Friday, January 24, 2014

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - ஜெர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சர்

ஜெர்மனியில் தேர்தல் முடிந்து புதிய கூட்டணியும் ஆட்சிக்கு வந்தாகி விட்டது. பெரும் போட்டியிட்ட ஆளும் கட்சியும் எஸ்.பி.டி கட்சியும் இணைந்து கூட்டணி கட்சியை அமைக்க வேண்டிய சூழல்.

இந்த புதிய அரசில் பாதுகாப்பு அமைச்சராக ஜெர்மனியில் முதன் முறையாக ஒரு பெண் அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். இவர் சான்ஸலர் அங்கேலா மெர்க்கலின் மிக நம்பிக்கைக்கு உரியவரான திருமதி ஊர்சுலா ஃபோன் டெர் லைன்.


திருமதி ஃபோன் டெர் லைன் (மஞ்சள் உடையில்) - அருகில் திருமதி மெர்க்கல்

55 வயதான இவர் ஏற்கனவே குடும்ப-சமூக நல அமைச்சராக 4 ஆண்டுகளும் பின்னர் தொழில் துறை அமைச்சராக நான்கு ஆண்டுகளும், அதன் பின்னர் இப்போது இந்த புதிய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளார்.

ஜெர்மனியின் அமைச்சர்கள் பட்டியலில் மிக உயர்ந்த மதிப்பைக் கொண்டவர் இவர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.  ஆப்கானிஸ்தான், சிரியா, லெபனான், லிபியா ஆகிய நாடுகளின் அரசியல் நிலைத்தன்மையில் ஜெர்மனியின் பாதுகாப்பு உதவிகள் தொடர்பான  பிரச்சனைகள் முந்தைய அமைச்சர்களுக்கு பிரச்சனையை தந்த  விஷயங்கள். அவற்றை சமாளிக்க இவர்தான் சரியானவர் என்ற எண்ணம் சான்ஸலருக்கு இருப்பது தெரிகிறது.

உலக நாடுகளில்  பல பெண் அமைச்சர்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்திருக்கின்றனர். நல்லதொரு பட்டியல் அவர்களின் புகைப்படங்களோடு இங்கே உள்ளது. http://www.guide2womenleaders.com/Defence_ministers.htm

சுபா

Thursday, January 23, 2014

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - ஜெர்மனியில் வேலைக்கு வருவோர்..

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெரும் நாடுகள் ஏனைய உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல சட்டப்படி தடையில்லை. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டில் ரோமானியாவிலிருந்தும் பல்கெரியாவிலிருந்தும் ஜெர்மனிக்கு வந்து சேர்ந்த வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை அரசாங்கத்தை சற்றே திகைக்க வைத்து விட்டது.

இந்த ஆண்டு தொடக்கமே இந்த அண்டை நாடுகளிலிருந்து வேலை தேடிவருவோரை சமாளிப்பது பற்றிய விஷயத்துடனேயே தொடங்கியது. இவ்விஷயம் தொடர்பாக சற்றே கடுமையான விவாதங்களும் விமர்சனங்களும் வந்தன. இந்த விவாதங்கள் எழுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஒரு விஷயம் தான். அதாவது ரோமானியாவிலிருந்து வேலை தேடி வரும் ஒரு நபர், ஜெர்மனியில் நுழைந்தவுடன் தான் வேலை தேடுவதாக தெரிவித்து தனக்கு வருமானம் இல்லா நிலையை முதலில் பதிந்து விடுவார். அப்படி வருபவர்களில் பெண்கள் அதிகம். அதோடு தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்களும் கணிசமான எண்ணிக்கையினர். இப்படி வருவோர்களில் சிலர் இந்த வாய்ப்பை தவறாகப் பயண்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. உதாரணமாக ஜெர்மனிக்கு வந்து தான் வேலை தேடுவதைப் பதிந்த உடனேயே அரசாங்கம் அப்பெண்ணுக்கும் அவர் குழந்தைக்கும் மாதா மாதம் ஒரு தொகையை வழங்கும். ஒரு வருட காலம் அவர் வேலை தேடுவதிலேயே காலதை கழித்து விட்டு பின்னர் ரோமானியா திரும்பி விடுவார் 1 வருட காலம் குழந்தைக்காகக் கிடைத்த பணத்துடன். மீண்டும் வருவார் .. அதே பதிவு.. அதே நிலை... !

இப்போது ஜெர்மனி இதனை தடைசெய்ய சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. வேலை தேடி வருவோர் முதல் மூன்று மாதத்திற்குள் வேலை தேடிக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவர் அவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட வேண்டும் என பேச்சுக்கள் செய்திகள் வந்துள்ளன. இன்னும் விவாதங்கள் தொடர்கின்றன.

சுபா

Tuesday, November 19, 2013

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - Monuments Men



ஜியோர்ஜ் க்ளூனியின் புதிய படங்களில் ஒன்று மோனுமெண்ட் மேன். 

ஜெர்மனியில் நாஸி ஆட்சியின் போதும் 2ம் உலகப்போரின் போதும்  அழிவுக்கு உள்ளாகும் நிலையிலிருந்த கலை வேலைப்படுகளைச் சேகரித்து, பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவின் உண்மை கதையை மையமாக வைத்து தயாரிக்கப்படும் படம் இது.  ஒருவருக்கும் மேற்பட்ட, குழுவாக இயங்கிய இக்குழுவில் இருந்தோரில், நாஸி கட்சி அரசியல்வாதிகளுடனேயே தொடர்பில் இருந்தவர்களும் உண்டு

முதலில் மோனுமெண்ட் மேன், இவர்களது பணி பற்றிய இந்த செய்தி ரோபர்ட் எட்சலின் Monuments Men Allied Heroes, Nazi Thieves and the Greatest Treasure Hunt in History என்ற நூலில் பதிவாகி இருக்கின்றது.  இப்போது க்ளூனி நடிக்க இக்கதை படமாக தயாராகிக்கொண்டிருக்கின்றது.  யுத்த சமயத்தில் எல்லோருக்குமே மனம் தங்கள் உயிரை பாதுகாக்க வேண்டுமே என்பதிலே இருப்பது தான் இயற்கை. ஆனால் இம்மனிதர்களோ அழிவின் இடையிலே கலைப்பொருட்களைப் பாதுகாக்க, சிற்பங்களைப் பாதுகாக்க முடிவெடுத்து இயங்கியது என்பது தான் இவர்களின் தனிச்சிறப்பு. விசித்திரமான, கலைப்படைப்புக்களின் மேல் தீரா காதல் கொண்ட இவர்கள் கலியின் காவல்ர்கள் என்றால் மிகையாகாது தானே!


மோனுமெண்ட் மேன் குழுவினரின் நடவடிக்கைகள் சாதாரண நிலையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றே. இவர்கள் 2ம் உலகப்போரின் போது சேகரித்து பாதுகாத்து வைத்த கலைப்பொருட்கள் இன்று நாட்டின் பொக்கிஷங்களில் வரிசையில் இடம்பிடிக்கின்றன. 

இவ்வகை வரலாற்றுச் செய்திகள் திரைப்படமாக மக்கள் மத்தியில் உலவ வருவது வரவேற்கத் தக்க ஒன்று. ஜெர்மனியிலேயே இப்படம் முழுமையாக படமாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இப்படம் விரைவில் வருகின்ற பெப்ரவரி மாதத்தில் பெர்லின் திரைப்பட விழாவின் போது வெளியீடு காண உள்ளதாகத் தெரிகின்றது.

முழுமையான செய்திக்கு http://www.dw.de/monuments-men-tracking-looted-treasures/a-17218246


Friday, August 9, 2013

பயணங்கள் தரும் அனுபவங்கள் - இன்று

பயணத்தில் புதிய மனிதர்களை நாம் சந்திப்பது வழக்கம் தானே.

வழக்கமான எனது வியாழக்கிழமை பயணத்தின் போது அருகில் அமர்ந்திருப்பவர் யாருடனும் நான் பேசுவதும் இல்லை; மற்றவர்களும் பேசுவதில்லை. முக்கிய காரணமே வியாழக்கிழமை மாலை அல்லது இரவு  விமானங்கள் பணி முடித்து தலை நிறைய பல சிந்தனைகளையும் கேள்விகளையும் சுமந்து கொண்டு தன்னுடனேயே வாதிட்டும், ஆமோதித்தும்,  ஒத்தும் போயும் இல்லையென்று மாற்றியும் அலுவலக விஷயங்களை அலசிக் கொண்டு வரும் நேரம் அது. அதில் கேசுவல் டாக்கிற்கு இடம் மிக மிகக் குறைவே.

என்றாவது எப்போதாவது தேவைப்பட்டால் மட்டும் அருகிலிருப்பவருடன்  பேசுவது நிகழும். அதுபோல் நேற்றும். மட்ரிட்லிருந்து ப்ராங்பர்ட் வந்து பின்னர் ப்ராங்பர்ட்டிலிருந்து ஸ்டுட்கார்ட் வரும் விமானத்தில் நேற்று என் அருகில் ஒரு இளம் ஜெர்மானியப் பெண் அமர்ந்திருந்தார். ஏதேச்சையாக அவர் ஒன்று கேட்க நான் ஒன்று சொல்ல என எங்கள் பேச்சு 45 நிமிடங்கள் பயணம் முழுக்க நீடித்தது.

24 வயது பெண். OM - Operation Mobilization எனும் ப்ரோட்டஸ்டன் சமய நிறுவனத்தில் 1 வருடம் அமெரிக்காவில் ஒஹையோவில் பணி புரிந்து விட்டு சிறு விடுமுறைக்காக வீடு திரும்புவதாகக் குறிப்பிட்டார். டயக்கோனி, காரிட்டாஸ் ஆகிய இரண்டு பெரிய  இவ்வகை கிறிஸ்துவ தொண்டூழிய நிறுவனங்களைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். எனது இரண்டு ஜெர்மானியத் தோழிகள் காரிட்டாஸிலும் டயக்கோனியிலும் பணி புரிகின்றார்கள். இருவருமே ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கோங்கோ நாட்டில் வருடத்தின் பல நாட்களைக் கழிப்பவர்கள். ஆனால்  இதுவரை Operation Mobilization எனும் இந்த நிறுவனம் பற்றி  நான் கேள்விப்பட்டதில்லையாகையால் இந்தப் பெண்ணிடம் மேலும் கேட்டு விபரமறிந்து கொண்டேன்.

அமெரிக்காவில் ஒஹையோ மானிலத்தின்  2100 பேர் மட்டுமே வசிக்கும் ஒரு சிறிய கிராமத்தில் இவருக்குப் பணி. குழந்தைகளுக்குப் பைபிளை வாசித்துக் காட்டுவதும் விளக்குதும் இப்பணியில் அடங்கும். சம்பளம் மிகக் குறைவு. ஆனால் பயணச் செலவு, உணவு தங்கும் இடம், மற்றும் ஏனைய செலவுகளுக்கான சிறு செலவுத் தொகையை இந்தத் தொண்டூழிய நிறுவனம் வழங்கிவிடுமாம். இந்தப் பெண்ணுக்கு இது கல்லூரி முடித்து இவ்வகைப் பணிகளில் அனுபவம் பெறுவதற்காகச் செல்லும் இரண்டாவது அனுபவமாம். முதலில் ஸ்பெயினின் ஒரு சிறு நகரில் 4 மாதங்கள் இத்தகைய பணி செய்து 1 மாத விடுமுறைக்குப் பின்னர் அமெரிக்கா சென்று அங்கு 1 வருடம் கிராமத்தில் பணி புரிந்து விட்டுத் திரும்புகின்றார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்தப் பெண் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்தவர். இந்த நிறுவனமோ ப்ராட்டெஸ்டண்ட் மதம் சார்ந்த நிறுவனம். இரண்டுக்குமே அடிப்படை கிறிஸ்துவம் தான் என்றாலும்  கொள்கை அளவில் அடிப்படையில் வேறுபடும் 2 மதங்கள்.  எல்லாமே வேலைதானே. இவ்வகை விஷயங்களில் அனுபவம் வேண்டும் என்பதால் இது எனக்குப் பிரச்சனையில்லை என்று சொல்லிச் சிரித்தாள் அந்தப் பெண்.

எனது உறவுக்காரப் பெண்.  மலேசியாவிலிருந்து தனது 20ம் வயதில் இங்கு வந்து ஜெர்மனி ஆகன் நகரில் 2ம் ஆண்டு கணினி இயந்திரத்துறையில் படிப்பவள். அவளும் இப்படித்தான். இளம் வயதாகினும் மிகுந்த துணிச்சலுடன் பயணிப்பதும் தனது வாழ்க்கைத் தேவைகளை தானே பார்த்துக் கொள்வதும் என இருக்கின்றாள்.

இத்தகைய இளம் பெண்களைப் பார்க்கும் போது என் மனதிற்கு மிக மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது. மிக இளம் வயதிலேயே தனியாக பல நாடுகளுக்குச் செல்லத் தயங்காத, தனக்குப் பிடித்த துறையில் தானே முடிவெடுத்து தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பக்குவம் இத்தகைய பெண்களுக்கு இருக்கின்றது.

பெண்களுக்குப் பல்வேறு வகையில் வாய்ப்புக்கள் குவிந்திருக்கும் காலம் இது என்பதில் ஐயமில்லை. சிந்திக்க, தனக்குச் சரியெனப்படும் தொழில் துறையைத்தேர்ந்தெடுக்க, முடிவெடுக்க, எடுத்த  முடிவைச் செயல்படுத்த வாய்ப்புக்கள் நிறைந்திருக்கின்றன. அச்சமும், தயக்கமும் இல்லாமல்,  இருக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டு செயல்படும் பெண்கள் வாழ்க்கையில் சந்தேகமின்றி மிக நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடிய காலம் இது.

தடைகள் புறத்தில் என்பதை விட மனத்தில் இருந்தால் தான் முன்னேற்றம் பாதிக்கும். மனத்தின் தடைகளை வீசிவிட்டு பெண்கள் தெளிவுடன் கல்வி, தொழில் துறை ஆகியவற்றில் சிறப்பு பெற வாய்ப்பளிக்கும் காலம் இது .  கிடைக்கின்ற நல்ல வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தெளிந்த சிந்தனையும், தூர நோக்குச் சிந்தனையும், சாதுர்யமும் சாமர்த்தியமும் ஒவ்வொரு பெண்களின் கைகளிலும் தான் இருக்கின்றது!!!!!

சுபா

Friday, August 2, 2013

ஸ்டுட்கார்ட்டில் இந்திய திரைப்பட விழா

ஸ்டுட்கார்ட் நகரில் எனது இல்லத்திற்கு அருகாமையிலேயே நடந்தும் கூட இவ்வாண்டு இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. குடும்பத்தார் சிறப்பு நிகழ்வுகளால் வார இறுதி நாட்களில் ஸ்டுட்கார்ட்டில் இல்லாத நிலையில்  இவ்வருடம் கலந்து கொள்ள முடியாமல் ஆகி விட்டது. வருடா வருடம் நிகழும் இந்த நிழ்வில் சென்ற வருடம் பல இந்தியத் திரைப்படக் கலைஞர்களுடன் தமிழ் சினிமா புகழ் சுகாசினி வந்திருந்தார். இந்த வருடம் ரேவதி வந்திருந்ததாகக் கேள்விப்பட்டேன்.

3 நாட்கள் நடைபெறும் இந்த வருடாந்திர நிகழ்வில் ஸ்டுட்கார்ட்டில் உள்ள திரையரங்குகளில் ஆங்காங்கே இந்திய திரைப்படங்களும் குறும்படங்களும் செய்திப்படங்களும் நடைபெறுவதோடு நடனங்களும் கடைகளும் அமைந்திருக்கும். இந்திய உணவுகளும் கிடைக்கும்.

இவ்வருட படங்களின் பட்டியலில் இடம்பெறும் ஒரு தமிழ் குறும்படமாக அமைவது திரு.ஜெயகாந்தனின் தாம்பத்யம் எனும் அதே தலைப்பிலான கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 10 நிமிட குறும்படம்.



காட்சியிடப்பட்ட முழு திரைப்படங்களின்  பட்டியலையும் இங்கே காணலாம்.
http://www.indisches-filmfestival.de/en/2013/programme/all-films/

ஏனைய தகவல்கள் அறிந்து கொள்ள http://www.indisches-filmfestival.de/en/2013/

சுபா

Saturday, July 13, 2013

வைஹிங்கன் அன் டெர் என்ஸில்..

வார நாட்கள் சில நேரங்களில் நமது திட்டமிடுதலுக்கு ஒத்துழைக்க மறுத்து விடும் நிலமைகள் பல வேளைகளில் அலுவலகங்களில் பணி புரிகின்ற பலருக்கு நிகழ்ந்து விடுகின்றது. தினம் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்கி வைத்திருந்தாலும் அலுவலகப் பணிகள் மிக அதிக அளவில் நமது நேரத்தை திருடிக் கொள்ளும் போது ஏனைய விஷயங்களுக்காக ஒதுக்கி வைத்திருக்கின்ற நேரத்தைப்பலிகொடுக்க வேண்டிய கட்டாயம் வாய்த்து விடுவது பலருக்கும் அனுபவமாக இருக்கும்.

அலுவலக சிந்தனைகளைத் தொலைத்து விட்டு  நம்முடைய இயல்பான நிலைக்கு வருவதற்கு பலர் சிரமப்படுவதுண்டு. வீட்டுக்கு வந்த பின்னரும் அலுவலகச் சிந்தனைகளே மனதை ஆக்ரமித்திருக்கும் நிலை. பனியே தானாகி  தன் இயல்பை மறந்து  பல வேளைகளில் நாம் நாமாக இல்லாத நிலைகளை உணர்கின்றோம். வார நாட்கள் தருகின்ற மன அழுத்ததை மாற்ற வார இறுதி நாட்களில் இயற்கையில் ஒன்றிப்போவது மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு தரும் ஒரு மருந்து அல்லவா?

இங்கு கோடை காலங்களில் நாங்கள் வார இறுதியில் நீண்ட நடைப்பயணங்களை மேற்கொள்வதுண்டு. என் நண்பர்கள் ரோபர், நிக்கோலா, வெர்னர், பீட்டர்   இணைந்து கொண்டதால் ஐவராக ஒரு நடைப்பயணம் செய்ய திட்டமிட்டோம். நடைப்பயணம் என்றாலே ஏற்பாடுகள், இடம் தேர்ந்தெடுத்தால் எல்லாம் எனது பணியாகிவிடும். என் தேர்வுகளும் எப்போதும் எல்லோருக்கும் பிடித்ததாக அமைந்து விடும்.


இம்முறை 18 கிமீதூரம் உள்ள ஒரு நடைபயணத்தை அதிலும் ஸ்டுட்கார்ட் நகருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தேன். வயல் பகுதியில் ஆரம்பித்து என்ஸ் நதிக்கரையோரமாக நடந்து சென்று பின்னர் திராட்சை தோட்டம் உள்ள மலைப்பகுதியில் ஏறிச் சென்று பின்னர் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்து சில கி.மீ தூரம் காட்டுப் பகுதியில் நடந்து பின்னர் மீண்டும் வயல் பகுதிக்கு வந்து பயணம் முடிவடையும். காலை 10 மணிக்குத் தொடங்கி 3 மணி அளவில் முடிக்கலாம் என்பதாகத் திட்டம். ஆனால்  இடையில் மதிய உணவுக்காகவும் ஓய்வெடுத்ததால் 5 மணிக்குத்தான் முடிக்க முடிந்தது.

எங்கும் பசுமை. வளர்ந்து அருவடைக்குத் தயாராக இருக்கும் கோதுமை, கடுகுப் பயிர், வரிசை வரிசையாக நிற்கும் திராட்ச்சை மரங்கள், மரம் முழுக்க பழங்களைத் தாங்கி நிற்கும் செர்ரி மரங்கள், ஆப்பிள் பேர் பழ மரங்கள், கிராமத்தில் விவசாயிகளில் தோட்டத்தில் காய்த்திருக்கும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள், வீட்டு வளர்ப்புப் பிராணிகள், மலைப்பாறைகளின் அழகு அனைத்துமே உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.

ஸ்டுட்கார்ட் அருகிலேயே இருக்கும் இப்பகுதிக்கு ஸ்டுட்கார்ட் வாசிகளான எங்கள் ஐவரில் இதுவரை  யாருமே சென்றிருக்கவில்லை. இப்படி ஒரு அழகான பகுதி இங்கே இருக்கின்றதா என மலைத்துப் போய் திரும்பினோம்.









































குறிப்பு: இது இரண்டு வாரங்களுக்கு முன் சென்ற நடைப்பயணம்.

சுபா




Friday, July 12, 2013

MyKuhTube

ஜெர்மனி மட்டுமல்ல ஐரோப்பாவில் வாழும் பல குழந்தைகளுக்கும் இளையோருக்கும் கடைகளில் வாங்குவதற்காக விற்கப்படுகின்ற இறைச்சிகளும், சாசோஜ், போன்றவையும் எதிலிருந்து செய்யப்படுகின்றன என்ற போதுமான விஷயம் அறியாதவர்களாகவே இருக்கின்றனர். இங்கு வீடுகளில் ஆடுகளையும், மாடுகளையும் கோழிகளையும் உயிரோடு பிடித்துக் கொண்டு வந்து வெட்டி அதனை சமைப்பது என்பதை இன்றைக்கு 50, 60 வருடமாக வாழ்க்கையில் அனுபவித்திராத நிலையில் உள்ளவர்களாக இவர்கள் இருப்பதால் இந்த நிலை. பேக்கட்டில் கிடைக்கும் ஒரு துண்டு சாசோஜ் தாம் விவசாயிகளின் தோட்டத்தில் பார்க்கும் அழகான கொழு கொழுவென்றிருக்கும் பன்றி ஒன்றின் இறைச்சியால் செய்யப்பட்டது என்பதை நினைத்துப் பார்க்க முடியாத நிலையில் குழந்தைகள் இருக்கின்றார்கள். ஆக மாடுகளுக்கு பல் இருக்குமா..? எப்போது அவை பால் கொடுக்கும்?  எப்படி அவற்றை ஒரு விவசாயி வளர்க்கின்றார் என்பது போன்ற தகவல்கள் இளையோரை மிகக் குறைவாகவே சென்று சேர்கின்றன.

இதனை மனதில் கொண்டு ஜெர்மனியின் சாக்ஸனி மாகாணத்தைச் சார்ந்த 16 விவசாயிகள் ஒன்றினைந்து யூடியூபை பயன்படுத்தி விவசாயிகளின் உலகத்தை இளையோருக்குக் கொண்டு செல்ல ஒரு முயற்சியைத் தொடங்கியிருக்கின்றனர். இதன் பெயர்  MyKuhTube (Kuh என்பது மாடு என்பதன் டோய்ச் மொழிச் சொல்)



இப்பக்கம் http://www.youtube.com/user/mykuhtube என்ற யூடியுப் பகுதில் அமைந்திருக்கின்றது.

இந்தத் திட்டத்திற்காக ஏதும் பிரத்தியேகமாக அவர்கள் தயார் செய்வதில்லை. தங்களின் அன்றாட பணிகளை அப்படியே கேமராவில் பதிவது. ஒவ்வொரு பதிவும் 3 -5 நிமிடங்கள் என்ற வகையில் அமைந்திருக்கின்றன. உதாரணமாக சில..

http://www.youtube.com/user/mykuhtube

http://www.youtube.com/watch?v=fqfO6xRf8Zc
1. புதிதாக ஒரு புதிய மேய்ச்சல் நிலத்திற்கு வரும் போது மாடுகள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதைக் காட்டும் பதிவு


2.http://www.youtube.com/watch?v=hN-7oCihlsQ
மாடுகளுக்கான உணவுகள்

3.http://www.youtube.com/watch?v=uHCyQ-6mobk
காலை 9:30க்கு ஒரு மாடு வளர்க்கும் விவசாயி என்ன செய்வார் என்பதைக் காட்டும் ஒரு பதிவு. 80 மாடுகள் வைத்திருக்கும் ஒரு விவசாயி இவர்.

http://www.youtube.com/watch?v=dhDNp1hshiQ
குளிர் காலத்தில் உள்ளேயிருந்து விட்டு முதன் முதலாக வசந்த காலத்தில் வெளியே புல் சாப்பிட வரும்போது மாடுகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதைக் காட்டும் பதிவு.

http://www.youtube.com/watch?v=zIMHjUNPvb8
75 மாடுகள் வைத்திருக்கும் ஒரு விவசாயி. தன் மாட்டுத் தொழுவத்தில் மாடுகளுக்கு எவ்வாறு அமர்ந்து கொள்ள இடம் தயார் செய்யப்படுகின்றது  என இப்பதிவில் காடுகின்றார்.

MyKuhTube - இது நிச்சயமாக இளையோரைச் சென்றடையும் நல்லதிரு முயற்சி.

மேலும் பல வீடியோக்கள் இருக்கின்றன. ஆர்வமுள்லோர் பார்த்து ரசிக்கலாம்.

சுபா