Wednesday, June 10, 2020

Racial profiling

Racial profiling என்ற சொல் இப்போது ஐரோப்பிய ஊடகங்களில் அதிகம் ஒலிக்கத்தொடங்கியிருக்கின்றது. இன ரீதியாக மக்களை அடையாளப்படுத்தி `இந்த இனத்தவர்கள் இப்படிப்பட்ட குற்றம் செய்வார்கள்` என்ற சிந்தனையைப் பற்றி இன்று கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்றன.

இந்தியச்சிந்தனையில் சாதியை வைத்து 'இந்த சாதிக்காரர்கள் இப்படித்தான் செய்வார்கள்` என்ற பொதுவார்த்தைப் பயன்பாடு இருப்பதைப் பரவலாக நாம் எல்லோருமே அறிவோம். புலம் பெயர்ந்த தமிழர்கள் சூழலிம் கூட இந்த வார்த்தைப் பிரயோகம் வழக்கில் ஒட்டிக் கொண்டு வருவதை நான் என் நேரடி அனுபவத்தில் இங்கு ஜெர்மனியிலும் நிகழ்வதை அறிவேன். இப்படிப்பட்ட சிந்தனையைத் தான் Racial profiling என்று இன்று கூறி கண்டிக்கும் வகையில் சமூக நீதியைக் காக்க முனைபவர்களும் இனவாதத்தைக் கண்டிக்க விரும்புபவர்களும் முன்னெடுத்திருக்கின்றார்கள்.

ஜோர்ஜ் ப்ளோய்டின் (Georg Floyd ) மரணம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இனவாதத்திற்கு எதிரான குரலின் தொடர்ச்சியாக பெல்ஜியத்தில் மாமன்னர் இரண்டாம் லியோபர்டு அவர்களது சிலை எங்கெங்கு உள்ளதோ அவை அனைத்தையும் எவ்வளவு விரைவில் நீக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்க வேண்டும் என்று இனவாத சிந்தனையை எதிர்க்கும் போராளிகள் இயங்கத் தொடங்கியிருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் ஏறக்குறைய 10,000 போராளிகள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேரனியை நிகழ்த்தினர்.

நேற்றைய நிலவரப்படி 65,000 பொதுமக்கள் பெல்ஜியம் முழுதும் உள்ள மாமன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் சிலை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் கையெழுத்திட்டு இருக்கின்றனர்.
மன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் சிலை மட்டுமன்றி அவரது பெயரில் அமைந்திருக்கின்ற சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டுமென்றும் கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.
காலனித்துவ பழமையில் (Colonial Legacy) அடிமைத்தனத்தைக் கொடூரமாக நிலைநாட்டிய வரலாற்றுச்சின்னங்களைப் பெருமைக்குரிய சின்னங்களாகப் பார்க்கக் கூடாது என்றும், இனவாதத்தை ஆதரிக்கின்ற இவ்வகையான சின்னங்கள் நீக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

பெல்ஜியத்தில் எழுந்துள்ள எழுச்சி போலவே இங்கிலாந்திலும் வெவ்வேறு பகுதிகளில் இனவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் போராட்டங்கள் என்பன நடைபெறுகின்றன. விக்டோரியா மகாராணி காலத்து நினைவுச் சின்னங்கள் சில இத்தகைய வகையில் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருக்கலாம். லண்டனில் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் வகையிலான `அடிமைகள் அருங்காட்சியகம்` (Slavery Museum) ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் இப்போது ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமின்றி லண்டன் நகரில் இனவாதத்தினால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்குச் சிலைகளும் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட மற்றும் அடிமைகளாக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும் இனி வருங்காலங்களில் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் இத்தகைய மனமாற்றமும் எதிர்ப்புக் குரல்களும் காலத்தின் தேவையே!

புகைப்படத்தில் மன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் ஆட்சிகாலத்தில் கைகள் சிதைக்கப்பட்ட, உடல் நலிவடைந்த கோங்கோ மக்களைக் காணலாம்.




-சுபா

No comments:

Post a Comment