Monday, October 31, 2011

தென்னிந்திய சினிமா கலைஞர்களின் நிகழ்ச்சி

ஐரோப்பாவில் என்றாவது ஒருமுறை தென்னிந்திய சினிமா கலஞர்களின் நிகழ்வுகள் நடப்பது வழக்கம். அப்படியே ஏற்பாடு செய்து நடந்தாலும் பெறும்பாலும் லண்டன், சுவிஸர்லாந்தில் பெர்ன் நகரிலோ அல்லது ப்ரான்ஸில் பாரிஸிலோ நடைபெறுவது உண்டு. ஒரு மாற்றமாக ஸ்டுட்கார்ட் நகரில் நேற்று ஒரு இசை நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. சனிக்கிழமை எனக்கு மின்னஞ்சலில் வந்திருந்த தகவலை வைத்து தொலைபேசியில் அழைத்து விசாரித்ததில் நிகழ்ச்சி நடைபெறுவது உண்மைதான் என்று உறுதியானதும் எனக்கும் ஒரு டிக்கெட் பதிவு செய்து கொண்டேன்.

லக்‌ஷ்மன் ஸ்ருதி இசைக் குழுவினர் பிரபல தமிழ் சினிமா பாடகர்கள் ஷைந்தவி, மாலதி, க்ரிஷ், ஹரிசரன் ஆகியோருடன் வந்திருந்து நிகழ்ச்சியை நடத்தினர்.






தொலைபேசியில் அழைத்து விசாரித்த போது மாலை 4 மணிக்கு நிகழ்வு என்று தெரிந்து சரியாக நான்கு மணிக்குச் சென்று விட்டேன். நான் எதிர்பார்த்ததற்கும் மாறாக ஒரு துருக்கியர்கள் திருமண மண்டபம் போன்ற ஒன்றில் இந்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. ஏறக்குறை 4:30 மணிக்குத்தான் கதவை திறந்து உள்ளே அனுமதித்தனர். உள்ளே அனுமதிக்கப்பட்டாலும் மேடையில் கலைஞர்களின் இசைக் கருவிகள் ஒழுங்கு செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் மாலை 6:20க்குத் தான் நிகழ்ச்சியைத் தொடங்கினர். அதில் பல தொழில் நுட்பச் சிக்கல்கள். ஏற்பாட்டில் நிகழ்ந்த சிற்சில பிரச்சனைகள் சரியான நேரத்திற்கு நிகழ்ச்சியை ஆரம்பிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்தி விட்டது.

நிகழ்ச்சியை ஆரம்பிக்க சிங்கையிலிருந்து வந்திருந்த ஒரு நடனக்குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது. நடனம் ஏமாற்றமாகவே அமைந்து விட்டது. பாடகர்களில் முதல்பாடலை ஆரம்பித்து வைத்தார் ஷைந்தவி. மிக அருமையான குரலில் இனிமையாக குறையொன்றுமில்லை என்ற கீர்த்தனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பாடகி மாலதி ஒரு பாடல் பாட பாடகர் ஹரிசரன் வந்து ஒரு சினிமா பாடலை பாடினார். அதற்குப் பிறகு பாடகர் க்ரிஷ் டி.ஆர்.ராஜேந்திரனின் சலங்கையிட்டாள் ஒரு மாது எனும் பாடலை பாடி மகிழ்வித்தார். இவருக்கு மிக நல்ல தமிழ் உச்சரிப்பு. ஏனைய சினிமா பிரபலங்கள் போல் இல்லாமல் தயங்காமல் மிகச் சரளமாகத் தமிழ் பேசுகின்றார். அத்துடன் மேடையை விட்டுடிறங்கி வந்து பொது மக்களில் சிலரையும் பாட வைத்து கலாட்டா செய்து வந்திருந்தவர்களை மகிழ்ச்சி படுத்தினார்.




திரு.லக்‌ஷ்மணன் நல்ல மிமிக்ரி கலைஞர் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. மிக நல்ல திறமையுடயவர். எல்லோரும் ரசித்து சிரிக்கும்படி மிமிக்ரி செய்து காட்டினார்.

அத்தனை பிரச்சனைகளையும் மேடையில் இருந்து சமாளித்துக் கொண்டே நிகழ்ச்சியை முடிந்தவரை நல்ல முறையில் கொண்டு செல்ல ப்ரயத்தனம் செய்து கொண்டிருந்தார். இடையிடையே மைக் செட் ஏற்பாடு செய்யும் ஊழியர் குறுக்கிட்டு தனது வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் பொறுமையுடன் அதனையும் சுவாரஸியமாக மாற்றி நிகழ்ச்சியைக் கொண்டு சென்றார். அதறகு எனது பாராட்டுக்கள்.


இந்த பாடகர்களோடு சிறுமி அமுதா, குமாரி.பிரியா ஆகியோரும் மிக அருமயான பாடல்களை வழங்கினர்.

நேரம் அதிகமாகிவிட்டதால் நான் இரவு 9 மணிக்கு புறப்பட்டு விட்டேன். நிச்சயம் மேலும் 2 மணி நேரங்கள் நிகழ்ச்சி நடைபெற்றிருக்கும் என்றே நினைக்கிறேன்.

அடுத்த முறை இம்மாதிரி நிகழ்வுகளை செய்ய வருபவவர்கள் ஒரு நாள் முன்னரே வந்து தயாரிப்பு ஏற்பாடுகளையும் சரியாக இருக்கின்றதா எனக் கவனித்துக் கொள்வது கலைஞர்கள் எந்த தடங்கலும் பிரச்சனையும் இல்லாமல் நிகழ்ச்சிகளை நடத்த உதவும். இதனை மனதில் கொண்டு செயல்பட்டால் தரமான இந்த இசைக் கலைஞர்கள் தங்கள் படைப்புக்களை திருப்தியாகச் செய்து முடித்து மன மகிழ்ச்சியுடன் திரும்பலாம்.

படங்கள்...



சிங்கை நடனக் குழுவினர்



சிங்கை நடனக் குழுவினர்



இசைக்குழுவினர்



செல்வி.அமுதா



பாடகர் க்ரிஷ் மற்றும் திரு.லக்‌ஷ்மன்



பாடகர் ஹரிசரன்



பாடகி ப்ரியா







அன்புடன்
சுபா

No comments:

Post a Comment