Thursday, November 20, 2003

Potato

போப்லிங்கன் நகரத்தின் அழகை மேம்படுத்துவதில் காய்கறித் தோட்டங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் குளிர் காலத்திலும் உருளைக் கிழங்குகள் பயிரடிப்பட்டு வருகின்றன. குளிர்காலத்திலும் உருளைக் கிழங்குச் செடிகள் அழகழகாய் வளர்ந்திருப்பது கண்ணுக்கு அதிக குளிர்ச்சி.



ஜெர்மானியர்களின் உணவுகளில் மிக முக்கிய பங்கு வகிப்பது உருளைகிழங்கு. உருளைக் கிழங்குகளை அடிப்படையாக வைத்தே முக்கியமான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. முழு உருளைக் கிழங்குகளை அவித்து அதனைக் கொஞ்சம் நெய்விட்டு வருத்து சாப்பிடுவது இவர்களுக்கு மிக மிகப் பிடித்தமான ஒன்று. அவித்த உருளைக்கிழங்கைப் பிசைந்து மாவாக்கி அதில் நெய்யும் பாலும் விட்டு கலந்து அதனை மற்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடுவது இன்னொரு வகை. இப்படி பலவகைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.




சென்ற வருடத்தோடு ஒப்பிடுகையில் இந்த வருடம் விளைச்சலுக்கு உகந்த வருடமாகவே படுகின்றது. சென்ற வருடம் பெருத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் அதனால் ஏற்பட்ட சேதங்கள் ஆகியவை நாட்டின் மொத்த காய்கறி விளைச்சளையும் பேரளவுக்குப் பாதித்திருந்தன. ஆனால் இந்த வருடம் இந்த சிரமம் இல்லை. பார்க்கின்ற இடமெல்லாம் இந்த ~5 டிகிரி (பகலில்) குளிரிலும் உருளைக் கிழங்கு போன்ற காய்வகைகள் பயிடப்படுகின்றன என்பது ஒரு செய்திதானே.



நானும் உருளைக்கிழங்கு செடியை வளர்த்துப் பார்ப்போமே என குளிர்சாதனப்பெட்டியில் இருந்த முளைத்த இரண்டு உருளைக் கிழங்குகளைஒரு தொட்டியில் நட்டு வைத்துப் பார்த்தேன். செடி உயரமாக வளர்ந்து இலை நிறம் மாறும் போதுதான் உருளைக்கிழங்குகள் வளர்ந்திருக்கும் என நண்பர்கள் சொல்லியிருந்ததால், எப்போது இலையின் நிறம் மாறும் எனக் காத்திருந்தேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஓரளவு இலைகள் பெரிதாகி மஞ்சள் நிறம் தென்படவும் ஆர்வம் பொறுக்காமல் செடியைப் பிடிங்கிப் பார்த்தேன். குட்டி குட்டியாக வட்ட வடிவத்தில் ஐந்தாறு உருளைக் கிழங்குகள். நட்டு வைத்து வளர்த்ததில் பலன் கிடைக்காமல் இல்லை!

No comments:

Post a Comment