Friday, June 21, 2013

பயணங்கள் தரும் அனுபவங்கள் - இன்று

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு இருக்கிறாயா எனக் கேட்பார்களே.. அந்த நிலைதான் நேற்று எனக்கு அமைந்தது.

மட்ரிட்டிலிருந்து ப்ராங்பெர்ட் பயணம் அது முடிந்து ப்ராங்பர்ட்டிலிருந்து ஸ்டுட்கார்ட் என ஏற்பாடாகியிருந்தது நேற்றைய பயணம் . அதிர்ஷ்டக் காற்று நம் பக்கம் வீசினால் எல்லாம் சரியாக அமைந்து குறித்த நேரத்தில் வந்து சேரலாம். முதலிடத்தில் ஒரு கோணல் என்றால் முற்றும் கோணல்தான்.

சரி .. புலம்புவதை விட்டு விஷயத்திற்கு வருகிறேன். :-)

நேற்று மாலை 5:45க்குப் புறப்பட வேண்டிய விமானம் மாலை 6:55க்குத் தான் பயணிகள் உள் செல்லத் தயாரானது. எனக்கு நேரம் செல்வதை நினைத்த போதே கலக்கம் தோன்ற ஆரம்பித்து விட்டது. அடுத்த கனெக்டிங் ப்ளைட் புறப்படும் நேரம் இரவு 9:55. இங்கே 7 மணிக்குத் தயாரானால் எப்படி இரண்டாவது  விமானத்தைப் பிடித்து இரவு 11க்கு வீட்டிற்கு வருவது என்ற எண்ணம். உள்ளே பயணிகள் அமர்ந்தும் விமானம் புறப்பட வில்லை. தாமதமாக விமானம் வந்து சேர்ந்து தாமதமாக புறப்பட ஆயத்தமான நிலையில் விமானம் ஓடும் பாதை கிடைக்கத் தாமதம். ஒரு வழியாக பாதை கிடைத்து விமானம் புறப்பட மாலை 7:41. இன்று கனெக்டிங் ப்ளைட் கிடைக்காது போலிருக்கின்றதே ஏதாவது கொஞ்சம் நம் பக்கமும் அதிர்ஷ்டம் இருந்து அந்த விமானமும் தாமதப் பட்டால் நன்றாக இருக்குமே என ஒரு நப்பாசை.

விமானம் ப்ராங்பர்ட் வந்து தரையிறங்கியபோது மணி சரியாக இரவு 9:50. 9:55க்கு அடுத்த விமானம் புறப்பட்டு விடும். சரி.. நமது அதிர்ஷடத்தைத்தான் இன்று பார்ப்போமே என நினைத்துக் கொண்டே விமானத்தை விட்டு வெளியே வந்தால்  வானம் கரும் இருட்டாகி பெரும் மழை தோன்றும் என்பது போல இருந்தது. எனக்கு A03 யை தேடிக்கொண்டு போக வேண்டுமே என்பதிலேயே கவனம்.

பயணிகளை பஸ் கொண்டுவந்து வாசலில் விட்டதுதான் தாமதம். என்னைப் போல பாதி பேர் இருப்பார்கள் போல. அவரவர் விமான கேட்களைத் தேடிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அனைவரும் பல வழிகளில் செல்ல ஆரம்பித்து விட்டோம். நல்ல வேளையாக ஜோகிங் ஓடும் பழக்கம் இருப்பதால் என்னாலும் வேகமாக ஓட்டமும் நடையுமாக செல்ல உடல் ஒத்துழைத்தது. ஒரு வழியாக A03யை வந்தடையும் போது மணி 10:09. வாசலில் கேட் இன்னமும் திறந்திருப்பதற்கான அறிகுறி தென்பட்டது. ஓடிவரும் என்னைப் பார்த்து ஸ்டுட்கார்ட்-ஆ எனக் கேட்டு ஆம் என்றவுடன்.. கீழே பஸ் இருக்கின்றது. ஓடிச் சென்று ஏறிக்கொள் என்று சொல்லிவிட்டு விமானம் இன்று பயனிக்குமா எனத் தெரியாது. ஆனால் போய் ஏறிக் கொள் என்று அதிகாரி தெரிவித்தார். இது என்ன குழப்பம். புரியவில்லையே என நினைத்துக் கொண்டு கீழே படியிறங்கி ஓடிச் சென்று பஸ்ஸில் ஏறிக் கொண்டேன்.

ஓடி வந்ததில் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. சற்று நிமிடம் காத்திருந்து விட்டு பஸ் புறப்பட்டது. விமானம் நிற்கும் பகுதிக்கு வந்து எங்களை இறக்கி விட நாங்கள் அவரவர் இருக்கையில் வந்து ஆம்ர்ந்து கொண்டோம். மணி அப்போது 10:27 ஆகியிருந்தது. இன்று என்ன ஒரு அதிர்ஷ்டம் நமக்கு என மனதில் ஒரு அற்ப சந்தோஷம்.

சற்று நேரத்தில் அறிவிப்பு. ஸ்டுட்கார் பகுதியில் கடுமையான மழையும் இடியும் என நிலமை இருப்பதால் விமானங்கள் அனைத்தும் ஸ்டுட்கார் விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் அனுமதி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. என்வே அனைவரும் சில நிமிடங்கள் நிலமை மாறும் வரை விமானத்திலேயே இருக்கவும் என அறிவுப்பு.

என்ன ஒரு சோதனை. சரி என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என நினைத்து பக்கத்தில் இருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருக்க அடுத்த 30 நிமிடங்களுக்குப் பின்னர் ஸ்டுட்கார்ட்டில் நிலமை சற்று மாறியிருப்பதாகவும் விமானங்கள் பயணிக்கலாம் எனவும் தகவல் வந்தது. மீண்டும் விமானம் ஓடு பாதையில் இடம் கிடைக்க தாமதம். வரிசையாக நிற்கும் 6 விமானங்கள் முதலில் செல்ல விட்டு அடுத்து நான் பயணித்த விமானம் புறப்பட மேலும் ஒரு 30 நிமிடம்.

வானிலை நிலமை சரியில்லை என்பதை பயணத்தின் போது நன்கு உணர்ந்தோம். டர்புலன்ஸ் மிக அதிகமாக இருந்தது. ஆனாலும் எந்த  பிரச்சனையுமின்றி எங்களை ஸ்டுட்கார்ட் விமான நிலையத்தில் இறக்கி விட்டு நாங்கள் எங்கள் பைகளுடன் செல்வதை வாசலில்  நின்று சிரித்த முகத்துடன் பார்த்து எங்களுக்கு இரவு வணக்கம் சொல்லி வழி அனுப்பி வைத்த விமானத்தின் கேப்டன் மற்ற ஊழியர்களைப் பார்த்து அவர்களுக்கு நானும் நன்றியும் இரவு  வணக்கமும் சொல்லி விட்டு வெளியேறினேன். நான் அவர்களுக்குச் சொன்ன நன்றி  என் ஆழ் மனதிலிருந்து வந்த  சொல் என்பது என் மனதிற்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

சுபா 

Monday, June 17, 2013

ஸ்டுட்கார்ட் பாட்கண்ஸ்டாட் நகர ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தேர் திருவிழா

ஜெர்மனி ஸ்டுட்கார்ட் பாட்கண்ஸ்டாட் ஸ்ரீ சித்தி விநாயகர்  ஆலயத்தில் இன்று  தேர் திருவிழா நடைபெற்றது. ஆலயத்திலிருந்து சுவாமி புறப்பட்டு இரண்டு மணி நேரங்கள் சாலையைச் சுற்றி வரும் வகையில் மிகச் சிறப்பாக ஊர்வலம் நிகழ்ந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடியிருந்தனர். இலங்கைத் தமிழ் மக்களோடு உள்ளூர் ஜெர்மானிய மக்களும் சிலர் இண்டஹ் தேர் திருவிழாவைப் பார்க்க சாலையில் கூடியிருந்தனர்.

அம்பிகை, நல்லூர் முருகன், சித்தி விநாயகர் சிலைகள் மூன்று தேர்களில் வரிசையாக பவனி வந்தன. தேங்காய் உடைத்தும் பூஜைகள் செய்தும் வரும் வழியில் பூஜைகள் நடந்து கொண்டேயிருந்தது.

பல நாட்கள், சில ஆண்டுகள் சந்திக்காத இலங்கைத் தமிழ் நண்பர்கள் பலரை மீண்டும் சந்தித்து அளவலாவும் வாய்ப்பும் அமைந்தது.

ஆலயத்தில் வாசல்பகுதியிலேயே கடைகள் ஏற்படுத்தி நம் மக்கள் பயன்படுத்தும் மொருட்களையும் விற்பனைக்கு வைத்திருந்தனர். புளி சாதம், தேங்காய்சாதம் எல்லாம் இல்லை. மாறாக சைவ கொத்து ரொட்டி, வடை, ஆப்பம் என உணவுப் பொருட்களும் விற்பனைக்கு இருந்தன.

சில படங்கள்..

சுவாமி ஊர்வலம் மூன்று தேர்களில் 




தீச்சட்டி ஏந்திய பெண்கள்


காவடியுடன் சிறுவர்கள்


தேரினை வரவேற்கும் காவடியாட்டம்



தீப்பந்ததுடன்


என் நண்பர்களுடன்



என் நண்பர்களின் கடை(சாந்தா,மூர்த்தி)



சில கடைகள்

நாதஸ்வர கோஷ்டி


காவடியாட்டம்



பால்குடம் ஏந்திய மகளிர்



சித்தி விநாயகர் வரும் தேரின் வடத்தை ஒரு புறம் பெண்களும் மறுபுறம் ஆண்களும் இழுத்து வருகின்றனர்

சுபா

Saturday, June 8, 2013

ஸ்டுட்கார்ட் பாட்கண்ஸ்டாட் நகர ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய திருவிழா


ஐரோப்பாவில் இருக்கின்ற ஹிந்து ஆலயங்கள் அனைத்திலும் திருவிழா தொடங்கப்படும் காலம் இது. நான் வாழும் லியோன்பெர்க் நகரின் அருகாமையில் ஸ்டுட்கார்ட் நகர், அதன் சுற்றுப் புறத்தில் 4 கோயில்கள் இருக்கின்றன. கடந்தஆண்டுகளில் ஸ்டுட்கார்ட் சித்தி விநாயகர் கோயில் திருவிழா பற்றிய செய்திகளையும் படங்களையும் வெளியிட்டிருந்தேன். ஸ்டுட்கார்ட் நகரில் மேலும் ஒரு சித்தி விநாயகர் ஆலயம் இருக்கின்றது. இங்கு இதுவரை செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. அந்த வாய்ப்பு  நேர்று மாலை அமைந்தது. எனது இலங்கைத் தமிழ் தோழிகள் இருவர் இக்கோயிலின் அருகாமையில் இருப்பவர்கள். இன்று ஆலயத்தில் திருவிழா தொடக்கம் உள்ளதுஎன்றும் கொடிமரம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றது என்றும் ஒரு வாரத்திற்கு முன்னரே எனக்குத் தகவல் சொல்லியிருந்தமையால் இன்று மூவருமாக சேர்ந்து கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தோம்.

கோயில் வழிபாடும் இறை தரிசனமும் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இந்தியாவிலிருந்து வந்து குருக்களாக சேவை செய்பவரோடு இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட மேலும் இரண்டு குருக்கள்களும் இச்சிறப்பு திருவிழாவிற்காக வந்திருக்கின்றனர். அத்துடன் நாதஸ்வர மேளக் கலைஞர்களும் இலங்கையிலிருந்து பிரத்தியேகமாக வந்திருக்கின்றனர்.

கோயிலில் மூலஸ்தானத்தில் பிள்ளையார் சன்னிதி மட்டுமே உள்ளது. தனித்தனியாக அம்மன் சன்னிதி, முருகன் சன்னிதி, ஐயப்பன் சுவாமி சன்னிதி, பைரவர், சண்டீஸ்வரர் சன்னிதி ஆகியவையும் உள்ளன.

கோயிலில் பிரமாண்டமான வடிவில் நர்த்தன விநாயகர் சிலையும் உள்ளது. ஒரு பகுதியில் கோபாலன்  சன்னிதியும் உள்ளது. 

வசந்த மண்டபத்தில் மூகாம்பிகை சித்தி விநாயகர், நல்லூர் சுப்ரமண்ய சுவாமி சிலைகள் அமைந்திருக்கின்றன. வசந்த  மண்டப மூர்த்தங்களின் அலங்காரம் சிகரமாக அமைந்து வந்திருந்த அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டது. 

முதலில்  மூலஸ்தான சுவாமிக்கு பூஜைகள் முடிந்து கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதன் பின்னர் வசந்த மண்டப தீபாராதனை முடிந்து மூர்த்தங்களின் ஊர்வலம் ஆரம்பித்தது. ஆலயத்திற்குள்ளேயே இது நடந்தது. 

தேவாரப் பாடல்கள் அதன்பின்னர் இனிய நாதஸ்வர இசை மேள வாத்திய கச்சேரி என தெய்வீக மணம் மனதை நிறைத்தது. மேண்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் என ஒரு அம்மையார் பாடி முடிக்க பூஜை முடிந்து தீபாராதனை நிறைவு பெற்றது. 

வந்திருந்த  அனைவருக்கும் நல்ல இரவு உணவும் ஏற்பாடாகியிருந்தது. சாம்பார் சாதம், மோதகம், வடை, பஞ்சாமிர்தம் என சாப்பிட்டும் மகிழ்ந்தோம். 

ஆலயத் திருவிழா வரும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடைபெறும். ஞாயிற்றுக் கிழமையன்று தேர் திருவிழா காவடி ஆட்டங்களுடன் நடைபெற உள்ளதாக அறிந்தேன். இது மிகச் சிறப்பான நிகழ்வாக நிச்சயமாகஅமையும்.




1986ல் முதலில் ஸ்டுட்கார்ட் நகரில் வைத்து தொடக்கப்பட்ட சிறிய விநாயகர் சிலை. இது ஏறக்குறைய15 செ.மீ அளவு உயரம் கொண்டது.

நர்த்தக விநாயகர் சிலை


ஐயப்பன் சுவாமி சன்னிதி


கொடி மரத்திற்கு பன்னீர் அபிஷேகம்

கொடி மரத்திற்கு தீபாராதனை

கொடி மரத்திற்குப் பால் அபிஷேகம்

கொடி மரத்திற்குத் தயிர் அபிஷேகம்

தீபாராதனை

இனிமையான நாதஸ்வர இசை வழங்கிய கலைஞர்கள்

வசந்த மண்டப பூஜை ஆரம்பம்

சுவாமி ஊர்வலம்

சுவாமி ஊர்வலத்தின் போது மக்கள் வழிபடுகின்றனர்

ஊர்வலம்

யாக சாலை


சுபா 

Friday, May 17, 2013

பயணங்கள் தரும் அனுபவங்கள் - இன்று


இந்த வாரம் திங்கட்கிழமை ஒரு அனுபவம் அமைந்தது.

மூன்ஷனிலிருந்து மட்ரிட்-ஸ்பெயின் செல்லும் விமானத்தில் பயணிகள் அனைவரும் வந்து அமர்ந்து விட இறுதியில் ஒரு கருப்பின தம்பதியர் அப்பெண்ணின் கையில் ஒரு குழந்தை சகிதம் மூவர் வந்து நுழைந்தனர். இவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் ஒரு ஆண் போலீஸ் அதிகாரியும் பெண் போலீஸ் அதிகாரியும் கூடவே வந்தனர். அத்தம்பதியர் கையில் துணிப்பைகள் அதில் பல பொருட்கள் வெளியே தெரியும் வகையில்.

விமானத்தில் அமர்ந்திருந்த ஏனைய பயணிகளின் பார்வை என்னையும் உட்பட இவர்கள்  மேல் சில நிமிடங்கள் இருந்தது. பல கேள்விகள் மனதில்.

நிச்சயமாக இவர்கள் தண்டனை பெறச் செல்பவர்கள் இல்லை என்பதை போலீஸார் இவர்களை நடத்திய வகையிலேயே அறிந்து கொள்ள முடிந்தது. கையில் விலங்கில்லை. மரியாதைக் குறையாமல் இருக்கையைக் காட்டி (இறுதி இருக்கை) அதில் அமரச் செய்து ஒவ்வொருவர் பக்கத்திலும் ஒரு போலீஸ் அதிகாரி என அமர்ந்து கொள்ள விமானம் புறப்பட்டது. எனக்கு உறுதியாக  மனதில் பட்டது.. இவர்கள் அகதிகள் தான் என்று. அருகாமையில் சிலர் மெதுவாக ஜெர்மானிய மொழியில் பேசிக் கொண்டிருந்ததில் அவர்களும் என் எண்ணம் போலவே அகதிகளாகத்தான் இருக்கும் என்று பேசிக் கொள்வதும் கேட்டது.

ஐரோப்பாவில் மிக அதிகமாக அகதிகள் தஞ்சம் புகுவது வழக்கத்தில் நடந்து வருவது. பொதுவாக ஐரோப்பா முழுமைக்கும் அகதி அந்தஸ்து கோருபவர்கள் பெரும்பாலும் ஆப்கானிஸ்தான், ரஷ்யா, பாக்கிஸ்தான், ஈராக், செர்பியா, சோமாலியா, ஈரான், நைஜீரியா, கொசொவோ, வங்காளதேசம்,  சிரியா, இலங்கை, அர்மேனியா, ஜோர்ஜியா, துருக்கி, துனிசியா, சீனா, என பட்டியலிடலாம்.

பெரும்பாலும் ஜெர்மனிக்கும் ப்ரான்ஸிற்கும் அகதிகளாக வர விரும்புபவர்கள் என்ணிக்கை அதிகம்.  2011ம் ஆண்டில் மட்டும் ஜெர்மனிக்கு 50,000 பேருக்கு மேல் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்துள்ளனர் என்பதனை இந்த வலைப்பக்கத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.  http://epp.eurostat.ec.europa.eu/statistics_explained/index.php/Asylum_statistics மேலும் பல இணைய பக்கங்களும் இது தொடர்பான பல தகவல்களை வழங்கலாம்.

அகதி அந்தஸ்து கோரி வருபவர்களின் நிலை அரசியல் காரணங்களுக்காக என அமைவது சகஜம். பொறுத்தமான காரணம் இருப்பின் அகதி அந்தஸ்து பெற்று இவர்கள் இங்கேயே வாழ்க்கையைத் தொடர்கின்றனர். அப்படி ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த மக்கள் இலங்கைத்தமிழர்கள் உட்பட ஏராளம்.

அரசியல் காரணங்களின் காரணமாக வந்து  போர் இல்லாத நிலையில் சிலர் திருப்பி அவர்கள் சொந்த நாட்டிற்கே அனுப்பபடும் சூழ்நிலையை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். என் வீட்டிற்கு அருகாமையில் உள்ள சிண்டல்பிங்கன் நகரில் 2010ம் ஆண்டில் 2 இலங்கைத்தமிழர் குடும்பங்கள் அப்படி குடும்பத்தோடு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள்  ஏதாவது ஒரு வகையில் இல்லீகலாக ஜெர்மனிக்கு வந்து பின்னர் அகதி அந்தஸ்து கோரி பின்னர் போர் இல்லாத  நிலை என அறிய வரும் போது திருப்பி அனுப்பபப்டுகின்றனர்.  என்னைவிட இலங்கைத்தமிழர் நிலையை நன்கு அறிந்தவர்கள் இது தொடர்பாக தெளிவான தகவல்களைத் தரமுடியும்.

நான் குறிப்பிட்ட இந்த  கறுப்பின தம்பதியர் ஏதாவதொரு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து ஜெர்மனிக்கு வந்தவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினிற்குள் `திருட்டுத்தனமாக` வருவதற்கு சில வழிமுறைகளைக் கையாள்கின்றனர். அந்த வழியில் ஸ்பெயின் வந்து பின்னர் ஜெர்மனிக்கு வந்தவர்களாக இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.

பல நாடுகளிலிருந்து அகதி அந்தஸ்து கோரி தஞ்சம் புகுந்த பல்லாயிரம் மக்களுக்கு ஐரொப்பிய நாடுகள் அகதி அந்தஸ்து வழங்கி அவர்கள் வாழ்க்கை இப்புதிய நிலத்தில் தொடர  உதவுகின்றன. ஆனால் பல வேளைகளில் பல்வேறு சட்டப்பூர்வ காரணங்களுக்காக சட்ட நடவடிககை எடுக்கப்பட்டு சிலர் திருப்பி அனுப்பவும் படுகின்றனர்.

அகதி அந்தஸ்து கோரி வருகின்ற மக்களின் நிலை .. அவர்களின் வாழ்க்கையின் போராட்டம் என்பவை ஒரு வரியில் சொல்லி விளக்க முடியாதவை. சோதனைகளும் வேதனைகளும் என்னெவென்று தெரியவேண்டுமென்றால் இவர்கள் கதையை அறிந்து கொள்வது உலகை அறிந்து கொள்வதற்கு உதவும். சில உண்மைக் கதைகள் என் நண்பர்கள் வழியாகவே கேள்விப்பட்டிருக்கின்றேன். வாய்ப்பமையும் போது எழுதுகின்றேன்.

சுபா

Thursday, May 2, 2013

சாம்பியன் லீக் 2013 (2)


என் கணிப்பை பொய்யாக்காமல் எஃப்சி பாயார்ன் குழு பார்சலோனாவை 3க்கு 0 என்ற கோல் கணக்கில் நேற்று தோற்கடித்து வெம்ப்ளியில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு தயாராகி விட்டது.

இறுதிப் போட்டியில் பொருஸியா டோர்ட்முண்டும்  எஃப்சி பாயார்ன் குழுவும் மோத உள்ளன. இரண்டுமே ஜெர்மானியக் குழுக்கள். இறுதிப் போட்டியில் இரண்டு ஜெர்மன் குழுக்கள் கலந்து கொள்வது இங்கே பெறும் மகிழ்ச்சியைஏற்படுத்தியிருக்கின்றது. 2வது தொலைகாட்சி நிறுவனமான ZDF நேற்று இரவு விளையாட்டு முடிந்து பின்னர் தொடர்ந்து நடக்கவிருக்கும் போட்டி பற்றிய விவரணைகளிலேயே  இரவை கழித்தது. 

நேற்றைய விளையாட்டின் சில சிறப்பு செய்திகள் படங்களுடன்.

Inline image 1
எஃப்சி பாயார்ன் குழு முதல் கோல் போட்ட ரோபன். அவரை கட்டிக்கொண்டு சந்தோஷத்தில் மகிழும் குழுவினர்.


Inline image 2
எஃப்சி பாயார்ன் குழுவுக்கான இரண்டாவது கோலை தவறுதலாக  உதைத்தவர் பார்சலோனாவின் பீக். இதை யாரால் நம்ப முடியும்? ஆனாலும் நடந்து விட்டது. தலையைக் கவிழ்ந்து கொண்டே பீக் நடந்து சென்றதும் ஏனைய குழுவினர் தலையில் கையை வைத்துக் கொண்டு பார்தத்தும் பார்சலோனா குழுவினருக்கு ஒரு சோகம் தான்.

Inline image 3
பார்சலோனாவின் புகழ் மிக்க விளையாட்டாளரான மெஸ்ஸி போட்டியில் முதல் 11 விளையாட்டளர்களில் நேற்று இடம் பெறவில்லை. பின்னால் அமர்ந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தார். இவர் போட்டியில் நுழைந்திருந்தால் குழுவினருக்கு பாதி பலம் கூடுதலாகக் கிடைத்திருக்கலாம் என காற்பந்து வர்ணனை செய்தவர் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தார். மெஸ்ஸி நுழைந்திருந்தால் கூடுதல் 1 கோல் போட்டிருக்கலாம். அவ்வளவுதான்....!

Inline image 4
மூன்றாவது கோலைப் போட்ட முல்லர். அவரைக் கட்டிக் கொண்டு மகிழ்ச்சியில் துள்ளும் குழுவினர்.



Inline image 5
நேற்றைய நிகழ்வின் கதா நாயகன் மனுவெல் நோயர். ஜெர்மனியின் எஃப்சி பாயார்ன் குழு மட்டுமல்லாது ஜெர்மனியின் நேஷனல் டீமின் கோல்கீப்பர். பார்சலோனா குழு வின்எந்த பந்தையும் விடாமல் பிடித்து சாகம் செய்து அசத்திவிட்டார்.

சுபா

Wednesday, May 1, 2013

சாம்பியன்ஸ் லீக் 2013 (1)

சாம்பியன்ஸ் லீக்  ஐரோப்பாவின் மிகப் பிரசித்தி பெற்ற காற்பந்து போட்டி. ஒவ்வொருஆண்டும் நடைபெறும் இது  தற்சமயம் ஐரோப்பாவின் விளையாட்டுப் பிரியர்கள் தினம் தினம் பேசிக் கொள்ளும் விஷயங்களில் ஒன்று.

சென்ற ஆண்டு ஜெர்மனியின் எப்ஃசி பாயார்ன்  காற்பந்து கிளப்பும் இங்கிலாந்தின் செல்ஸி கிளப்பும் இறுதிப் போட்டியில் மோதி செல்ஸி வெற்றி வாகை சூடிச் சென்றது. பாயார்ன் குழு சோக முகத்துடன் திரும்பியது.

இந்த ஆண்டு போட்டிகள் சென்ற நாட்களில் முடிந்து இன்று மேலும் ஒரு அறை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. 

ஜெர்மனியின் மிகப் புகழ்பெற்ற எப்ஃசி பாயார்ன்  க்ளப்பும் பொரூசியா டோர்ட்முன்ட் கிளப்பும் ஸ்பெயினின் மிகப் புகழ்பெற்ற பார்ஸலோனா கிளப்புடனும் ரியால் மட்ரிட் கிளப்புடனும் மோதியதில் ஜெர்ம்னியின் பொரூசியா டோர்ட்முன்ட் க்ளப் இறுதிப் போட்டிக்குத் தயார்படுத்திக் கொண்டு விட்டது. ரியால் மட்ரிட் புள்ளிகள் போதாதனால் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இன்று எப்ஃசி பாயார்ன் க்ளப்பும் பார்ஸலோனா  குழுவும் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று செல்பவர் வரும் மே மாதம் 25ம் நாள்  சனிக்கிழமை இங்கிலாந்தின் வெம்ப்ளி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் போட்டி இடுவர்.

இந்தப் போட்டிகளில் குழுக்களாக பலர் சேர்ந்து தங்கள் குழுவின் வெற்றிக்குப் போராடினாலும் ஒரு சிலர் தனித்துவத்தோடு போராடி பெயர் பெறுவதும் மிகப் பெரிய புகழை அடைத்து விசிறிகள் சூழ்ந்து வருவதும் இங்கே மிகப் பிரபலம்.

அந்த வகையில் தங்க காலணியை பரிசாக வாங்கிய ரியால் மட்ரிட்டின் விளையாட்டளர் ரோனால்டோ விளையாடும் போதெல்லாம் கேமரா அவர் பக்கமே செல்வதும் விசிறிகள் ரொனால்டோ பெயரைக் கூறிக் கத்தி மகிழ்வதும் நேரில் பார்க்கும் போது மிக சுவாரசியமாக இருக்கும். 

Inline image 1

சென்ற வாரம் ஏப்ரல் 24 பொருசியா டோர்ட்முண்டிற்கும் ரியால் மட்ரிட்டிற்கும் நடந்த  போட்டியின் போது நான் மட்ரிட்டில் இருந்ததால் தொலைக்காட்சியில் மாலை நண்பர்களுடன் இருந்து ஒரு உணவகத்தில் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. ஸ்பேனிஷ் மக்கள் சூழ்ந்திருக்கும் போது நானும் எனது இன்னொரு அலுவலக நண்பர் இருவர் மட்டுமே ஜெர்மானிய பொருசியா டோர்ட்முண்ட் குழுவிற்காக கைதட்டிக் கொண்டிருந்தோம். உள்ளூர் மக்களோடு சேர்ந்து இப்படி விளையாட்டினை ரசிப்பதே ஒரு தனி அனுபவம் தான்.

பொருசியா டோர்ட்முண்ட் கடந்த 4 ஆண்டுகளில் மிகத் துரிதமாக முன்னேறி ஜெர்மனியின் புண்டஸ்லீகா விளையாட்டுக் கோப்பையை கடந்த 2 ஆண்டுகள் வரிசையாக தக்க வைத்துக் கொண்ட ஒரு க்ளப். இதில் மிக இளமையான விளையாட்டளர்களான மரியோ கோட்ஸ, மார்க்கோ ரோய்ஸ். மார்க் ஹும்மல் போன்றவர்கள் இருந்தாலும் இந்த க்ளப்பின் பெயரைச் சொன்னாலே நினைவில் வருபவர் இக்குழுவின் பயிற்சியாளர்தான்.

Inline image 2

பயிற்சியாளர் யூர்கன் க்ளோப். இன்றைய நிலையில் அடிக்கடி உள்ளூரில் பேசப்படும் விளையாட்டாளர் பெயர் பட்டியலில் இவர் பெயர் நிச்சயம் இருக்கும்.


எப்ஃசி பாயார்ன் - என்னுடைய பேவரட் குழு.  இதில் ஜெர்மனியின் முக்கிய விளையாட்டாளர்களான ஷ்வையிண்டைகர், மூல்லர், மரியோ கோமேஸ், லாம் என சிறந்த விளையாட்டளர்களின் பட்டாளம் அமைந்த அணி.

Inline image 3

இன்று சற்று நேரத்தில் இக்குழுவுடன் பார்ஸலோனா குழு செமி பைனலில் மோத உள்ளது. இதில் வெற்றி எப்ஃசி பாயார்ன் குழுவுக்குத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு.

அப்படி நடந்தால் இரண்டு ஜெர்மன் குழுக்கள் இவ்வாண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளும். வெம்ப்ளியில் இந்த விளையாட்டை நேரில் பார்க்க ஒரு டிக்கெட்டும் பாக்கி இருக்காது என்பது நிச்சயம்.

சுபா

Saturday, April 20, 2013

ஜெர்மானிய சமையல்... எப்படியிருக்கும்..? - 4 (Kartoffelsalat)


இந்த இழையை நான் மறந்து போயிருந்தேன். இன்று ஒரு ஜெர்மானிய உணவு செய்ய நினைத்ததால் மீண்டும் இந்தப் பதிவு ஞாபகம் வரவே இங்கே ஒரு ஜெர்மானியஉணவு செய்முறையைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். அதற்கு முன் இந்தச் சமையலின் சிறப்புக்களையும் கொஞ்சம் சொல்லி வைப்பது தகுமல்லவா..

ஆசிய உணவு வகைகளில் எப்படி அரிசி மிக முக்கியப் பங்கு வகிக்கின்றதோ அதே போல ஐரோப்பிய உணவு வகைகளில் அதிலும் குறிப்பாக ஜெர்மனியில் கோதுமையும் உருளைக்கிழங்கும் மிக முக்கிய உணவுகளாக அமைந்திருக்கின்றன.

16ம் நூற்றாண்டில் ஸ்பேஷினிஷ்காரார்கள் தெற்கு அமெரிக்காவை அதிலும் பெரு நாட்டிற்குச் சென்று அங்கே தமது ஆளுமையை ஆரம்பித்த போது கண்டெடுத்த   விஷயங்களில் உருளைக்கிழங்கு முக்கிய ஒன்றாக அமைகின்றது. உருளைக் கிழங்கின் சுவையில் மயங்கிப் போன ஸ்பேனிஷ் மக்கள் பெருவை விட்டு க்கிளம்பு போது கொண்டு வந்த  உருளைக் கிழங்கை ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் நட்டு வைத்து வளர்க்க ஆரம்பித்தனர். முதலில் ஸ்பெயினில் பரவலாக உணவில் இடம்பெற்ற உருளைக் கிழங்கு மிக விரைவில் ஐரோப்பா முழுமைக்கும் முக்கிய உணவாக மாறி உணவில் ஆளுமையைப் பிடித்துக் கொண்டது.

அதற்கு முன்னால் ஜெர்மனியைப் பொறுத்த வரை இறைச்சி உணவை அதிகமாக உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருந்த இம்மக்கள் தங்கள் உணவில் உருளைக்கிழங்கையும் படிப்படியாக இணைத்துக் கொண்டு வெவ்வேறு வகையில் இதனை சமைக்க ஆரம்பித்தனர்.

உருளைக் கிழங்கை அவித்தும், பொறித்தும், மாவாக ஆக்கியும், சூப்பாக செய்தும், பல்வேறு வடிவங்கள் கொடுத்து தங்கள் உணவுகளில் ஜெர்மானியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த  வகையில் இங்கே மிக முக்கியமாக வருடத்தின் எல்லா காலங்களிலும் ஜெர்மானிய உணவில் இடம் பெறும் ஒன்று கார்ட்டோபல் சாலாட். (Kartoffelsalat)

இதனை வெவ்வேறு வகைகளில் தயாரிக்கலாம். ஜெர்மனியின் மானிலங்களைப்  பொறுத்த வாரியாக என்ற வகையில் இந்தச் சமையல் முறை மாறுகின்றது. நான் இருக்கும் ஷ்வாபன்லாண்டில் தயாரிக்கும் முறை என் மாமனார் இருக்கும் ரைன்லான் பால்ஸ் இடத்திலிருந்து வேறு பட்டது. பாயார்னின் வேறு விதமாகவும் எசனில் வேறு மாதிரியாகவும் என இது வடிவம் எடுக்கின்றது.

உதாரணத்திற்கு இங்குள்ள படத்தைப் பாருங்கள். எத்தனை வடிவங்களில் இவை வேறு படுகின்றன என்று இப்படங்கள் காட்டும்.

சரி நான் இன்று தயாரித்த கர்ட்டோபல் சாலாட் செய்முறையைப் பகிர்ந்து கொள்கின்றேன். இதற்குப் பெயர் மெடிட்டரானன் கார்ட்டோபல் சாலாட்.



செய்முறை


  • உருளைக்கிழங்கு - 8
  • கருப்பு ஆலீவ் - 10 (சிறிதாக நறுக்கியவை)
  • மஸ்டட்ர்ட் க்ரீம் - 2 கரண்டி
  • பெரிய காப்ஸிகன் சிவப்பு மிளகாய் - பாதி (பொடியாக நறுக்கியது)
  • ஆலிவ் எண்ணெய் - 2 கரண்டி
  • வெள்ளரிக்காய் - சிறியது (சிறிதாக நறுக்கியது)
  • உலர்ந்த  தக்காளி - சிறிதாக நறுக்கியது
  • வெங்காயத் தாள்
  • உப்பு - தேவையான அளவு
  • வினிகர் - 3 கரண்டி


உருளைக்கிழங்கை நன்கு கழுவி தோல் நீக்கி அதனை அவித்து எடுத்துக் க் கொள்ளவும். நீரில்லாத வகையில் ஸ்டீம் செய்து அவிப்பது நன்று.



கருப்பு ஆலீவ் கொட்டைகளை நறுக்கிக் கொள்ளவும். மிளாகாய், தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், உலர்ந்த தக்காளி இவை அனைத்தையும் விரும்பும் வடிவில் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.



வேகவைத்த உருளைக் கிழங்கை சூடாக இருக்கும் போதே ஒரு பெரிய பாத்திரத்தில் சிறிதி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.



ஒரு சிறிய பாத்திரத்தில் மஸ்டர் க்ரீம், உப்பு, வினிகர் ஆலீவ் எண்ணெய் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை இப்போது வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து உருளைக் கிழங்கு உடைந்து விடா வகையில்  கிளறவும்.

பின்னர் வெட்டி வைத்துள்ள காய்கறிகளை இந்தக் கலவையில் சேர்க்கவும். இப்போது இந்தக் கலவையை மூடி 30 நிமிடங்கள் வைத்து உப்பு சரி பார்க்கவும். உப்பு குறைந்திருந்தால் அதனைச் சேர்க்கவும்.



இதனை தனியாக சாப்பிடுவது என்பது பொதுவாக இல்லை. ரொட்டியுடனோ, வருத்த காய்கறிகளுடனோ, இறைச்சி, மீன் வகைகளுடனோ சேர்த்து சாப்பிடுவதே வழக்கம்.

கோடை காலங்களில் க்ரில் பார்ட்டிகள் அனைத்திலும் தவறாமல் இடம் பெறும் ஒரு உணவு இது. செய்து பாருங்களேன்.


சுபா