Saturday, November 10, 2007

பறங்கிக்காய் கண்காட்சி

கண்காட்சிகள் பலவிதம். இங்கு ஜெர்மனியில் லுட்விக்ஸ்புர்க் நகரில் கடந்த 2 மாதங்களாக பொதுமக்கள் பார்வைக்காக ஏற்பாடாகியிருந்த பறங்கிக்காய் கண்காட்சி கண்ணுக்கு விருந்தாக அமைந்திருந்தது. 31 ஆகஸ்டு தொடங்கி 4 நவம்பர் வரை இந்த கண்டகாட்சி நடைபெற்றது. உலகின் எல்லா கண்டங்களிலும் காணப்படும் மிருகங்களின் சாயலில் பறங்கிக்காய்களைக் கொண்டு மிருகங்களின் வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சி லுட்விக்ஸ்புர்க் அரண்மனையின் மலர் பூங்காவின் ஒரு பகுதியில் அமைக்கட்டிருந்தது. 500,000க்கும் மேற்பட்ட பறங்கிக்காய்கள் இந்த கண்காட்சியில் பயண்படுத்தப்ப்பட்டிருந்தன. அத்தோடு உலகின் பல மூலைகளிலிருந்து தருவிக்கப்பட்ட 400 வித்தியாமான் பறங்கிகள் பெயரிடப்பட்டு கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்படிருந்தன.


இந்த கண்காட்சியின் போது மிகப் பெரிய கணமான பறங்கிக்க்காய்களுக்கான போட்டியும் சேர்ந்தே நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் கணமான பறங்கிக்க்காய்க்கான பரிசை பெல்ஜியம் தட்டிச் சென்றுள்ளது. இந்த பறங்கிக்காயின் எடை 583 kg.

கண்காட்சியின் மத்தியில் கூடாரம் அமைத்து பறங்கிக்காய்களைக் கொண்டு சமைத்த உணவு வகைகளையும் விற்பனைக்கு வைந்த்திருந்தனர். பறங்கிக்காய் சூப், பரங்கிக்காய் பர்கர், பறங்கிக்காய் கேக் என பல வகைகள். கண்காட்சிக்கு வருபவர்கள் வாக்கிச் செவதற்காக பறங்கிக்காய்களைக் குவித்து வைத்திருந்தனர். இந்த பறங்கிக்காய்களில் பொதுவாக இரண்டு வகை உண்டு. ஒன்று சமையலுக்கு பயன்படுவது. மற்றொன்று வெறும் அழகுக்காக வளர்க்கப்படுவது. ஆக, வாங்கும் போது எந்த வகை பறங்கிக்காய் வாங்குகிறோம் எனத் தெரிந்து வாங்குவது முக்கியம்.

இந்த கண்காட்சிக்குச் சென்ற போது எடுத்த புகைப் படங்களை எனது வலைப்பக்கத்தில் சேர்த்திருக்கிறேன். அவற்றை இங்கே காணலாம்.



இந்த நிகழ்ச்சியைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள:

Saturday, April 23, 2005

பால் மரக் காட்டினிலே!



நீண்ட இடைவெளிக்குப் பிற்கு இடையில் சில நாள் ஓய்வு கிடைத்தது. கடந்த முறை இண்டியாவர்த்தா இணையத்தளத்தின் வழி வாங்கியிருந்த புத்தகங்களில் சிலவற்றை படிக்கும் வாய்ப்பாக எனக்கு அமைந்தது. பால்மரக்காட்டினிலே - அகிலன் எழுதிய ஒரு நாவல். மலேசிய தோட்டப்புர வாழ்க்கை பின்னனியை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஒரு நாவல் இது.

கதை முழுவதையும் படித்து முடித்த போது மலேசிய தோட்டப்புர மக்களின் வாழ்க்கையைக் கண்களால் பார்ப்பது போலவே இருந்தது. பல இடங்களில் தென்படும் மலாய் மொழி கலந்த மலேசியத்தமிழின் பிரயோகம், இந்த தோட்டத்திலேயே இருந்து கதை கேட்பது போன்ற எண்ணத்தை வரவழைக்கின்றது. கதைக்குக் கருவாக அவர் எடுத்திருக்கும் தோட்டத் துண்டாடல் பிரச்சனை என்பது மலேசிய தோட்டத்தொழிலாளர்களை மிக மோசமாக பாதித்த ஒரு வரலாற்று நிகழ்வு. இதனை கதையாகக் கொண்டு இவர் வடித்திருக்கும் பாங்கு நெஞ்சைத் தொடுகின்றது என்றே சொல்லலாம்.

மலேசியாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பினாங்குத்தீவிலேயே பிறந்து வளர்ந்த எனக்கு தோட்டப்புற வாழ்க்கை பரிட்சயமற்ற ஒன்று என்றே சொல்ல வேண்டும். இளம் வயதில் மலேசிய இந்து சங்கத்தின் சார்பிலும், பினாங்கு பயனீட்டாளர் சங்க சார்பிலும் வார இறுதி நாட்களில் தோட்டப்புறங்களில் சமூக சேவைக்காக சென்ற நாட்களில் பினாங்குக்கு அருகாமையில் உள்ள சில தோட்டங்களுக்கு அவ்வப்போது சென்ற அனுபவம் எனக்கு உண்டு. ஆனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையை இதுவரை நான் ஆழமாக கண்கானித்ததில்லை. இந்த நாவல் அந்த அனுபவத்தை அழகாக வழங்கியிருக்கின்றது.

நாவலில் வருகின்ற கதாபாத்திரங்களில் பாலன், கணேசன், கண்ணம்மா, தலைமை ஆசிரியர் சண்முகம், முருகன், வேலம்மாள், ராதா, முத்து, செல்லம்மா ஆகிய அனைத்து காதாபாத்திரங்களும் நாவலை படித்து முடித்த பின்னரும் யோசிக்க வைக்கும் கதாபாத்திரங்கள். கிராம இளைஞன் பாலன் மனதில் தோன்றும் சமூக பிரக்ஞை மனதைத் தொடுகின்றது. வாழ்க்கையையே தோட்டப்புற மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கும் அவனது கதாபாத்திரம் எனது மலேசிய நாட்டில் நான் சந்தித்த சிலரை எனக்கு மீண்டும் ஞாபகத்திற்குக் கொண்டு வராமலில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கூட மலேசியாவிற்குத் தமிழகத்திலிருந்து குடியேறிய மக்களின் வாழ்க்கை பல வகையில் இன்னல்களுக்கு ஆட்பட்டிருந்தது என்பதே உண்மை. 80களின் ஆரம்பத்தில் மலேசிய தேசிய பலகலைக்கழக பேராசிரியர் (தமிழர்) ஒருவரின் முயற்சியில் வெளிக்கொணரப்பட்ட செலாயாங் தமிழ் மக்களின் வாழ்க்கை பிரச்சனை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. படிப்படியாக நாடு முன்னேறிய போதிலும் இன்றளவும் கூட தமிழ் மக்கள் செம்பனை மற்றும் ரப்பர் மரத்தோட்டங்களில் (காடுகளில்) வாழும் வாழ்க்கை மனதை கசிய வைக்கும் ஒன்று. மக்களின் அறியாமை போக்கப்படும் போது தான் மாற்றம் ஏற்படும் என்பதை இந்த நாவல் நன்றாகக் காட்டுகின்றது.


ஒருவர் பிறர் நலனுக்காக யோசித்து பாடு படும் போது அவர்களை தாழ்வாக விமர்சனம் செய்து மனதை நோகடிப்பது மற்றும் தனது சுய நலனுக்காக தனது இனத்திற்கு மாறாக செயல்படுவது போன்ற விஷயங்களெல்லாம் இந்த நாவலில் காட்டபப்டுகின்றன. இது இன்றளவும் மாறாமலிருக்கும் ஒன்று. மலேசிய தமிழ் சமூக அமைப்புக்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனது நண்பர்களோடு பேசும் போதெல்லாம் இப்படிப்பட்ட சில நபர்களின் செயல்களைப் பற்றியும் நாங்கள் பேசி அலசுவதுண்டு. இது தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சாபக்கேடு என்று அடிக்கடி பத்திரிக்கையில் பணியாற்றும் ஒரு நண்பர் குறிப்பிடுவார்.


இந்த நாவலின் முதல் பதிப்பு 1977ல் வெளிவந்துள்ளது. தாகம் வெளியீடாக வந்திருக்கும் இந்த நாவலை பலர் ஏற்கனவே படித்திருக்கக் கூடும். மலேசிய தோட்டப்புற தமிழர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நாவல்.


குறிப்பு: மலேசிய தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனைகளை அலசும் ஒரு வலைப்பக்கத்திற்குச் செல்ல http://www.geocities.com/sounvx/plantation_workers.htm

Saturday, April 16, 2005

கர்நாடக இசைக்கச்சேரி





ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்து இங்கு ஜெர்மனியில் கர்நாடக இசை வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஏப்ரல் இரண்டாம் திகதி ப்ராங்பர்ட் நகரத்தில் ஒரு நாள் முழுவதும் இடைவிடாது தியாகராஜ கீர்த்தனைகள் பாடப்பட்டு மிகச்சிறப்பாக தியாகராத ஆராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக பிரத்தியேகமாக வந்திருந்த இசை வித்துவான்களிள் திரு.அசோக் ரமணியும் ஒருவர். இந்த நிகழ்ச்சிக்காக இங்கு வந்திருந்தவர் ஐரோப்பாவில் முக்கிய சில நகரங்களில் இசை கச்சேரி நடத்திக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் புது வருடத்தை இசையோடு வரவேற்பதற்காக அவரது கச்சேரியை இங்கு ஸ்டுட்கார்ட் சித்தி விநாயகர் ஆலத்தில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.




திரு.அசோக் ரமணி கர்நாடக இசை உலகிற்கு தமிழ் கீர்த்தனைகளை வழங்கிய முக்கியமான ஒருவராகிய பாபநாசம் சிவன் அவர்களின் பேரன். இவர் கர்நாடக இசையோடு மிருதங்க இசைக்கருவியை வாசிக்கவும் கற்றவர். வாய்ப்பாட்டிலும் மிருதங்கத்திலும் தமது 15வது வயதிலேயே அரங்கேற்றம் செய்து புகழ் பெற்றவர். இவரது இசை நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8:30 அளவில் தொடங்கி இடைவிடாது 10:30 மணி வரையில் நிகழ்ந்தது.

ஸ்டுட்கார்ட் நகரைப் பொருத்தவரை இம்மாதிரியான இசை நிகழ்வுகள் நடைபெருவது அபூர்வம் என்றே சொல்லலாம். வருடத்திற்கு அதிகபட்ஷம் 2 முறை தமிழகத்திலிருந்து யாராவது இங்கு வந்து தலையைக் காட்டினால் உண்டு. இல்லையென்றால் தமிழ் தொலைக்காட்சி வழியாகத்தான் கர்நாடக இசையை ரசிக்கமுடியும். அந்த வகையில் இந்தக் குறையையும் போக்குவதாக அமைந்தது இந்த நிகழ்வு.


பிரபாவதி குமரன், திரு.தமிழ்குமரன், திரு.அசோக் ரமணி, சுபா, திரு.யோக புத்ரா, அபிராமி

கச்சேரியின் முக்கியமான அம்சம், எல்லா பாடல்களுமே தமிழ் கீர்த்தனைகள். மனதை கொள்ளை கொண்டன இந்த தமிழ் கீதங்கள். பலருக்கும் தெரிந்த என்ன தவம் செய்தனை யசோதா, கந்தா வா, தீராத விளையாட்டுப் பிள்ளை, அலைபாயுதே கண்ணா, அகிலாண்டேஸ்வரியே என்ற பாடல்களோடு மேலும் பல தமிழ் கீர்த்தனைகளும் அடங்கியிருந்தன. இவருக்குப் பக்க வாத்தியமாக ஜெர்மனி டோ ர்ட்முண்ட் நகரைச் சேர்ந்த மிருதங்க வித்வான் பிரணவநாதன், வயலின் பிரணவன் மற்றும் கஞ்சிராவிற்கு ஒரு ஜெர்மானியரான ப்ராங்போர்ட்டைச் சேர்ந்த ஹெர்பெர்ட் லாங் ஆகியோர் அமைந்திருந்தனர்.



கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒன்றினை கவனிக்க முடிந்தது. முன்பெல்லாம் சிறுவர்கள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டும், பேசிக் கொண்டும் இருப்பார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியின் போது பல சிறுவர்கள் சத்தம் போடாமல், அங்கும் இங்கும் ஓடாமல் பாட்டுக்குத் தாளம் போட்டு தலை அசைத்து ரசித்துக் கொண்டிருந்தனர். ஆலயத்தில் தொடர்ந்து இசை பயின்று வரும் இந்தச் சிறுவர்கள் இப்போது இசையை ரசிக்கத் தாமாகவே பழகி விட்டனர். இதைப் பார்க்கும் போது மனதிற்கு பெறும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இம்மாதிரியான கச்சேரிகள் இங்கு தொடர்ந்து நடைபெற வேண்டும். இதனால் இங்கு வாழும் தமிழர்களும் இசையோடு ஒன்றி வாழும் வாய்ப்பு நிச்சயம் வளரும்.

Saturday, March 5, 2005

மாரியாத்தா..!

அலுவலகத்தில் நேற்று ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்ததது. அவளது பெயர் மாரியாத்தா. தமிழ் பெயராக இருக்கிறதே தமிழ் பெண்ணோ என்று நினைத்து விட வேண்டாம். மேற்கத்திய பெண்தான் இவள். இவள் பெயர் என்னை இவளைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ளவேண்டும் என்று தூண்டியது. சும்மா இருக்காமல், அவளிடமே விசாரிக்க ஆரம்பித்து விட்டேன்.

அவள் ரோமானியப் பெண். ரோமானிய நாட்டிலிருந்து வந்து இப்போது இங்கு எனது அலுவலகத்திலேயே ஒரு பிரிவில் வேலை செய்து கொண்டிருக்கின்றாள். அவள் பெயர் தமிழ் பெயர் போலவே இருக்கின்றது என்று சொன்னேன். அவளுக்கும் ஆச்சரியம். எழுதும் போது Mariatta என்று எழுதுகிறாள். உச்சரிக்கும் போது 'மரியட்டா' என்றில்லாமல் "மாரியாத்தா'' என்று தான் உச்சரிக்க வேண்டுமாம்.

தமிழில் மாரியம்மா, மாரி, மாரியாத்தா என்றெல்லாம் இந்தப் பெயர் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதே போல மலாய் இனத்திலும், மரியம், மரியா என்றும் ஆங்கிலத்தில் மேரி என்றும் ஜெர்மானிய பெண்களிடையே மரிலூயிஸா, மரியானா, மரியா என்றும் இருக்கின்றது. ஆனால் ரோமானிய மொழியிலும் இதே பெயர் தமிழ் பெயர் போலவே இருப்பதைக் கேட்க ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

தமிழ் மொழியைப் பொறுத்தவரை இப்போதெல்லாம் இந்தப் பெயர் பிரபலமான ஒன்றல்ல. மாரியாத்தா என்றவுடனேயே நமது மனகண்ணில் மாரியம்மன் தான் தோன்றுவாள். மலேசியாவில் ரப்பர் மரத்தோட்டங்களிலும் செம்பனை மரத்தோட்டங்கள் உள்ள இடங்களிலும் சிறிய சிறிய கோயில்கள் (மரத்தடி கோயில்கள்) ஏராளம் இருக்கும். பெரும்பாலும் வீரபத்திரன், மாரியம்மன் தான் வழிபடு தெய்வங்கள். அதிலும் மாரியம்மன் கோயிலென்றால் அதற்கு வருவோரும் அதிகம். திருவிழாக்களின் போது ஆட்டை பலிகொடுத்து பெரிய அளவில் விருந்து சமைத்து கிராமத்தில் இருக்கும் தமிழர்களெல்லாம் ஒன்று கூடி விழா கொண்டாடும் நிலை இன்னமும் மலேசிய கிராமங்களில் உள்ளது. கிராமங்களில் சில இடங்களில் இந்த தெய்வத்தை நினைத்து, தங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு ஒரு சிலர் மாரியம்மா என்ற பெயரை வைக்கின்றனர். ஆனால் இது குறைந்து கொண்டுதான் வருகின்றது. ஜெர்மனியைப் பொறுத்தவரை நிலமை அப்படியல்ல. மரியா, மரியானா என்பவை ஜெர்மானியர்களிடையே இப்போதும் பிரபலமான பெண்களுக்கான பெயர்கள் தான்.

அலுவலகத்தில் மாரியாத்தாவை பார்க்கும் போதெல்லாம் மாரியம்மனை நினைக்காமல் இருக்கமுடியுமா?

Sunday, February 27, 2005

ஆஷாடபூதி.... ????

சில நாட்களுக்கு முன்னர் இந்த மாத (Feb) திசைகள் இதழில் திரு.நரசய்யா எழுதியிருந்த மூச்சை நிறுத்திவிடு என்ற தலைப்பிலான சிறுகதையைப் படித்தேன். கடந்த சில நாட்களாக எனது மனதில் இந்தக் கதையைப் பற்றிய சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒரு உண்மை சம்பவத்தை கதையாக வடித்திருக்கின்றார் திரு.நரசய்யா. அருமையான கதை! கதையை விமர்சிப்பது இந்த பதிவின் நோக்கமல்ல. இதனை ஒட்டி என் மனதில் தோன்றிய எண்ணங்களைத்தான் இங்கு பதிவாக்க விரும்புகிறேன்.


மனதில் தோன்றுகிற எல்லா எண்ணங்களையும் நம்மால் உண்மையிலேயே எந்த பாகுபாடும் இல்லாமல் ப஡ர்க்க முடிகின்றதா என்பதுதான் கேள்வி. மனிதர்களாக பிறந்த அனைவருமே சலனங்களுக்கும் சபலங்களுக்கும் ஆட்பட்டவர்களே. ஆனால் அந்த சலனத்தையும் சபலத்தையும் நம்மால் உற்றுப் பார்த்து நானும் தவறு செய்யும் ஒரு மனிதர்தான் என்று நம்மால் சொல்லிக் கொண்டு இந்த நிலையிலிருந்து வெளியேறி நம் அழுக்குப் படிந்த மனத்தின் ஒரு பகுதியை சுத்தம் செய்ய துணிவு இருக்கின்றதா என்பதும் ஒரு கேள்வி. பொதுவாகவே நமது மக்களிடையே மேற்கத்தியர்கள் என்றால் இரண்டு விதமான பொதுப்படையான எண்ணம் தான் இருக்கின்றது. ஒன்று மேற்கத்தியர்கள் அறிவியல், தொழில்நுட்பம் பொருளாதாரம் ஆகியற்றில் மிக மிக மிக உயர்ந்தவர்கள் என்பது. மற்றொன்று மேற்கத்தியர்கள் கலாச்சாரம், பண்பாடு, குடும்ப ஒழுக்கம் ஆகியற்றில் மிக மிக குறைந்தவர்கள் என்பது. வெள்ளைக்காரிதானே, அவளுக்கு உடம்பு தெரியத் தெரிய உடை உடுத்திக் கொள்ளத்தான் தெரியும்; அவர்களுக்கெல்லாம் கணவன் குடும்பம் என்ற பக்தி பண்பாடு எல்லாம் சுத்தமாக இருக்காது, என்று மேம்போக்காக பேசுபவர்கள் பலர் நம்மிடையே உண்டு. இப்படி பிறரை தாழ்வாக சுட்டும் நமது விரல்கள் நமது பண்பாட்டில் உள்ள ஓட்டைகளை சுட்டிக் காட்ட எழுகின்றனவா?
மிகத் துரிதமாக வாழ்க்கைத்தரம் உயர்ந்து கொண்டிருக்கும் இந்த கால கட்டத்திலும் நம்மிடையே எத்தனையோ தாழ்வான குணங்கள் மனதில் பதிந்திருக்கின்றன, மாற்றம் அடையாமலேயே! ஜாதி என்ற பெயரில் மக்களை பிரித்து வைத்து சொல்லாலும் செயலாலும் துன்பப்படுத்தும் நிலை இன்று மாறி விட்டதா? ஆண் பெண் என்று பேதம் பிரித்து வைத்து ஆலயத்திலும், சடங்குகளிலும் கலாச்சார நிகழ்வுகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் குறைந்து விட்டனவா? திருமணம் செய்து கொண்ட பெண்களில் பலர் சுயமாக, சுதந்திரமாக இன்பகரமான வாழ்க்கையை வாழ முடிகிறதா? சுய முடிவு எடுக்கும் சுதந்திரம் இருக்கின்றதா? இந்தக் கேள்விகளெல்லாம் பலர் பல நேரங்களில் கேட்ட கேள்விகள் தான். இவற்றையெல்லாம் படிக்கிறோம், கேட்கிறோம் ஆனால் வாழ்க்கையில் நமக்கென்று வரும் போது எப்படி செயல்படுகிறோம் என்பது தான் கேள்வி.
மலேசியாவில் இருக்கும் என் தோழி ஒருத்தியோடு சில நாட்களுக்கு முன்னர் பேசிக் கொண்டிருந்தேன். 6 வருடக் காதல் இப்போது இனிக்கவில்லை. கசக்க ஆரம்பித்துவருகிறது என்று புலம்பினாள். தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கின்றது என்று அழுதாள். இவளது காதல் நிலவரம் இப்போதுத஡ன் எனக்குத் தெரிய வந்தது. அதுவும் நானே வற்புறுத்திக் கேட்ட பிறகுதான் என்னிடம் சொல்ல அவளுக்கு தைரியம் வந்தது. எனக்கு மிகுந்த வருத்தம். "இப்படி நெருக்கமாக பழகும் என்னிடமே இத்தனை நாள் இந்த பிரச்சனையை மறைத்து உனக்குள்ளேயே வருந்திக்கொண்டிருந்தாயே. உன்னிடம் என்னுடைய எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்து கொண்டிருக்கின்றேனே. அதில் என்னுடைய சலனங்களும் சபலங்களும் கூட அடங்குமே. இப்படியிருக்க நீ மட்டும் ஏன் என்னிடம் மறைத்து மறைத்து இப்படி ஏமாற்றுகிறாய் என்று மனதில் பட்டதை கேட்டு விட்டேன். அதற்கு அவள் தந்த பதில் இதுதான். "நீ இப்போது மலேசியக்காரி இல்லை. நீ வெளியூர்காரி. உன்னுடைய மனதில் தோன்றும் எண்ணங்களை நீ சுலபமாக வெளியிட முடியும். இதனால் உனக்கு உன் சுற்றுப் புறத்தில் உள்ளவர்களால் உனக்கு பாதிப்பு ஏற்பட்டாது. ஏனென்றால் அவர்களுக்கு உன்னுடைய சொந்த விஷயம் என்பது உன்னுடைய தனிப்பட்ட விஷயம். உன் மனமும் இந்த வாழ்க்கை முறைக்கு ஏற்றார்போல அப்படி பக்குவப்பட்டு விட்டது. உன்னால் தைரியமாக பல விஷயங்களைச் சொல்ல முடியும். ஆனால் என் நிலமை அப்படியல்ல. என்னைச் சுற்றி உள்ளவர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மிக மிக கவனமாக பார்த்து வருகின்றார்கள். இதில் சின்ன தவறு ஏற்பட்டாலும் அதனால் என்னுடைய மானமே போய்விடும். நான் மறைத்து மறைத்து தான் வாழ முடியும். இல்லாவிட்டால் இந்த சமூகத்தில் என்னுடைய பெயர் கெட்டுவிடும். காமம் சார்ந்த விஷயம் என்பது மக்களுக்கு பேசி அலசுவதற்கு சுவையான ஒரு விஷயம். அதிலும் மற்ற பெண்களைப் பற்றி பேசுவதென்றால் ஆண் பெண் இருபாலருக்குமே அல்வா சாப்பிடுவது மாதிரி" என்று சொன்னாள். இப்படி சொல்லும் இவள் காதலிப்பது திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள மனைவியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் ஒருவரை.
முதலில் உருகி உருகி காதலித்த இந்த திருமணமானவருக்கு இப்போது தான், தான் செய்வது தவறு என்று புரிய ஆரம்பித்திருக்கிறதாம். அதனால் இந்த உறவை படிப்படியாக முறித்துக் கொள்ளலாமே என ஆலோசனை கூறியிருக்கிறார். இவரை நம்பி, வந்த வரனையெல்லாம் தடுத்துவிட்ட இந்த நாற்பதை எட்டும் பெண் இப்போது தலையில் இடி விழுந்த மாதிரியான அதிர்ச்சியில் இருக்கிறாள். அவருக்கும் உனக்கும் தெரிந்த நண்பர்களிடம் கூறி பேசிப் பார் என்றேன். "வெளியே சொல்லமுடியாது சுபா. அவரை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். என்னுடைய பெயர் தான் கெட்டுப் போகும். சேலையில் முள் விழுந்தாலும், முள்ளில் சேலை விழுந்தாலும் சேலைக்குத்தான் பாதிப்பு. அப்படிப்பட்ட சமுதாயத்தில் தான் நான் வாழ்கிறேன்" என்றாள் என் தோழி.
என்ன நியாயம் இது? ஏன் இந்த பாகுபாடு. உண்மையிலேயே நமது சமுதாயம் இந்த பாகுபாட்டை ஆதரிக்கின்றது என்றால் இது ஒரு குறையுள்ள சமுதாயம் தான். பண்பாட்டில் நாம் உயர்ந்தவர்கள் என்று பேசுகின்றோம். எப்போது இம்மாதிரியான மனித பாகுபாடு, ஜாதி பாகுபாடு, ஏற்றத்தாழ்வு எல்லாம் நமது மக்கள் சிந்தனையிலிருந்து ஒழிகின்றதோ அப்பாதுதான் நாம் பண்பாட்டில் உயர்ந்தவர்களாக நம்மை கருதமுடியும். நமது மனதில் உள்ள அழுக்கான சிந்தனைகளை வெளியே காட்டாமல் வெற்றிகரமாக மறைத்து வைத்துக் கொண்டு, மற்றவர்கள் வாழ்க்கையில் நிகழ்கின்ற சிறிய சிறிய பிரச்சனைகளையும் பேசி பேசி அவர்களைத் துன்பப்படுத்துவதுதான் பெரும்பாலும் நிகழ்ந்து வருகின்றது. இதையெல்லாம் யோசிக்கும் போது என் தோழிக்காக மனம் வருந்தாமல் இருக்க முடியவில்லை!

Monday, February 21, 2005

பீஸா போட்டி



சனிக்கிழமை உள்ளூர் ஜெர்மானிய தொலைக்காட்சி சேனல் ZDF -ல் ஒலியேறிய Wetten Dass நிகழ்ச்சியில் சுவாரசியமான ஒரு நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது. இது மக்களிடையே புதைந்துள்ள வித்தியாசமான திறமைகளை வெளிக்காட்டும் ஒரு நிகழ்ச்சி.

இதில் கலந்து கொள்ள 4 குழுக்கள்/தனிபர் வந்திருந்தனர். அதில் ஒன்று என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.

2 நண்பர்கள். இவர்களுடைய திறமை என்னவென்றால் எந்த விதமான ரெடி மேட் பீஸா (Pizza) வாக இருந்தாலும் கண்களை மூடிக் கொண்டே அந்த பீஸாவின் பெயரை சொல்லிவிடுவதுதான். இந்த இருவரும் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் மிக அதிகமாக பீஸாவையே முக்கிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையிருந்ததால் அவர்களுக்கு உள்ளூரில் கிடைக்கக்கூடிய எல்லா brand பீஸாவும் அத்துப்படி. "எந்த பீஸாவாக இருந்தாலும் கொடுங்கள். கண்களை மூடிக் கொண்டு அது என்ன பீஸா என்று சொல்லி விடுவோம்" என்று சவால் விட்டுக் கொண்டு வந்திருந்தனர்.

இவர்களுக்கு நான்கு வாய்ப்புக்கள் தான் வழங்கப்படும். இந்த நான்கிலும் சரியான பீஸாவை பெயரைச் சொன்னால் அடுத்த கட்ட சோதனைக்குச் சென்று பிரமாதமான பரிசுகளைத் தட்டிச் செல்ல முடியும்


இவர்களை சோதிப்பதற்காக ஜெர்மனியில் கிடைக்கக்கூடிய ஏறக்குறைய 200 விதமான பீஸாக்களை வரவழைத்து அதனை பெரிய குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டனர். இது கண்ணாடியால் ஆன குளிர்சாதனப் பெட்டி. நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கும் தெரியும் வகையில் பீஸாக்களை இந்த கண்ணாடி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டனர். இதில் இத்தாலியன், ஆசியன், கொரியன், அமெரிக்கன் பீஸாக்களும் அடங்கும். இப்போது மிகப் பிரபலமாக உள்ளூர் அங்காடிகளில் கிடைக்கக்கூடிய Big Pizza வகைகளும் அடங்கும்.




இரண்டு நண்பர்களையும் கண்களைக் கட்டி ஒருவருக்கு முன் ஒருவரை அமர வைத்து விட்டனர். கண்கள் நன்றாக மறைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டபின் சோதனை ஆரம்பமானது. இந்த பீஸா குவியலிலிருந்து ஒன்றை எடுத்து அதன் அட்டைகளை உருவி விட்டு ஒருவர் கையில் வைக்க, அதனை விரல்களால் தொட்டுப் பார்த்தே அதில், காளான் அல்லது மிலகாய், அல்லது டூனா, காய்கறிகள் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே 4 பீஸாக்களையும் நண்பர்கள் கண்டு பிடித்து விட்டனர். ஒவ்வொரு பீஸாவையும் நிகழ்ச்சி நடத்துனர் இவர்கள் கையில் கொடுக்கும் போது எனக்கு சந்தேகம் தான். எப்படி இவர்கள் சரியாக இதன் brandஐ கண்டுபிடிக்கப் போகின்றார்கள் என்று. ஒவ்வொரு சோதனைகளையும் இரண்டு நிமிடங்களுக்குள் செய்து முடித்து வெற்றி பெற்றனர் இந்த நண்பர்கள். ஏந்த வகை பீஸா என்று கூட சுலபமாக சொல்லிவிட முடியும். ஆனால் அது எந்த brand என்று கண்டு பிடிப்பது அவ்வலவு சுலபமான காரியம் இல்லையே. சீஸ் பீஸாவிலேயே 30 வகை இங்கு கிடைக்கின்றன. அதேபோலத்தான் டூனா பீஸாக்களிலும் 20 / 30 வகைகள். இப்படியிருக்க இவர்களால் இப்படி பிரித்து இனம் கண்டு பிடிக்க முடிந்ததைப் பார்த்து என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. இதுவரை பார்த்திராத, மிக மிக ஆச்சரியப்பட வைத்த சுவாரசியமான போட்டி இது.

Saturday, February 19, 2005

வந்தது பிரச்சனை!

கடந்த ஒரு வருடமாக நான் ஸ்டுட்கார்ட் நகரத்திலுள்ள விநாயகர் ஆலயத்தில் வீணை வாசிக்கக் கற்றுக் கொண்டிருக்கின்றேன். ஆசிரியர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த இசை தம்பதியர். கணவர் வயலின் கற்றுக் கொடுக்க மனைவி வீணையும் வாய்ப்பாடும் சொல்லித் தருகின்றார். இதுவரை வகுப்பு மிக நன்றாக நடந்து கொண்டுதானிருந்தது. ஏறக்குறைய 30 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். கடந்த வாரம் வகுப்புக்குச் சென்ற போது ஆசிரியர் தம்பதிகள் வகுப்புக்களை நிறுத்தப்போவதாக சொன்ன போது அதிர்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை. காரணம் இது தான்.

முதலில் ஸ்டுட்கார்ட் நகரில் ஒரு விநாயகர் ஆலயம் இருந்தது. நிர்வாகத்தில் ஏற்பட்ட பூசலில் இந்த ஆலயம் இரண்டாகப் பிரிந்து மூலவிக்ரகத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர் ஒரு குழுவினர். அதன் பிறகு தொடக்கத்திலிருந்து இந்த ஆலயத்தை ஆரம்பித்து நடத்தி வருபவர்கள் இந்தியாவிலிருந்து சுவாமி சிலைகளை வரவழைத்து, ஒரு கட்டிடத்தின் 2ம் தளத்தில் இந்தக் கோயிலை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். மூலவிக்ரகத்தை எடுத்துச் சென்ற மற்றொரு குழுவினர் இந்த கோயில் இருக்கும் இடத்திலிருந்து 15 கிமீ தூரத்திலேயே இன்னொரு ஆலயத்தை அமைத்து அதனை பராமரித்து வருகின்றனர். இரண்டு ஆலயங்களுக்கும் ஒரே பெயர். ஒரு ஆலயத்திற்குச் செல்பவர்கள் மற்ற ஆலயத்திற்குச் செல்லக்கூடாது என்பது மாதிரியான எழுதா சட்டம் வேறு. ஆக ஒரு ஆலயத்தில் இசை வகுப்பு நடப்பதால் மற்ற கோயிலுக்குச் செல்பவர்கள் இந்த இசை வகுப்பில் கலந்து கொள்ளமுடியாத நிலை. படிப்படியாக வந்து கொண்டிருந்த 30 மாணவர்களில் பலர் நின்று விடவே இப்போது 10 மாணவர்கள் மட்டுமே ஆசிரியர் குடும்பத்திற்கு மிஞ்சியிருக்கின்றனர்.
இந்த வகுப்புக்களின் வழி தான் அவருக்கு மாத வருமானமே. இப்படிப் பட்ட நிலையில் இவர்கள் என்ன செய்ய முடியும்?


ஜெர்மனியில் பொதுவாக மூலைக்கு மூலை Volkshochschule எனப்படும் கல்விக் கூடங்கள் இருக்கின்றன. பொதுவாக இங்கு ஜெர்மானிய, ஆங்கில, ப்ரெஞ்சு போன்ற மொழிகளோடு மற்ற ஏனைய இசைக் கருவிகள் வாசித்தல், சமையல், தையல் கலை, கைவினைப் பொருட்கள் செய்யும் கலை போன்றவற்றிற்கான வகுப்புக்களும் நடக்கின்றன. ஆக எங்கள் இசை ஆசிரியரிடம் இந்த Volkshochschule மாதிரியான பள்ளிகளில் பதிந்து கொண்டு வகுப்புக்களை நடத்த ஆரம்பிக்க வேண்டியது தானே. தமிழர்கள் மட்டுமன்றி மற்ற இனத்தவரும் சேர்ந்து படித்து தெரிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்குமே என்று சொல்லிப் பார்த்தேன். அதற்கு அவர் கூறிய பதில் வேதனைக்குறியது.


இப்போது 30EUR ஒரு மாணவருக்குக் கட்டணம் விதிக்கிறோம். அதையே அங்கே செய்ய முடியாது. ஏனென்ற஡ல் குறைந்த பட்சம் 50EUR கட்டணம் வசூலிக்க வேண்டும். மற்ற இனத்தவர் நடத்தும் வகுப்புக்களின் சராசரி கட்டணம் இப்படித்தான் இருக்கின்றது. அதோடு இந்த வகுப்புக்களை நடத்த இடம் தருவதால் பள்ளி நிர்வாகத்தினருக்கும் குறைந்த பட்சத் தொகையாக (ஏறக்குறைய 100 அல்லது 200 EUR ) தரவேண்டியிருக்கும். 50க்கு கட்டணத்தை உயர்த்திவிட்டால் இப்போது வருகின்ற தமிழ் மாணவர்கள் கூட அப்போது வரமாட்டார்கள். 50 EUR என்பது மிகப்பெரிய தொகையாகிவிடும். வகுப்புக்களைத் திறமையாக சிறப்பாக நடத்த Volkshochschule பள்ளிகளில் நடத்துவது தான் சிறந்தது. ஆனால் இது எங்களுக்கு ஒரு விஷப்பரீட்சையாக முடிந்து விட்டால் எங்களுக்குத்தான் பிரச்சனை" என்று சொல்லி வருந்தினார்.


ஆக இரண்டு பிரச்சனைகள் இங்கு முன் நிற்கின்றன.

1. பிளவு பட்டுக் கிடக்கும் ஸ்டுட்கார்ட் தமிழ் மக்களால் பரிதாபமாக இந்த இசை வகுப்பு பாதியிலேயே நிற்க வேண்டிய நிலை வந்து விட்டதே என்பது.
2. தெய்வீக அனுபவத்தை ஈட்டித் தரும் இசையைக் கற்றுக் கொள்ள பணத்தை ஒரு காரணமாகக் காட்டி வகுப்புக்களுக்கு வராமல் நின்று விடுவதா என்பது.

நல்ல பண்புகளையும் நல்லனவற்றையும் தூரத்தள்ளி வைத்து வெறுப்பை வளர்த்துக் கொள்வதால் யாருக்குப் பயன்? தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த விதண்டாவாதப் போக்கினால் யாருக்கும் நண்மை ஏற்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. இழப்புக்கள் தான் அதிகரிக்கின்றன!