Thursday, November 27, 2003

Job discrimination!

மக்களை தொழில் அடிப்படையில் வேறுபடுத்தி சிலரை தாழ்வாக மதிப்பிடுவதும் சிலரை உயர்ந்து மதிப்பிடுவதும் நமது ஆசிய நடைமுறையில் வழக்கமாகிப் போய்விட்ட ஒன்று. வீட்டில் வேலை செய்யும் பெண்ணையோ, கார் ஓட்டும் டிரைவரையோ சமமாக நாற்காலியில் உட்கார வைத்து பேசக்கூடத் தெரியாத மனிதாபிமானமற்ற சமுதாயமாக நமது சமுதாயம் இருக்கின்றது. யாராவது ஒருவரை தாழ்மைப் படுத்தியும், வேலை வாங்கியும் மகிழ்ச்சி அடையும் பழக்கம் நம் ஆசிய பண்பாட்டில் ஊறிப் போய்விட்டது.



ஜெர்மனியில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பமாக இருந்தாலும் சரி, வசதியான பணக்காரக் குடும்பமாக இருந்தாலும் சரி, வீட்டின் அனைத்து காரியத்தையுமே வீட்டில் உள்ளவர்கள் தான் செய்ய வேண்டும். வீட்டிற்குப் புதிதாகக் குடிபோகும் போது நாமே சுயமாக வீட்டிற்கு வர்ணம் பூச வேண்டும். தரைக்கு நாமே சுயமாக கம்பளம் ஒட்ட வேண்டும். அது தவிர மின்சாரக் கோளாறாக இருந்தாலும் தொலைபேசி கோளாறாக இருந்தாலும் சரி, அனைத்தையுமே நாமே சுயமாகச் செய்ய வேண்டும்.

இதையெல்லாம் செய்வதற்கே ஆள் இல்லையா எனக்கேட்கலாம். ஆட்கள் இருக்கின்றார்கள். ஆனால் இம்மாதிரியான உடல் உழைப்பு வேலைகளுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் என்பது மிக மிக அதிகம். உதாரணத்திற்கு, வீட்டிற்கு வர்ணம் பூசும் ஒருவருக்கு ஒரு பொறியியளாளருக்குக் கிடைக்கும் சம்பளத்தை விடவும் அதிகமான சம்பளம் கிடைக்கும். ஒரு டெக்னீஷியன் மெர்ஸ்டிஸ் பென்ஸ் கார் வாங்கும் அளவிற்கு சம்பாதிக்கும் நிலை இங்கு உள்ளது. இது நம்பமுடியாத கதையல்ல; உண்மை.

எல்லாவிதமான தொழிலுமே, மதிக்கத்தக்க ஒன்றுதான் என்ற நிலை இங்கு அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கப்படுகின்ற ஒன்று என்பது முற்றிலும் உண்மை. சமையலறையில் வேலை செய்யும் ஒரு பெண் அனைத்து சுதந்திரங்களோடும் பாகுபாடின்றியும் ஒரு பொறியியளாளரோடு ஒரு விருந்தில் கலந்து கொள்ள முடியும். தொழில் அடிப்படையில் பிரித்து வைத்து கௌரவக் குரைச்சலாக எடைபோடுவது இல்லை. மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கும் எண்ணம் என்பது மிக முக்கியமான அம்சம். நமது ஆசிய வாழ்க்கை முறையில் இது இன்றளவும் ஏட்டிலே தான் இருக்கின்றதே தவிர நடைமுறைப்படுத்தப்படவேயில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

No comments:

Post a Comment