Thursday, November 6, 2003

Tamil vs. English

அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்த ஒரு சம்பவம். புதிதாக எங்கள் குழுவில் இளம் ஜெர்மானியப் பெண் ஒருத்தி வேலையில் சேர்ந்திருக்கின்றாள். காலையில் வந்ததும் அவளுடைய உதவியாளர் இல்லாததைக் கண்டதும் என்னிடம் சில தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாமே என்று என்னிடம் வந்து பேச்சுக் கொடுத்தாள்.

ஜெர்மானியர்களே 99.9% விழுக்காடு வேலை செய்யும் இந்த நிறுவனத்தில் நான் ஒரு ஆசியன் இருந்த போதும் எந்த தயக்கமுமுன்றி எனக்குப் புரியுமா புரியாதா என்ற சிறு கவலையுமின்றி மிகச் சகஜமாக ஜெர்மானிய மொழியிலேயே பேசிக் கொண்டிருந்தாள். இவள் மட்டும் இப்படியில்லை. நான் பார்க்கும் ஏறக்குறைய அனைத்து ஜெர்மானியர்களுமே வேறு இனத்தைவர்களைப் பார்த்தால் கூட தங்கள் மொழியில் தான் பேசுகின்றனர். ஜெர்மனிக்கு வந்து விட்டால் ஜெர்மானியர் அல்லாத பிறரும் ஜெர்மன் மொழியில் தான் பேசவேண்டும்; பேசுவார்கள் என அவர்கள் எதிர்பார்க்கின்ரனர். தங்களுக்கும் தங்கள் மொழியின் மேல் பற்று; அதே பற்றை மற்றவர்களும் கொண்டிருக்க வேண்டும் என்றும் நினைக்கின்றனர்; அதுவும் எந்த தயக்கமுமின்றி நினைக்கின்றனர்.

நம்மை நாமே குறைத்துச் சொல்வதாக நினைக்க வேண்டாம். இதே நிலையில் ஒரு தமிழரை வைத்துக் கொள்வோம். தமிழ் மொழிக்கு தமிழர்கள் கொடுக்கும் மரியாதையை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பிற மொழியில் அதிலும் குறிப்பாக ஆங்கிலத்தில் பேசுவதுதான் நாகரிகம் என்ற மாயையில் தான் பெரும்பாலோர் இருக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நண்பரை சந்திக்க அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். தமிழகத்திலிருந்து ஜெர்மனிக்கு வந்து குடியேறிவிட்ட ஒரு குடும்பம். பேச்சு வாக்கில் குழந்தையின் பள்ளிக்கூடத்தில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றிய பேச்சு வந்தது. தமிழ் குழந்தையாக இருப்பதால் பள்ளியில் குழந்தையின் தாய்மொழியைப் பற்றிய விபரத்தைக் கேட்டிருக்கின்றனர். ஜெர்மானிய மொழி தாய்மொழியில்லை அல்லவா? குறிப்பேட்டில் தமிழ் என்றுதானே எழுதப்படவேண்டும். ஆனால் அந்த தாயார் குழந்தையிடம் உனது தாய்மொழி ஆங்கிலம்; அதனால் ஆங்கிலம் என்றே எழுது என்றார்.

என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்தச் செய்தி. தனது தாய்மொழியைப் பற்றி எழுதக் கூட கூச்சப்படும் சமுதாயத்தினர் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறது. தமிழ் எனது மொழி என்று சொல்லிக் கொள்வதில் மன வருத்தம் அடையும் கூட்டத்தினர் இவர்கள். ஆங்கிலம் தான் எங்கள் மொழி என்று சொல்லிக் கொள்ளும் இவர்களைப் போன்றவர்கள் தங்கள் முகத்தையும் நிறத்தையும் ஒரு முறைக்குப் பலமுறை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றே நினைக்கின்றேன். அதிலும் குறிப்பாக ஐரோப்பாவில் இருந்து கொண்டு தாய்மொழி பற்று வளரவில்லை என்றால் இம்மாதிரியானவர்கள் ஐரோப்பாவில் இருந்தும் நமது இனத்திற்கு மொழிக்கும் சற்றும் பயனில்லை.

No comments:

Post a Comment