Thursday, June 25, 2020

ஆண்ட்ரூ ஜாக்சன் - இனவாதத்திற்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் ..!

இனவாதத்திற்கு எதிராக அமெரிக்காவில் தொடர்ந்து எதிர்ப்புக் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. கடந்த சில நாட்களில் பல்வேறு இடங்களில் மக்கள் தங்கள் குரலை வெளிப்படுத்தும் வகையிலும் இனவாதத்திற்கு எதிராக அரசு கலந்துரையாடல்கள் நிகழ்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம்.

கடந்த திங்கட்கிழமை அன்று வெள்ளை மாளிகையின் முன்பகுதியில் உள்ள ஆண்ட்ரூ ஜாக்சன் சிலையைத் தகர்க்கும் வகையில் போராட்டக்காரர்கள் செயல்பட்டார்கள் என்பதை பலரும் ஊடகத்தில் பார்த்திருக்கலாம்.
ஆண்ட்ரூ ஜாக்சன் ராணுவ உடை அணிந்து குதிரையில் செல்வது போல அமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான சிற்பம் இது. வெள்ளை மாளிகையின் முன்புறத்தில் இருக்கின்ற இந்த சிற்பம் அமெரிக்காவின் புகழை வெளிப்படுத்தும் ஒரு சிற்பமாக இதுவரை காணப்பட்டது.

ஆனால் மக்கள் இன்று இந்த சிற்பத்தை நீக்க வேண்டிய சிற்பமாகக் கருதத் தொடங்கியிருக்கின்றனர் என்பதன் வெளிப்பாடுதான் 23ஆம் தேதி வெள்ளை மாளிகையின் முன் பகுதியில் நடந்த இந்தப் போராட்டம்.
இந்த ஆண்ட்ரூ ஜாக்சன் கிபி 19ஆம் நூற்றாண்டில் பூர்வகுடிகளான அமெரிக்க இந்திய மக்களை கருணையின்றி அடிமைப்படுத்திய வரலாற்றுக்குச் சொந்தக்காரர். அமெரிக்காவின் ஏழாவது அதிபராக இருந்தவர். இனவாதத்தைத் தூக்கிப் பிடித்து அமெரிக்க இந்தியர்களை ஒதுக்கியவர் என்ற வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவர்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகையின் முன் புறத்தில் உள்ள ஆண்ட்ரூ ஜாக்சனின் பிரம்மாண்டமான சிலையின் மேல் கயிற்றை கட்டி அதனை எல்லா திசைகளிலும் போராட்டக்காரர்கள் நின்றுகொண்டு அதனை இழுத்து சிதைக்கும் முயற்சியை மேற்கொண்டனர். காவல் அதிகாரிகள் செயல்பட்டு போராட்டக்காரர்களை விரட்டிய காட்சிகளைத் தொலைக்காட்சியில் அன்று பலரும் பார்த்திருப்போம்.


அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரை தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் பேட்டி எடுத்தன. அதில் ஒருவர் கூறிய வாசகம் நம்மை யோசிக்க வைக்கின்றது.
'Why you want to celebrate history of hatred instead of building a future of love? Our plan is to put a round table for the discussion for the community.'

மக்கள் குறுகிய வட்டத்தில் இருந்து வெளிவந்து வெளிப்படையாக இனவாதத்திற்கு எதிரான கலந்துரையாடல்களை நிகழ்த்துவதற்கு தயாராகிறார்கள் என்பதே இத்தகைய மக்களின் குரல் எதிரொலிக்கிறது.

நமது தமிழ்ச்சூழலிலோ இன்னமும் ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சாதிப் பிரிவினை என்ற ஒன்றுக்கும் உதவாக, மனித நேயத்திற்கு எதிரான ஒரு கருதுகோளை முன் வைத்து.
மனித பண்பாட்டின் நாகரிக வளர்ச்சியில் நாம் கடக்க வேண்டிய தூரம் மிக நீளம் என்பதையே இது காட்டுகிறது !

அமெரிக்காவில் கொரோனா கொள்ளை நோய் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த வேளையிலும் மக்கள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் குரலை வெளிப்படுத்துவதில் சிறிதும் தயக்கம் காட்டவில்லை என்பது அவர்களது உறுதியை வெளிப்படுத்துகிறது என்றே நான் கருதுகிறேன்!






-சுபா

No comments:

Post a Comment