச் சீர்செய்ய அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகள் மற்ற பின் விளைவுகளையும் சேர்த்துக் கொண்டே வருவதைத் தான் பார்க்க முடிகின்றது.

Monday, July 21, 2003

விடுமுறைக்கு இத்தாலி

ஜெர்மனியில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில். இரவு பத்து மணி வரை சூரியன் மறைவதில்லை. பகல் நீண்ட நேரமாக இருப்பதால் நிறைய காரியங்கள் செய்ய முடிகின்றது. குளிர்காலத்தில் மதியம் 5 மணிக்கெல்லாம் சூரியன் மறைந்து விடுவதைப் பார்த்து புலம்பிக் கொண்டிருந்த எனக்கு இப்போது பெரிய மகிழ்ச்சி. ஆனாலும் வெயிலின் கடுமையும் பாதிக்கத்தான் செய்கின்றது. காலை 5 மணிக்கெல்லாம் விடிந்து விடுகின்றது.

ஜெர்மானியர்கள் பொதுவாக இந்த நேரத்தில்தான் விடுமுறையைத் திட்டமிடுகின்றனர். வடக்குப் பகுதியைத்தவிர மற்ற பகுதிகளில் கடற்கரை இல்லாததால் பெரும்பாலும் ப்ரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்று விடுமுறையைக் கழிப்பது பழகிப்போன விஷயம். அதிலும் இந்த வருடம் வெயில் மிகக் கடுமையாக இருப்பதால் பலரும் இத்தாலியக் கடற்கரைகளை முற்றுகையிட்டுவிட்டனர்.

இந்த செய்தி அறிந்த இத்தாலிய அமைச்சர் ஒருவர் ஜெர்மானியர்கள் படையெடுத்து தங்கள் கடற்கறையை சூழ்ந்து கொள்வது பார்க்க மிக மோசமாக இருக்கின்றது என்று பத்திரிக்கையில் வர்ணிக்க, தனது விடுமுறையை இத்தாலியில் கழிக்க திட்டமிட்டிருந்த ஜெர்மானிய சான்சலர் ஷ்ரூடர் (அதிபர்) பயணத்தை ரத்து செய்து விட்டார். அந்த அமைச்சர் மன்னிப்புக் கேட்காத வரை தான் விடுமுறைக்காக இத்தாலி செல்லப்போவதில்லை என்று உறுதியெடுத்து ஜெர்மனியிலேயே இப்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார் என்றும் தகவல். ஆனால் முறையற்று பேசிய அந்த இத்தாலிய அமைச்சர் தான் எந்த தவறும் செய்யவில்லை; ஆகவே மன்னிப்புக் கேட்க முடியாது என்று கூறி விட்டார்.

ஆனால் இதையெல்லாம் பற்றி மக்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இத்தாலியர்களைக் கேட்டால், ஜெர்மானியர்கள் வருவது தங்களுக்கு பெரிய வருவாயைத் தருகின்றது என்று கூறுகின்றனர். ஜெர்மானியர்களும் வருந்தியதாகத் தெரியவில்லை. ஓய்வைக் கழிப்பதிலேயே முழுமனதோடு ஈடுபட்டு சந்தோஷித்திருக்கின்றனர். அவரவர்களுக்கு அவரவர் வேலை...