Friday, December 9, 2011

எஸ்லிங்கனில் கிறிஸ்மஸ் மார்க்கெட்


கிறிஸ்மஸ் மார்க்கெட் ஸ்டுட்கார்ட் அதன் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள பல சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் தினமும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இந்தச் சுற்று வட்டாரத்தில் புகழ்பெற்ற ஒரு கிற்ஸ்மஸ் மார்க்கெட் என்று சொன்னால் அது எஸ்லிங்கன் நகரத்தின் Mittelaltermarkt (Medieval Market) ஐ த்தான் சொல்ல வேண்டும்.

எல்லோருக்கும் பழக்கமான தற்கால கிறிஸ்மஸ் மார்க்கெட் முன் புறம் அமைந்திருக்க அதனைச் தாண்டி சற்று உள்ளே நுழைந்தால் வருபவர்களை வரவேற்கும் இந்தப் பழங்கால மக்களின் சந்தை. இதில் என்ன சிறப்பு என்றால் இந்தப் பகுதியில் கடைகள் அமைத்திருப்போர் அனைவருமே பழங்கால மக்களின் ஆடைகளில் வீரகள் போலவும், படை வீரர்கள் போலவும் கிராமத்து பெண்கள் போலவும் உடை அணிந்து கடைகளில் விற்பனையில் ஈடுபட்டிருப்பதும் சுற்றிலும் உலாவருவதும் தான். இடைக்கிடையே பழங்கால மக்களின் உடைகளில் ஊர்வலமும் நடைபெறும்.

இந்த ஆண்டும் இங்கே சென்று வர மறக்கவில்லை. கிறிஸ்மஸ் மார்க்கெட் என்றலே என்னைக் கவர்வது எஸ்லிங்கன் கிறிஸ்மஸ் மார்க்கெட் தான்.

இங்கே கண்களுக்கும் விருந்து கிடைக்கும்; வயிற்றுக்கும் விருந்து கிடைக்கும். சூடான ரொட்டி, சீஸ் வெங்காயம் கலந்த Flamkuchen, இனிப்பு வகைகள், க்ளூ வைன் ஆகியவை எண்ணைக் கவர்ந்த உணவு வகைகள். உணவை ருசித்துக் கொண்டே சந்தையைச் சுற்றிப் பார்ப்பதும் ஒரு சுவையான அனுபவம் தானே.

சரி .. இந்த எஸ்லிங்கன் கிறிஸ்மஸ் மார்க்கெட்டில் எடுத்த சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வாருங்கள்.. பார்த்து ரசிப்போம்!



உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் எஸ்லிங்கன் நகரத்தின் எழில்!

கிறிஸ்மஸ் சந்தைக்குள் செல்வோமா ?

ஆ.. என்ன இது காட்டுப் பன்றிகள் கூறையின் மேலே.. ??

ஆஹா.. இவை இறைச்சி வகை உணவுகள் விற்கப்படும் கடையல்லவா.? வாருங்கள் வாருங்கள் என இறைச்சிப் பொருட்களை விரும்பும் வாடிக்கையாளர்களை அழைக்கும் காட்டுப் பன்றிகள்.

Mittelaltermarkt (பழங்கால மக்களின் சந்தை)க்குள் சென்று இங்கு என்ன இருக்கின்றது என பார்ப்போமா ?


ஆஹா.. நீண்ட குச்சியில் சுற்றப்பட்ட கோதுமை மாவு ரொட்டிகள். விட்டு வைப்பேனா.. நான் ஒன்றை வாங்கி சுவைத்தேன். மெண்மையான ரொட்டி.. தக்காளி கலந்து தயாரிக்கிறார்கள். சுவை.. அபாரம்.

ரொட்டி தயாரிப்பு முறை.. சமையல் கலையில் ஆர்வமுள்ளோர் பார்த்துக் கொள்ளுங்கள்.

என்ன அது.. தலைகளாகத் தொங்குகின்றனவே.. தவறு செய்பவர்களின் தலைகளை இப்படித்தான் வெட்டி காயவைத்து தொங்க வைப்பார்களா.. கொடுமையாக இருக்கின்றதே..!

மிருகங்களின் தோல் ஏனைய பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட பொருட்கள். முன்னர் ஆதிவாசிகளுக்கு மிருகங்களின் தோல், மயிர், கொம்புகள் பற்கள் ஆகியவை எவ்வளவு முக்கியமானவையாக இருந்திருக்கின்றன..!

ஆஹா.. இங்கே Flammkuchen கிடைக்கும். வாருங்களேன் வாங்கிச் சாப்பிடலாம்.

என்ன கணமான இரும்புச் சங்கிலி கவசம்.. இதை போட்டுக் கொண்டு ஆதிவாசி மக்களின் உடையில் க்ளூ வைன் அருந்துகிறார் இந்த இளைஞர்.

இங்கே க்ளூ வைன் கிடைக்கும். பட்டை தூள், சீனி கலந்த வைன் கொதித்துக் கொண்டிருக்கின்றது.

இதோ ஆரம்பித்து விட்டது அணிவகுப்பு..இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டு வருகின்றனர் இந்த வீரர்கள்.

இவரைப் பார்த்தாலே குழந்தைகள் பயந்து விடுவார்களே..!

இவள் யார் ..மோகினியா..அல்லது பயங்கரப் பேயா..??

ஜெர்மானியர்களைக் கவர்ந்த ப்ராட் வுர்ஸ்ட். மிகுந்த ஈடுபாட்டுடன் சமையல்காரர்கள் இவற்றைத் தயாரிக்கிறார்கள்.

முன்னரெல்லாம் எங்கே கேக் பிஸ்கட் வகைகள் கிடைக்கும்? பழங்களிலும் காய்கள் விதைகளில் தானே இனிப்பு வகைகளையும் தயாரித்து வைப்பார்கள். அந்த அனுபவத்தை இங்கே பெறலாம்.



இங்கே லெபனான் வகை ஃபலாஃபல் இந்திய பெயருடனும் ஒரு புதிய வகையில் கலக்கலாய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்தார்கள். இதனை விட்டு வைப்போமா..? மாங்காய் சட்னி சாஸ், தயிர் கலந்து ஒன்றினை வாங்கிச் சாப்பிட்டோம். சுவை கொஞ்சம் பரவாயில்லை. கூடாரம் இருக்கும் அழகு போல உணவு அவ்வளவு சுவை இல்லை.

இரவின் இருட்டில் மங்கலான வெளிச்சத்தில் கூடாரங்களின் அழகு!

மெழுகுவர்த்தியில் எத்தனையோ வகை உண்டு. சிவபெருமான் உருவத்திலும் ஒரு மெழுகு வர்ததி நடுவே!



இங்கே பழங்கால வகை குளியல் எடுக்கலாம். காவலுக்கு ஒருவர் வாசலில் அமர்ந்திருக்கின்றார். வாசமான மூலிகைகள் கலந்து சூடான வெந்நீர் கொதித்துக் கொண்டிருக்கின்றது. இந்தக் குளிருக்கு சூடான குளியல் இதம் தானே!



காட்டுக்குள் வாழ்வதென்றால் வில் ஏந்தி அம்பு விடவும் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்கிறாரே இந்த மனிதர்?

இங்கே கவசங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. சண்டையிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமா.. வாங்கிக் கொள்ளுங்கள்.

இரவின் ஒளியில் கூடாரங்கள்..!



மேஜிக் ப்ரூம் இங்கே வாங்கிக் கொள்ளலாம்.

கோஸ்பல் குழுவினர்.. சந்தையில் இசை விருந்து வைக்கின்றனர்.

Sunday, November 27, 2011

அட்வெண்ட் முதல் ஞாயிறு

கிறிஸ்மஸ் பண்டிகை இங்கு களை கட்டத் தொடங்கி விட்டது. கடந்த வியாழன் ஜெர்மனியின் நாடெங்கிலும் பல நகர்களிலும் சிறு கிராமங்களிலும் Weinachtsmarkt எனச் சொல்லப்படும் கிறிஸ்மஸ் சந்தை தொடங்கி விட்டது. சிறு கூடாரங்கள் அமைத்து அதில் கிறிஸ்மஸ் அலங்காரங்களைப் பல வடிவங்களில் செய்து விற்பனைக்குப் பொருட்களை வைத்து விற்பது வழக்கம்.

குறிப்பாக இவ்வித சந்தைகளில் விதம் விதமான மெழுகு வர்த்திகள், தேனீர் கலவைகள், வாசனை சோப்பு, வீட்டு அலங்காரப் பொருட்கள், கிறிஸ்மஸ் சிறப்பு இனிப்புப் பண்டங்கள் ஆகியவை கிடைக்கும். சூடான க்ளூ வைன் அருந்துவது இந்த கிறிஸ்மஸ் சந்தைக்கு வந்து செல்வோர் அனைவரின் விருப்பமும் கூட.

இங்கு கிடைக்கும் மெழுகுவர்த்திகள் பல்வேறு வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். குறிப்பாக தேனில் கலந்து செய்யப்பட்ட மெழுகுவர்த்திகள் , பழங்கள் கலந்து தயாரிக்கப்பட்ட மெழுகுவர்த்திகள், பூக்கள் கலந்து தயாரிக்கப்பட்டவை, மூலிகை இலைகள் கலந்து தயாரிக்கப்பட்டவை என விதம் விதமாக் கண்களைக் கவரும் வகையில் இவை கிடைக்கும்.

தேனீர் கலவைகளில் பலவகைகளைக் வைத்திருப்பார்கள். ஆரஞ்சுடன் கலந்த தேனீர், பல்வேறு மூலிகைகள் கலந்தவை, உலர்ந்த பழங்கள் சேர்க்கப்பட்டவை, என இவற்றிலும் வித்தியாசங்களைக் காணலாம். நான் இம்முறை கிற்ஸ்மஸ் தேனீர் எனப்படும் மூலிகைகள் கலந்த தேனீர் கலவை வாங்கியிருக்கிறேன்..

அதோடு பிரத்தியேகமாக இந்த கிற்ஸ்மஸ் சந்தைகளில் வகை வகையான தேன்களையும் விற்பனைக்கு வைத்திருப்பார்கள், காட்டு மரங்களின் பூக்களிலிருந்து கிடைக்கும் தேன், லவென்டர் பூக்களிலிருந்து கிடைக்கும் தேன் என இவற்றிலும் பலவற்றை சாப்பிட்டுப் பார்த்து நமக்குப் பிடிக்கும் தேனை வாங்கிக் கொள்ளலாம். இம்முறை கிற்ஸ்மஸ் மரத்தின் ஒருவித பூவிலிருந்து எடுக்கப்படும் தேன் ஒன்றினை வாங்கியிருக்கின்றேன். மென்மையான, அதே சமயம் வித்தியாசமான இனிப்புச் சுவை கொண்ட தேன் இது.

அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு கூடாரங்களையும் பார்ப்பது மகிழ்ச்சியான ஒரு விஷயம். மிக அழகாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் இவற்றின் கூறை பகுதி தான் கண்கவர் காட்சியாக அமைந்து விடும்.

இந்தக் கூடாரங்கள் கிறிஸ்மஸ் நாளிற்கு இரண்டு நாள் வரை வைத்திருப்பார்கள். ஏறக்குறைய 27 அல்லது 28 நாட்கள் இக்கூடரங்களின் சொந்தக்காரர்கள் அதே இடத்தில் தங்கள் விற்பனையை நடத்திக் கொண்டிருப்பார்கள்.

கிற்ஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் முதல் அட்வெண்ட் ஞாயிறு வாழ்த்துக்கள்.




















































அன்புடன்
சுபா

Saturday, November 19, 2011

ஆமைகள் வீட்டில் வளர்ப்புப் பிராணியாக...!

பூனைகள், நாய்கள், முயல்கள், பறவைகள், மீன்கள் .. இவை பலருக்கு வளர்ப்புப் பிராணிகளாக அமைந்து விடுகின்றன. ஜெர்மனியில் குதிரைகள், கழுதைகள், ஆடுகள், மாடுகள், பன்றிகள் சேவல், வாத்துக்கள், போன்றவை பெருமளவில் தொழில் நிமித்தம் வளர்க்கப்பட்டாலும் இவைகளையும் செல்லப்பிராணிகளாகக் கருதி அன்பு காட்டும் பலர் இருக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எனது நண்பர்கள் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவர்களின் செல்லப்பிராணியான ஆமைகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வீட்டிலேயே இரண்டு பெரிய ஆமைகள் இருக்கின்றன. அந்த ஆமைகள் ஏப்ரல் மாத வாக்கில் இட்ட முட்டைகளில் பல பொரிக்காமல் போனதில் அவர்களுக்கு மிகுந்த மன வருத்தம். தப்பிப் பிழைத்து 5 ஆமைக் குஞ்சுகள் உயிரோடு இருக்கின்றன. இவற்றில் மூன்றை வேறொரு நண்பருக்குக் கொடுத்து விட்டு 2 குட்டி ஆமைகளையும் பெரிய ஆமைகளையும் மட்டும் வைத்திருக்கின்றார்கள்.


நான் சென்ற சமயம் குளிர் காலத்தின் ஆரம்பம் என்பதால் ஆமைகளை ஒரு பெட்டியில் தங்க/தூங்க வைத்திருக்கின்றார்கள். அப்பெட்டியில் முதலில் நல்ல கடற்கரை மணலை போட்டு அதன் மேல் காய்ந்த சருகுகளைப் பரப்பி விடுகின்றார்கள். அதன் மேல் பெரிய ஆமையை வைத்து அதற்கு மேலே காய்ந்த சருகுகளைப் போட்டு மூடி விடுகின்றார்கள். ஒரு பெரிய ஆமைக்கு ஒரு பெரிய பெட்டி தேவைப்படுகின்றது. பெரிய ஆமையின் ஓட்டின் அளவு ஏறக்குறைய 30 செ.மீ. நீளமாக 25 செ.மீ. அகலமாக இருக்கலாம் .

ஆமைக்குஞ்சுகள் இரண்டுக்கும் ஒரு பெட்டி அமைத்திருக்கின்றார்கள்.

பெட்டிக்குள் இருக்கும் பெரிய ஆமை நீண்ட உறக்கத்தில் இருப்பதால் அதனை நான் புகைப்படம் எடுக்கவில்லை. குட்டி ஆமைகள் பெட்டிக்குள்ளே அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன. அவற்றை வெளியே தூக்கி வந்து சற்று வெயிலில் வைத்து நகர வைத்து பார்த்தோம்.

மிக அழகான விலங்குகள் தாம் ஆமைகள்.

இங்கே ஆமைகளை வீட்டில் வளர்ப்பதற்கு உள்ளூர் நகராட்சி மையத்தில் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஒவ்வொரு ஆமைக்கும் அதனை வளர்ப்பதற்காக ஒரு சான்றிதழ் பெற வேண்டியுள்ளது. புதிதாகப் பிறந்த இந்த இரண்டுக்கும் சான்றிதழ்கள் தயாரித்து விட்டனர். பதியும் போது கட்டணமும் கட்ட வேண்டிய அவசியம் உள்ளது.


கோடைக் காலத்தில் இந்த ஆமைகளைச் சாதாரணமாகச் செடிகள் இருக்கும் இடத்தில் வைத்து வேலி போட்டு விடுகின்றனர். இதனால் ஆமைகள் வெளியே போகாமல் இருக்க உதவுகின்றது. கேரட் தக்காளி போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டுக் கொண்டு இந்தப் பகுதியிலேயே இவை சுற்றிக் கொண்டிருக்குமாம். குளிர்காலம் முழுவதும் பெட்டிக்குள்ளேயே உறங்குவதுதான் இவற்றின் வேலை. 6 மாதம் வெளி உலகம் ஆறுமாதம் நீண்ட உறக்கம் என இந்த ஆமைகள் இங்கே வாழ்கின்றன.



அன்புடன்
சுபா

Sunday, November 6, 2011

இலையுதிர் காலத்து கோலங்கள்

நான் வசிக்கும் ஜெர்மனியின் தெற்குப் பகுதி நகரமான லியோன்பெர்க்கில் இலையுதிர்காலம் தொடங்கி விட்டது. இது சிறிய நகரமென்றாலும் காட்டுப் பகுதியை ஒட்டிய ஒரு நகரம் என்றே சொல்லலாம். கோடைகாலத்தில் பச்சை பசேலென காட்சியளிக்கும் காடுகள் இலையுதிர் காலத்தில் இலைகளின் நிறம் மஞ்சளாக, இளம் சிவப்பாக கருஞ்சிவப்பாக உருமாறி பின் பழுப்பு நிறமாகி தன்னை மரத்திலிருந்து விடுவித்துக் கொண்டு உதிரிந்து விடுகின்றன.

லியோன்பெர்க்கின் இலையுதிர் காலத்து அழகை என் கேமராவில் இன்று பிடித்து வைத்தேன். பாருங்களேன்.




உதிர்ந்து கிடக்கும் இலைகள்















நிறம் மாறிக்கொண்டிருக்கும் ஆப்பிள் மரங்கள்





கிறிஸ்மஸ் விழாவுக்கு தயாராகும் கிறிஸ்மஸ் மரங்கள்





உதிர்ந்த சருகுகள் குருவிக்கு வீ(கூ)டு





உடைந்த கிளைக்ளில் பச்சை பாசி





ஜெர்மானிய சமையல்... எப்படியிருக்கும்..? - 3 - knödel

அன்று சொன்ன அந்த ரெசிப்பியைச் சமைத்த போது படம் பிடித்து வைத்திருந்தாலும் பகிர்ந்து கொள்ள நேரம் அமையவில்லை. இன்று படங்களுடன் செய்முறையையும் விவரிக்கிறேன்.

Kartoffelknödeln /Kartoffelkloße  உருளைக் கிழங்கு உருண்டைகளும் காளான் சாஸும்

வேகைவைத்த உருளைக்கிழங்கை மிகச் சிறிதாக நறுக்கி அவற்றை கொஞ்சம் மாவு, உப்பு சேர்த்து பிசைந்து வட்டமாக உருட்டி வைக்கப்பட்ட உருளைக் கிழங்கு உருண்டைகள் Kartoffelknödeln   கார்ட்டோஃபெல் க்னோடல் என அழைக்கப்படுகின்றன. இதனை சுயமாகத் தயாரிக்கலாம். அல்லது கடையில் இது தயாரிக்கப்ப்ட்டு ரெடி மேடாக கிடைக்கும். அதனையும் பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தி இந்த உணவைத் தயாரிக்கலாம்.


skno1.jpg

நான் கடையில் கிடைக்கும் ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் உருளைக்கிழங்கு உருணடைகளை இந்தச் சமையலுக்குப் பயன்படுத்தியிருக்கிறேன்.

தேவையான பொருட்கள்
  • உருளைக்கிழங்கு உருண்டைகள் - ஒரு பாக்கேட்டில் 6 உருண்டைகள் இருக்கும். இது இருவருக்கு போதுமான அளவு.
  • தயாராக இருக்கும் ஏதாவது ஒரு சாஸ் கலவை - இது காளான் சாஸ் அல்லது ப்ரொக்காலி சாஸ். பெரும்பாலும் காளான் சாஸ் மிகப் பொறுத்தமாக இருக்கும்.
  • சிறிய செர்ரி தக்காளிகள்
  • உப்பு - தேவையான அளவு
  • மிளகுத் தூள் - தேவையான அளவு

இந்த சமையல் செய்வதற்கு 20 நிமிடங்கள் போதுமானது.

skno2.jpg

ஒரு பாத்திரத்தில் நிறைய நீர் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அதில் மெல்லிய துணியால் சுற்றப்பட்டிருக்கும் உருளைக்கிழங்கு உருண்டைகளைப் போடவும். பத்து நிமிடங்கள் நன்றாக இந்தக் கிழங்கு உருணடைகள் வெந்ததும் மேலே வந்து விடும். அவற்றை மெதுவாக எடுத்து குளிர்ந்த தண்ணீரில் ஒரு முறை நனைத்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். இப்போது உருளைக்கிழங்கு உருணடைகளை மூடியிருக்கும் மெல்லிய துணியை நீக்கி விடவும்.

skno3.jpg


உருளைக் கிழங்கு கொதித்துக் கொண்டிருக்கும் போதே சாஸ் தயாரிக்க ஆரம்பிக்கலாம். சாஸ் கலைவையை 500 மி.லிட்டர் தண்ணீர் சேர்த்து அதனை நன்றாக கலக்கி மிதமான சூட்டில் வைத்து கிளறவும். 5 நிமிடங்கள் இவ்வாறு கிளறியவுடன் சாஸ் கலவை தயாராகி விடும்.

இப்போது ஒரு தட்டில் உருளைக்கிழங்கு உருண்டைகளை வைத்து அதன் மேல் சாஸ் தேவையான அளவு சேர்க்கவும். சுவையைக் கூட்ட செர்ரி தக்காளிகளைச் சேர்த்து கொஞ்சம் மிளகுத் தூளைத் தூவி அலங்கரித்து சாப்பிடவும்.

skno4.jpg


இது தெற்கு ஜெர்மனியில் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று.