Monday, March 16, 2020

கொரோனா - இன்றைய நிலை

ஜெர்மனி நேற்று இரவு 8 மணிக்கு அதன் எல்லையை மூடும் அறிவிப்பை வெளியிட்டது. இதன் அடிப்படையில் எல்லை நாடுகளான பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய ஐந்து நாடுகளுக்கான எல்லைகள் நேற்று இரவிலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்து மூடப்பட்டுள்ளன. ஆயினும், வர்த்தகம் தொடர்பில் இந்த நாடுகளிலிருந்து வருகின்ற பெரிய வாகனங்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட நாட்டில் இருந்துகொண்டு ஜெர்மனியில் பணியாற்றும் நபர்கள் ஆகியோருக்குத் தனி சலுகையாக வழிகள் திறக்கப்படும் என்றும் ஜெர்மனி கூறியுள்ளது.

வார இறுதி கடுமையான பீதியுடன் இங்கு தொடங்கினாலும் படிப்படியாக மக்களின் கட்டுப்பாடு நிறைந்த செயல்பாடுகளினால் அமைதி ஏற்பட்டிருக்கின்றது. என்னைப் போன்று வீட்டிலிருந்து பணியாற்றும் பலருக்கும் கொரோனா பிரச்சனை தீரும்வரை வீட்டிலிருந்து பணியாற்ற அலுவலகங்கள் வாய்ப்பினை வழங்கி இருக்கின்றன. சாலைகளில் அதிக வாகனங்கள் இல்லை, பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. பேருந்துகள் செல்கின்றன. ஆயினும் மிகக் குறைவான பயணிகளுடன்.

ஐரோப்பாவில் வசந்த காலம் தொடங்குவதால் வெயில் அதிகரித்தல் என்பது கூடுதலாக நன்மை தரும். அதோடு ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டிருக்கும் அவசரநிலை கட்டுப்பாடுகள் மக்களிடையே நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் என்பதாலும் ஓரளவு இம்மாத இறுதிக்குள் நிலைமை ஐரோப்பாவை பொறுத்தவரை பாதிப்பிலிருந்து குறைந்துவிடும் என்று கருத தூண்டுகிறது.

இன்றைய நிலையில் ஐரோப்பாவில் இத்தாலி, இங்கிலாந்து பிரான்சு ஆகிய மூன்று நாடுகள் பாதிப்பினை அதிகம் சந்தித்த நாடுகளாக உள்ளன.

வாட்டிக்கன் வழிபாட்டிற்கு மக்கள் வருவதை தடுத்துள்ளது. புனித வெள்ளி தொடர்பான வழிபாடுகள் அனைத்தையும் போப் அவர்களே தனியாக நிறைவேற்றுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசுகள் ஏற்படுத்தும் கட்டுப்பாடுகள் ஒருவகையில் மனிதர்களாகிய நமக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் கூட, இத்தகைய காலகட்டங்களில் நம் ஒவ்வொருவரது உடல்நிலையைக் கவனத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை நாம் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.

நமது தமிழ் உணவில் பயன்பாட்டில் உள்ள எலுமிச்சை பழம், தேன், கொய்யா, பூண்டு, இஞ்சி, வெங்காயம், நிலவேம்பு, மஞ்சள் போன்ற மூலிகைகள் நிச்சயம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

எனது ஜெர்மானிய நண்பர்கள் பலருக்கும் பூண்டு இஞ்சி வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றையும் எலுமிச்சம் பழத்தையும் தினமும் சாப்பிட சொல்லி இருக்கின்றேன். இங்கே ஜெர்மானியர் பலருக்கும் பூண்டை கண்டால் ஒரு அலர்ஜி இருக்கும்.. ஆயினும் இத்தகைய வேளையில் கண்டிப்பாக பூண்டு இஞ்சி வெங்காயம் ஆகியவை உணவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை என் ஜெர்மானிய நண்பர்களுக்கு வலியுறுத்திச் சொல்லி இருக்கின்றேன். என் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் சொல்லி இருக்கின்றேன்.

மருத்துவ ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதால் இந்த வார இறுதிக்குள் உலகளாவிய நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டிற்குள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. -சுபா

No comments:

Post a Comment