Thursday, March 6, 2014

பார்மஸான் சீஸ்

சீஸை நினைத்தாலே உடல் எடை போடும் என பயப்படுபவர்கள் தவிர்த்து(இவர்களும் பார்க்கலாம்.. தப்பில்லை :-) ) ஏனையோர் பார்த்து மகிழ 2 படங்கள் :-)))

2 வாரங்களுக்கு முன்னர் ஸ்டுட்கார்ட் நகரில் நடைபெற்ற மொழிகளுக்கான சிறப்பு தினத்தில் இறுதி அங்கமாக ஒரு இத்தாலிய உணவகத்தில் இரவு உணவு. அன்றைய சிறப்பு உணவு பார்மசானில் தோய்த்த ஸ்பெகட்டி.



Inline image 1

பார்மஸான் சீஸ் இவ்வளவு பெரிது நான் இது வரை பார்த்ததில்லை. இது ராட்சஸ் அளவு :-)
முதலில் சூடான கரண்டியை வைத்து மேல் பகுதியை உருக்கிறார் சமையல் நிபுணர். பின்னர் அதற்குள் ஒருவருக்கு தேவையான தயார் நிலையிலுள்ள ஸ்பெகட்டியை போட்டு கலந்து எடுத்து அதன் மேல் தயாராக இருக்கும் காளானை சேர்த்து பரிமாறுகிறார்.




Inline image 2

சமையல் நிபுணர் ஸ்பெகட்டியைக் கலப்பதை இந்தப் படத்தில் காணலாம்.
சாப்பிட ஆசை வந்ததா ..??? :-)

சுபா

Sunday, March 2, 2014

ஸ்டுட்கார்ட் விநாயகர் ஆலயத்தில் மகா சிவராத்திரி - 3

நேற்று ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் மற்றுமொரு சித்தி விநாயகர் கோயில் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

அந்தக் கோயில் ஒரு பொருட்கள் சேகரித்து வைக்கும் இடம் கோயிலாக மாற்றப்பட்டு சிறப்பாக இயங்கி வருவது. நல்ல விஸ்தாரமான இடம். உள்ளே மூலஸ்தான சித்தி விநாயகர் சன்னிதியுடன் அம்மன், முருகன், பைரவர், நர்த்தன விநாயகர், பாலகிருஷ்ணன், ஐயப்பன் சன்னிதிகளும் ஒரு வசந்த மண்டபமும் இருக்கின்றது.

சில படங்கள்..

Inline image 1
மூலஸ்தான சித்தி விநாயகர்


Inline image 3
ஐயப்பன் - 18 படிகளுடன் கொண்ட அமைப்பு




Inline image 2
வசந்த மண்டபம்


Inline image 4
பால கிருஷ்ணன், புதிதாக வந்திருக்கும் ஹனுமான் சிலை


Inline image 5
நர்த்தன விநாயகர்


சுபா

Saturday, March 1, 2014

ஸ்டுட்கார்ட் விநாயகர் ஆலயத்தில் மகா சிவராத்திரி - 2

ஸ்டுட்கார் நகரில் உள்ள ஒரு சிற்றூர் பாட் கான்ஸ்டாட். என் பல்கலைக்கழக படிப்பு முடித்து போப்லிங்கன் நகருக்கு வேலை கிடைத்து நான் குடிபெயர்ந்த போது எனக்கு இங்குள்ள இலங்கைத் தமிழ் நண்பர்களால் சித்தி விநாயகர் அறிமுகமானார்.

1999ம் ஆண்டு ஸ்டுட்கார்ட் நகரின் மத்தியில் ஒரு அலுவலக அறையில் ஒரு அலமாரிக்குள் சிறிய சித்தி விநாயகர் சிலை இருந்தது. முதல் முறை இங்கு ஒரு வெள்ளிக்கிழமை மாலை சென்று பார்த்த போது எனக்கு மனதில் ஏகப்பட்ட சந்தோஷம். 

அறை முழுதும் தமிழ் மக்கள். சிறிய அலமாரிக்குள் சுவாமி சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டாலும் எல்லோரும் கூடியிருந்து பூஜை, பஜனை, சொற்பொழிவு, பிரசாதம் என மிக சந்தோஷமான அனுபவமாக அது எனக்கு அமைந்தது. அதற்குப் பின்னர் ஒரு சிலரின் கடின முயற்சிகளின் பலனாக பாட் காண்ஸ்டாட் நகரின் மையத்தில் ஒரு அலுவலகத்தில் இரண்டாம் மாடியை வாடகைக்கு எடுத்து அதில் சித்தி விநாயகருக்குk கோயில் கட்டினர். 

அதே நேரம் இத்தமிழ் நண்பர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட,  இரு பிரிவுகளாக இவர்கள் பிரிந்து செல்ல இரண்டு சித்தி வினாயகர் கோயில் பாட் கான்ஸ்டாட் நகரில் உருவாகியது.

ஒரு கோயிலிலிருந்து அடுத்த கோயில் நான்கு கிமீ தூரம் தான்.

இலங்கையிலிருந்து கைலாசநாத குருக்கள் வந்திருந்து அயல்நாடுகளில் நிலமில்லாத மாடிக் கட்டிடங்களில் பிரகாரம் அமைக்கும் வகையில் ஆகம விதிகளை குறிப்பிட்டு எழுதி அதற்கு தக்கவாறு  இந்தக் கோயிலை அமைத்தனர். 2002ம் ஆண்டில் மிகச் சிறப்பாக இங்கே யாகங்கள் செய்பட்டு வருடாந்திர திருவிழா என கோலாகலமாக பல சிறப்பு அம்சங்கள் நிகழ்ந்தன. ஸ்டுட்கார்ட் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில்  ஏறக்குறைய 500 தமிழ் குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு விநாயகரின் அருள் நன்கு கிடைத்துக் கொண்டிருந்தது.

அடுத்த சில ஆண்டுகளில் கோயில் நிர்வாகத்தில் பிரச்சனை என தோன்ற இருந்த நண்பரகளில் இரு குழுக்களாகப் பிரிந்து விட்டனர்.

அடுத்த ஒரு சில ஆண்டுகள் ஆலய நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது. சென்ற ஆண்டும் மீண்டும் ஏதோ பிரச்சனை எழ ஒரு சிலர் பிரிந்து சென்று விட்டதாகத் தகவல் கிடைத்தது. 

இந்த ஆண்டு சிவராத்திரி பூஜைக்கு சென்றபோது ஒரு சிலரே வந்திருந்தனர். நிர்வாகத்தினருக்கும் மனதில் பல சங்கடங்கள் இருப்பது தெரிந்தது.

இங்கே பூஜையை முடித்துக் கொண்டு நானும் என் தோழி சாந்த்தாவும் அடுத்த விநாயகர் கோயிலுக்கும் சென்றோம். 

அங்கு நாங்கள் செல்லும் போது இரவு மணி 10 ஆகியிருந்தது. கோயிலில் சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

சொற்பொழிவு கேட்டு, அர்ச்சனை செய்து பிரசாதமும் பெற்று சாப்பிட்டு விட்டு இரவு இல்லம் திரும்பினோம்.

13 வருடங்களுக்கு முன்னர் சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்ட அந்த குதூகலம் இல்லையென்றாலும் ஆலயம் சென்று வரும் பாக்கியத்தை அமைத்துத் தந்திருக்கின்ரார்களே என்ற நிறைவு மனதில் எனக்கு தோன்றியது. இந்த இரண்டு கோயில்களையும்  பல பொருளாதார சிரமங்களுக்கிடையிலேயும் தொடர்ந்து  மேற்பார்வை செய்துவரும் அன்பர்களுக்கு நன்றி சொல்வதும் தேவை . இவர்கள் அனைவரது முயற்சியும் பாராட்டுதலுக்குறியது.

சுபா

Friday, February 28, 2014

ஸ்டுட்கார்ட் விநாயகர் ஆலயத்தில் மகா சிவராத்திரி

நேற்று இரவு ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள சித்தி விநாயாகர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா நன்கு நடைபெற்றது. பூஜையில் கலந்து கொள்ள மாலை நான் சென்றிருந்த போது எடுத்த சில புகைக்கடங்கள் இதோ... 

Inline image 1
சித்தி விநாயகர் - நடுவில்


Inline image 2
உற்சவ விநாயகர்


Inline image 3
மூகாம்பிகை அன்னை

Inline image 4
நவக்கிரகங்கள் அலங்காரத்துடன்.

சுபா

Wednesday, February 26, 2014

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - இஸ்ரேல் நண்பராக..

பாலஸ்தீனத்துடனான எல்லை சட்ட வரைமுறை செயல்பாடுகளில் இஸ்ரேல் கடைபிடிக்கும் விதிமுறைகளை விமர்சனம் செய்வது கடந்த சில நாட்களில் நிகழ்ந்ததில் ஜெர்மனிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உள்ள நட்பில் ஒரு டென்ஷனை ஏற்படுத்தியிருக்கின்றது. 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இஸ்ரேலின் மிக அனுக்கமான நாடு ஜெர்மனி. வர்த்தக உடன்பாட்டு அளவில் அமெரிக்கா, சீனா இரண்டுக்கும் அடுத்து மூன்றாவது இடத்தை ஜெர்மனியின் ஏற்றுமதி பொருட்கள் இடம்பிடிக்கின்றன. ஆக நட்பு நிலையில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தால் பொருளாதார ரீதியாக ஏதேனும் சிக்கலை அது உருவாக்கலாம். 

தற்சமயம் சான்ஸலர் திருமதி மெர்க்கல் இஸ்ரேலுக்கு  பயணித்திருக்கின்றார். இஸ்ரேல் சில குறிப்பிட்ட விஷயங்களில் பாலஸ்தீனத்துடன் முறையான சமத்துவமான நடைமுறைகளைக் கடைபிடிக்கவில்லை என்பது தொடர்பான விஷயங்களே தற்சமயம் ஒரு வித அதிருப்திகரமான சூழ்நிலைக்கு ஆரம்பமாக அமைந்து விட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜெர்மனிக்கான பிரதினிதிகளின் தலைவர் திரு.ஷூல்ட்ஸ் தனது அண்மைய ராமாலாவிற்கான விஜயத்தின் போது ஒரு பாலாஸ்தீனிய இளைஞன் கூறிய ஒரு செய்தியை ஐரோப்பிய ஒன்றிய பார்லிமெண்டில் சொல்ல அது அதிருப்தியின் அளவை அதிகரித்தி விட்டது. 

அந்த செய்தி இதுதான். எல்லைப் பகுதியில் ரமால்லா நகரில் பாலஸ்தீனியர்கள் புழங்க 17 லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைப்பதாகவும் இஸ்ரேலியர்கள் புழங்க 70 லிட்டர் தண்ணீர் கிடைப்பதாகவும் கிடைத்த செய்தியைச் சொல்லி இவர் வருந்தியிருக்கின்றார். இது தவறான தகவல் என பிரச்சனை எழ, விஷயத்தைச் சோதித்ததில் ஏற்றத்தாழ்வு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர் குறிப்பிட்டது போல 17 லிட்டர் அல்ல என அறிய வர நிலமை சற்றே அதிருப்தியின் அளவை உயர்த்தி விட்டது.

பழைய நாஸி அடக்குமுறை அனுபவங்களுக்குப் பிறகு இஸ்ரேல்-ஜெர்மனி இரண்டு நாடுகளுக்குமான உறவு படிப்படியாக 70களுக்குப் பிறகு தான் ஓரளவு நட்பு நிலையைக் காணத் தொடங்கியது. இக்கால ஜெர்மானிய தலைமுறையினர் இந்த இனப் பிரிவினைகளை காண்பதை விடுத்து தமது மூதாதையர் கடைபிடித்த  கடுமையான நடைமுறைகளை விமர்சனம் செய்யும்  இயல்பைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் அதே நிலை யூதர்களுக்கு இருக்கின்றதா என வரும் போது இது ஆம்/இல்லை என சொல்ல முடியாத ஒரு நிலையிலேயே சென்ஸிட்டிவான ஒரு விஷயமாகவே இருக்கின்றது. 

ஜெர்மனிக்கான இஸ்ரேலிய தூதர் இந்த நிலையை விமர்சிக்கும் வகையில் சொலும் போது இப்படி குறிப்பிடுகின்றார். 

"Originally I was totally anti-Germany and didn't believe Israel should have any ties with it. But by '68 we were really impressed by the generation of Germans who demanded their parents and teachers tell the truth about their Nazi past and the reparations agreement changed relations even further. We ultimately grasped that Germany was striving for a European Germany and not a German Europe. Now we almost see Germans demanding the same standards of Israelis," Primor said.

இதற்கு தொடர்ச்சியாக அமைவது போல ஜெர்மனியின் ப்ரெஸிடெண்ட் திரு.கவுக் அவர்கள் ஜெர்மனி முன்பு போல் உலக அரசியலில் பங்கெடுக்காமல் இருப்பதை விடுத்து இனி முன்னின்று உலக அரசியலில் தனது பங்கை செய்யத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி பேட்டியளித்திருக்கின்றார்.

Inline image 1

In an interview with Deutsche Welle, German President Joachim Gauck argues that Germany can no longer shy away from its international responsibilities - even if that means resorting to military force.
..Referring to Germany's "dark past," Gauck told DW that "Germany is a completely different country than it was in between the two World Wars." He said that the country is now often regarded as a model of democracy.

சுபா

​உசாத்துணை: 
 -http://www.dw.de/gauck-germany-must-not-back-away/a-17451461

Friday, January 24, 2014

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - ஜெர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சர்

ஜெர்மனியில் தேர்தல் முடிந்து புதிய கூட்டணியும் ஆட்சிக்கு வந்தாகி விட்டது. பெரும் போட்டியிட்ட ஆளும் கட்சியும் எஸ்.பி.டி கட்சியும் இணைந்து கூட்டணி கட்சியை அமைக்க வேண்டிய சூழல்.

இந்த புதிய அரசில் பாதுகாப்பு அமைச்சராக ஜெர்மனியில் முதன் முறையாக ஒரு பெண் அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். இவர் சான்ஸலர் அங்கேலா மெர்க்கலின் மிக நம்பிக்கைக்கு உரியவரான திருமதி ஊர்சுலா ஃபோன் டெர் லைன்.


திருமதி ஃபோன் டெர் லைன் (மஞ்சள் உடையில்) - அருகில் திருமதி மெர்க்கல்

55 வயதான இவர் ஏற்கனவே குடும்ப-சமூக நல அமைச்சராக 4 ஆண்டுகளும் பின்னர் தொழில் துறை அமைச்சராக நான்கு ஆண்டுகளும், அதன் பின்னர் இப்போது இந்த புதிய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளார்.

ஜெர்மனியின் அமைச்சர்கள் பட்டியலில் மிக உயர்ந்த மதிப்பைக் கொண்டவர் இவர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.  ஆப்கானிஸ்தான், சிரியா, லெபனான், லிபியா ஆகிய நாடுகளின் அரசியல் நிலைத்தன்மையில் ஜெர்மனியின் பாதுகாப்பு உதவிகள் தொடர்பான  பிரச்சனைகள் முந்தைய அமைச்சர்களுக்கு பிரச்சனையை தந்த  விஷயங்கள். அவற்றை சமாளிக்க இவர்தான் சரியானவர் என்ற எண்ணம் சான்ஸலருக்கு இருப்பது தெரிகிறது.

உலக நாடுகளில்  பல பெண் அமைச்சர்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்திருக்கின்றனர். நல்லதொரு பட்டியல் அவர்களின் புகைப்படங்களோடு இங்கே உள்ளது. http://www.guide2womenleaders.com/Defence_ministers.htm

சுபா

Thursday, January 23, 2014

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - ஜெர்மனியில் வேலைக்கு வருவோர்..

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெரும் நாடுகள் ஏனைய உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல சட்டப்படி தடையில்லை. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டில் ரோமானியாவிலிருந்தும் பல்கெரியாவிலிருந்தும் ஜெர்மனிக்கு வந்து சேர்ந்த வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை அரசாங்கத்தை சற்றே திகைக்க வைத்து விட்டது.

இந்த ஆண்டு தொடக்கமே இந்த அண்டை நாடுகளிலிருந்து வேலை தேடிவருவோரை சமாளிப்பது பற்றிய விஷயத்துடனேயே தொடங்கியது. இவ்விஷயம் தொடர்பாக சற்றே கடுமையான விவாதங்களும் விமர்சனங்களும் வந்தன. இந்த விவாதங்கள் எழுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஒரு விஷயம் தான். அதாவது ரோமானியாவிலிருந்து வேலை தேடி வரும் ஒரு நபர், ஜெர்மனியில் நுழைந்தவுடன் தான் வேலை தேடுவதாக தெரிவித்து தனக்கு வருமானம் இல்லா நிலையை முதலில் பதிந்து விடுவார். அப்படி வருபவர்களில் பெண்கள் அதிகம். அதோடு தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்களும் கணிசமான எண்ணிக்கையினர். இப்படி வருவோர்களில் சிலர் இந்த வாய்ப்பை தவறாகப் பயண்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. உதாரணமாக ஜெர்மனிக்கு வந்து தான் வேலை தேடுவதைப் பதிந்த உடனேயே அரசாங்கம் அப்பெண்ணுக்கும் அவர் குழந்தைக்கும் மாதா மாதம் ஒரு தொகையை வழங்கும். ஒரு வருட காலம் அவர் வேலை தேடுவதிலேயே காலதை கழித்து விட்டு பின்னர் ரோமானியா திரும்பி விடுவார் 1 வருட காலம் குழந்தைக்காகக் கிடைத்த பணத்துடன். மீண்டும் வருவார் .. அதே பதிவு.. அதே நிலை... !

இப்போது ஜெர்மனி இதனை தடைசெய்ய சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. வேலை தேடி வருவோர் முதல் மூன்று மாதத்திற்குள் வேலை தேடிக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவர் அவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட வேண்டும் என பேச்சுக்கள் செய்திகள் வந்துள்ளன. இன்னும் விவாதங்கள் தொடர்கின்றன.

சுபா