Friday, November 21, 2003

பார்வை

ஆசியர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கின்றன. பொதுவாக வெள்ளையர்களைப் பற்றிய தவறான பல கருத்துக்கள் நமது மனங்களில் ஊறிப் போய் இருக்கின்றது. இவர்களோடு பழகும் போதுதான் அவர்களும் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் நம்மைப் போல பல வகையில் உயர்ந்தவர்களே என்பதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.

அபிப்ராயங்கள் என்பது யாராவது ஒருவர் சொல்லக் கேட்டோ அல்லது ஏற்கனவே இருக்கின்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டோ வருவது எனும் போது அதில் நூற்றுக்கு நூறு உண்மை இருப்பதில்லை. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். நான் ஜெர்மனி வருவதற்கு முன்னர், லண்டனில் சில ஆண்டுகள் தங்கியிருந்து திரும்பிய நண்பர் ஒருவர், "வெள்ளையர்களுக்குத் தேவாலயங்களுக்குச் சென்று வழிபடுவதில் ஆர்வம் இல்லை. இப்போதெல்லாம் தேவாலயங்கள் மற்ற மதத்தினரால் வாங்கப்பட்டு அவை வேறு சமயத்தினரின் வழிபடு இடமாக மாறி இருக்கின்றது" என்று கூறினார். அந்தக் கருத்து மனதில் பல நாட்கள் எனக்கு இருந்தது. ஜெர்மனி வந்து இங்குள்ள மக்கள் எந்த அளவுக்கு கிறிஸ்தவ மதத்தில் ஈடுபாடு கொண்டுள்ளனர் என்பதை நேராகப் பார்க்கும் போதுதான் அந்தக் கூற்றில் இருக்கும் பிழை தெரிய வந்தது. லண்டனுக்கு அந்தக் செய்தி உண்மையானதாக இருக்கலாம்; ஆனால் ஜெர்மனியைப் பொறுத்தவரையில் இதில் உண்மை இல்லை.

ஆக ஒரு செய்தியைக் கேட்கும் போது அதனை எல்லோருக்கும் பொதுவாக பயன்படுத்தி விட முடியாது. ஜெர்மனி முழுதுமே ஜெர்மன் மொழியைத் தான் பேசுகின்றனர். ஆனாலும் பகுதிக்குப் பகுதி மொழியில் வித்தியாசங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஜெர்மனியின் வடக்குப் பகுதியில் 'ஹோஹ் டோ ய்ச்' பேசுகின்றனர். பவேரியா பகுதிக்கு வந்தால் பவேரிய கலவையாக ஜெர்மன் மொழி வருகின்றது. ஷ்வாபியன் பகுதி, அதாவது நான் இருக்கும் பகுதியில் ஷ்வேபியன் ஜெர்மன் பேசுகின்றனர்; தமிழகத்தில், கொங்கு தமிழ், ஐயங்கார் தமிழ், செட்டி நாட்டுத் தமிழ் என்று இருப்பது போல. ஆக நாட்டிற்குள்ளேயே பேசப்படும் ஒரு மொழியிலேயே இம்மாதிரியான வேறுபாடுகள் இருக்கும் போது ஒரு கருத்தை பொதுக் கருத்தாக வைக்க முடியுமா?

ஜெர்மானியர்களோடு பழகும் நல்ல வாய்ப்பு எனக்கு அமைந்திருப்பதால் அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அதிகமாகவே தெரிந்து கொள்ள முடிகின்றது. அந்த வேறுபாடுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும் என நினைக்கின்றேன். அவற்றை ஒவ்வொன்றாக அடுத்தடுத்த குறிப்புக்களில் உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.

No comments:

Post a Comment