Monday, June 8, 2020

ப்ளோய்டின் மரணம் ஐரோப்பாவில் எதிரொலிக்கின்றது

உலகின் வேறொரு பகுதியில் அநீதி இழைக்கப் பட்டாலும் அதற்குக் குரல் கொடுப்போம் என்று ஜெர்மனியிலும் மக்கள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் குரல்களைக் கடந்த மூன்று நாட்களாக மிகப்பெரும் அளவில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜெர்மனியின் பெரு நகரங்களான பெர்லின், ஸ்டுட்கார்ட், மியூனிக், ஹாம்பர்க், லைப்சிக் போன்ற பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை எனக் கடந்த மூன்று நாட்களும் மிகப்பெரிய அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய அளவில் இனவாதத்திற்கு எதிரான பொதுமக்கள் பேரணி நடைபெற்றது.
கொரோனா பேரிடர் கால முடக்கம் இருக்கின்ற சூழலிலும் இந்தப் பேரணி மக்களின் சிந்தனையில் எழுந்துள்ள இனவாதத்திற்கு எதிரான கடும் கோபத்தை வெளிப்படுத்துவது என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது.
அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளோய்ட் கருப்பர் என்ற இனவாதத்தின் அடிப்படையில் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஐரோப்பாவின் பல நாடுகளிலும் கடந்த மூன்று நாட்களாக பேரளவிலான இனவாதத்தைக் கண்டிக்கும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளோய்டின் மரணம் ஐரோப்பாவில் குறிப்பாக, ஜெர்மனியிலும் இனவாத சிந்தனை தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு வகையில் ஊடுருவி இருப்பதை மக்கள் வெளிப்படையாக இப்போது பேசுகின்றார்கள். இந்தப் பேரணிகள் ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவிலும் வெள்ளையர் சிந்தனைப் போக்கு மீளாய்வு செய்ய ஒரு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறது!




-சுபா

No comments:

Post a Comment