Friday, January 24, 2014

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - ஜெர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சர்

ஜெர்மனியில் தேர்தல் முடிந்து புதிய கூட்டணியும் ஆட்சிக்கு வந்தாகி விட்டது. பெரும் போட்டியிட்ட ஆளும் கட்சியும் எஸ்.பி.டி கட்சியும் இணைந்து கூட்டணி கட்சியை அமைக்க வேண்டிய சூழல்.

இந்த புதிய அரசில் பாதுகாப்பு அமைச்சராக ஜெர்மனியில் முதன் முறையாக ஒரு பெண் அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். இவர் சான்ஸலர் அங்கேலா மெர்க்கலின் மிக நம்பிக்கைக்கு உரியவரான திருமதி ஊர்சுலா ஃபோன் டெர் லைன்.


திருமதி ஃபோன் டெர் லைன் (மஞ்சள் உடையில்) - அருகில் திருமதி மெர்க்கல்

55 வயதான இவர் ஏற்கனவே குடும்ப-சமூக நல அமைச்சராக 4 ஆண்டுகளும் பின்னர் தொழில் துறை அமைச்சராக நான்கு ஆண்டுகளும், அதன் பின்னர் இப்போது இந்த புதிய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளார்.

ஜெர்மனியின் அமைச்சர்கள் பட்டியலில் மிக உயர்ந்த மதிப்பைக் கொண்டவர் இவர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.  ஆப்கானிஸ்தான், சிரியா, லெபனான், லிபியா ஆகிய நாடுகளின் அரசியல் நிலைத்தன்மையில் ஜெர்மனியின் பாதுகாப்பு உதவிகள் தொடர்பான  பிரச்சனைகள் முந்தைய அமைச்சர்களுக்கு பிரச்சனையை தந்த  விஷயங்கள். அவற்றை சமாளிக்க இவர்தான் சரியானவர் என்ற எண்ணம் சான்ஸலருக்கு இருப்பது தெரிகிறது.

உலக நாடுகளில்  பல பெண் அமைச்சர்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்திருக்கின்றனர். நல்லதொரு பட்டியல் அவர்களின் புகைப்படங்களோடு இங்கே உள்ளது. http://www.guide2womenleaders.com/Defence_ministers.htm

சுபா

Thursday, January 23, 2014

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - ஜெர்மனியில் வேலைக்கு வருவோர்..

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெரும் நாடுகள் ஏனைய உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல சட்டப்படி தடையில்லை. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டில் ரோமானியாவிலிருந்தும் பல்கெரியாவிலிருந்தும் ஜெர்மனிக்கு வந்து சேர்ந்த வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை அரசாங்கத்தை சற்றே திகைக்க வைத்து விட்டது.

இந்த ஆண்டு தொடக்கமே இந்த அண்டை நாடுகளிலிருந்து வேலை தேடிவருவோரை சமாளிப்பது பற்றிய விஷயத்துடனேயே தொடங்கியது. இவ்விஷயம் தொடர்பாக சற்றே கடுமையான விவாதங்களும் விமர்சனங்களும் வந்தன. இந்த விவாதங்கள் எழுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஒரு விஷயம் தான். அதாவது ரோமானியாவிலிருந்து வேலை தேடி வரும் ஒரு நபர், ஜெர்மனியில் நுழைந்தவுடன் தான் வேலை தேடுவதாக தெரிவித்து தனக்கு வருமானம் இல்லா நிலையை முதலில் பதிந்து விடுவார். அப்படி வருபவர்களில் பெண்கள் அதிகம். அதோடு தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்களும் கணிசமான எண்ணிக்கையினர். இப்படி வருவோர்களில் சிலர் இந்த வாய்ப்பை தவறாகப் பயண்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. உதாரணமாக ஜெர்மனிக்கு வந்து தான் வேலை தேடுவதைப் பதிந்த உடனேயே அரசாங்கம் அப்பெண்ணுக்கும் அவர் குழந்தைக்கும் மாதா மாதம் ஒரு தொகையை வழங்கும். ஒரு வருட காலம் அவர் வேலை தேடுவதிலேயே காலதை கழித்து விட்டு பின்னர் ரோமானியா திரும்பி விடுவார் 1 வருட காலம் குழந்தைக்காகக் கிடைத்த பணத்துடன். மீண்டும் வருவார் .. அதே பதிவு.. அதே நிலை... !

இப்போது ஜெர்மனி இதனை தடைசெய்ய சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. வேலை தேடி வருவோர் முதல் மூன்று மாதத்திற்குள் வேலை தேடிக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவர் அவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட வேண்டும் என பேச்சுக்கள் செய்திகள் வந்துள்ளன. இன்னும் விவாதங்கள் தொடர்கின்றன.

சுபா