Sunday, November 27, 2011

அட்வெண்ட் முதல் ஞாயிறு

கிறிஸ்மஸ் பண்டிகை இங்கு களை கட்டத் தொடங்கி விட்டது. கடந்த வியாழன் ஜெர்மனியின் நாடெங்கிலும் பல நகர்களிலும் சிறு கிராமங்களிலும் Weinachtsmarkt எனச் சொல்லப்படும் கிறிஸ்மஸ் சந்தை தொடங்கி விட்டது. சிறு கூடாரங்கள் அமைத்து அதில் கிறிஸ்மஸ் அலங்காரங்களைப் பல வடிவங்களில் செய்து விற்பனைக்குப் பொருட்களை வைத்து விற்பது வழக்கம்.

குறிப்பாக இவ்வித சந்தைகளில் விதம் விதமான மெழுகு வர்த்திகள், தேனீர் கலவைகள், வாசனை சோப்பு, வீட்டு அலங்காரப் பொருட்கள், கிறிஸ்மஸ் சிறப்பு இனிப்புப் பண்டங்கள் ஆகியவை கிடைக்கும். சூடான க்ளூ வைன் அருந்துவது இந்த கிறிஸ்மஸ் சந்தைக்கு வந்து செல்வோர் அனைவரின் விருப்பமும் கூட.

இங்கு கிடைக்கும் மெழுகுவர்த்திகள் பல்வேறு வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். குறிப்பாக தேனில் கலந்து செய்யப்பட்ட மெழுகுவர்த்திகள் , பழங்கள் கலந்து தயாரிக்கப்பட்ட மெழுகுவர்த்திகள், பூக்கள் கலந்து தயாரிக்கப்பட்டவை, மூலிகை இலைகள் கலந்து தயாரிக்கப்பட்டவை என விதம் விதமாக் கண்களைக் கவரும் வகையில் இவை கிடைக்கும்.

தேனீர் கலவைகளில் பலவகைகளைக் வைத்திருப்பார்கள். ஆரஞ்சுடன் கலந்த தேனீர், பல்வேறு மூலிகைகள் கலந்தவை, உலர்ந்த பழங்கள் சேர்க்கப்பட்டவை, என இவற்றிலும் வித்தியாசங்களைக் காணலாம். நான் இம்முறை கிற்ஸ்மஸ் தேனீர் எனப்படும் மூலிகைகள் கலந்த தேனீர் கலவை வாங்கியிருக்கிறேன்..

அதோடு பிரத்தியேகமாக இந்த கிற்ஸ்மஸ் சந்தைகளில் வகை வகையான தேன்களையும் விற்பனைக்கு வைத்திருப்பார்கள், காட்டு மரங்களின் பூக்களிலிருந்து கிடைக்கும் தேன், லவென்டர் பூக்களிலிருந்து கிடைக்கும் தேன் என இவற்றிலும் பலவற்றை சாப்பிட்டுப் பார்த்து நமக்குப் பிடிக்கும் தேனை வாங்கிக் கொள்ளலாம். இம்முறை கிற்ஸ்மஸ் மரத்தின் ஒருவித பூவிலிருந்து எடுக்கப்படும் தேன் ஒன்றினை வாங்கியிருக்கின்றேன். மென்மையான, அதே சமயம் வித்தியாசமான இனிப்புச் சுவை கொண்ட தேன் இது.

அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு கூடாரங்களையும் பார்ப்பது மகிழ்ச்சியான ஒரு விஷயம். மிக அழகாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் இவற்றின் கூறை பகுதி தான் கண்கவர் காட்சியாக அமைந்து விடும்.

இந்தக் கூடாரங்கள் கிறிஸ்மஸ் நாளிற்கு இரண்டு நாள் வரை வைத்திருப்பார்கள். ஏறக்குறைய 27 அல்லது 28 நாட்கள் இக்கூடரங்களின் சொந்தக்காரர்கள் அதே இடத்தில் தங்கள் விற்பனையை நடத்திக் கொண்டிருப்பார்கள்.

கிற்ஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் முதல் அட்வெண்ட் ஞாயிறு வாழ்த்துக்கள்.




















































அன்புடன்
சுபா

Saturday, November 19, 2011

ஆமைகள் வீட்டில் வளர்ப்புப் பிராணியாக...!

பூனைகள், நாய்கள், முயல்கள், பறவைகள், மீன்கள் .. இவை பலருக்கு வளர்ப்புப் பிராணிகளாக அமைந்து விடுகின்றன. ஜெர்மனியில் குதிரைகள், கழுதைகள், ஆடுகள், மாடுகள், பன்றிகள் சேவல், வாத்துக்கள், போன்றவை பெருமளவில் தொழில் நிமித்தம் வளர்க்கப்பட்டாலும் இவைகளையும் செல்லப்பிராணிகளாகக் கருதி அன்பு காட்டும் பலர் இருக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எனது நண்பர்கள் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவர்களின் செல்லப்பிராணியான ஆமைகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வீட்டிலேயே இரண்டு பெரிய ஆமைகள் இருக்கின்றன. அந்த ஆமைகள் ஏப்ரல் மாத வாக்கில் இட்ட முட்டைகளில் பல பொரிக்காமல் போனதில் அவர்களுக்கு மிகுந்த மன வருத்தம். தப்பிப் பிழைத்து 5 ஆமைக் குஞ்சுகள் உயிரோடு இருக்கின்றன. இவற்றில் மூன்றை வேறொரு நண்பருக்குக் கொடுத்து விட்டு 2 குட்டி ஆமைகளையும் பெரிய ஆமைகளையும் மட்டும் வைத்திருக்கின்றார்கள்.


நான் சென்ற சமயம் குளிர் காலத்தின் ஆரம்பம் என்பதால் ஆமைகளை ஒரு பெட்டியில் தங்க/தூங்க வைத்திருக்கின்றார்கள். அப்பெட்டியில் முதலில் நல்ல கடற்கரை மணலை போட்டு அதன் மேல் காய்ந்த சருகுகளைப் பரப்பி விடுகின்றார்கள். அதன் மேல் பெரிய ஆமையை வைத்து அதற்கு மேலே காய்ந்த சருகுகளைப் போட்டு மூடி விடுகின்றார்கள். ஒரு பெரிய ஆமைக்கு ஒரு பெரிய பெட்டி தேவைப்படுகின்றது. பெரிய ஆமையின் ஓட்டின் அளவு ஏறக்குறைய 30 செ.மீ. நீளமாக 25 செ.மீ. அகலமாக இருக்கலாம் .

ஆமைக்குஞ்சுகள் இரண்டுக்கும் ஒரு பெட்டி அமைத்திருக்கின்றார்கள்.

பெட்டிக்குள் இருக்கும் பெரிய ஆமை நீண்ட உறக்கத்தில் இருப்பதால் அதனை நான் புகைப்படம் எடுக்கவில்லை. குட்டி ஆமைகள் பெட்டிக்குள்ளே அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன. அவற்றை வெளியே தூக்கி வந்து சற்று வெயிலில் வைத்து நகர வைத்து பார்த்தோம்.

மிக அழகான விலங்குகள் தாம் ஆமைகள்.

இங்கே ஆமைகளை வீட்டில் வளர்ப்பதற்கு உள்ளூர் நகராட்சி மையத்தில் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஒவ்வொரு ஆமைக்கும் அதனை வளர்ப்பதற்காக ஒரு சான்றிதழ் பெற வேண்டியுள்ளது. புதிதாகப் பிறந்த இந்த இரண்டுக்கும் சான்றிதழ்கள் தயாரித்து விட்டனர். பதியும் போது கட்டணமும் கட்ட வேண்டிய அவசியம் உள்ளது.


கோடைக் காலத்தில் இந்த ஆமைகளைச் சாதாரணமாகச் செடிகள் இருக்கும் இடத்தில் வைத்து வேலி போட்டு விடுகின்றனர். இதனால் ஆமைகள் வெளியே போகாமல் இருக்க உதவுகின்றது. கேரட் தக்காளி போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டுக் கொண்டு இந்தப் பகுதியிலேயே இவை சுற்றிக் கொண்டிருக்குமாம். குளிர்காலம் முழுவதும் பெட்டிக்குள்ளேயே உறங்குவதுதான் இவற்றின் வேலை. 6 மாதம் வெளி உலகம் ஆறுமாதம் நீண்ட உறக்கம் என இந்த ஆமைகள் இங்கே வாழ்கின்றன.



அன்புடன்
சுபா

Sunday, November 6, 2011

இலையுதிர் காலத்து கோலங்கள்

நான் வசிக்கும் ஜெர்மனியின் தெற்குப் பகுதி நகரமான லியோன்பெர்க்கில் இலையுதிர்காலம் தொடங்கி விட்டது. இது சிறிய நகரமென்றாலும் காட்டுப் பகுதியை ஒட்டிய ஒரு நகரம் என்றே சொல்லலாம். கோடைகாலத்தில் பச்சை பசேலென காட்சியளிக்கும் காடுகள் இலையுதிர் காலத்தில் இலைகளின் நிறம் மஞ்சளாக, இளம் சிவப்பாக கருஞ்சிவப்பாக உருமாறி பின் பழுப்பு நிறமாகி தன்னை மரத்திலிருந்து விடுவித்துக் கொண்டு உதிரிந்து விடுகின்றன.

லியோன்பெர்க்கின் இலையுதிர் காலத்து அழகை என் கேமராவில் இன்று பிடித்து வைத்தேன். பாருங்களேன்.




உதிர்ந்து கிடக்கும் இலைகள்















நிறம் மாறிக்கொண்டிருக்கும் ஆப்பிள் மரங்கள்





கிறிஸ்மஸ் விழாவுக்கு தயாராகும் கிறிஸ்மஸ் மரங்கள்





உதிர்ந்த சருகுகள் குருவிக்கு வீ(கூ)டு





உடைந்த கிளைக்ளில் பச்சை பாசி





ஜெர்மானிய சமையல்... எப்படியிருக்கும்..? - 3 - knödel

அன்று சொன்ன அந்த ரெசிப்பியைச் சமைத்த போது படம் பிடித்து வைத்திருந்தாலும் பகிர்ந்து கொள்ள நேரம் அமையவில்லை. இன்று படங்களுடன் செய்முறையையும் விவரிக்கிறேன்.

Kartoffelknödeln /Kartoffelkloße  உருளைக் கிழங்கு உருண்டைகளும் காளான் சாஸும்

வேகைவைத்த உருளைக்கிழங்கை மிகச் சிறிதாக நறுக்கி அவற்றை கொஞ்சம் மாவு, உப்பு சேர்த்து பிசைந்து வட்டமாக உருட்டி வைக்கப்பட்ட உருளைக் கிழங்கு உருண்டைகள் Kartoffelknödeln   கார்ட்டோஃபெல் க்னோடல் என அழைக்கப்படுகின்றன. இதனை சுயமாகத் தயாரிக்கலாம். அல்லது கடையில் இது தயாரிக்கப்ப்ட்டு ரெடி மேடாக கிடைக்கும். அதனையும் பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தி இந்த உணவைத் தயாரிக்கலாம்.


skno1.jpg

நான் கடையில் கிடைக்கும் ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் உருளைக்கிழங்கு உருணடைகளை இந்தச் சமையலுக்குப் பயன்படுத்தியிருக்கிறேன்.

தேவையான பொருட்கள்
  • உருளைக்கிழங்கு உருண்டைகள் - ஒரு பாக்கேட்டில் 6 உருண்டைகள் இருக்கும். இது இருவருக்கு போதுமான அளவு.
  • தயாராக இருக்கும் ஏதாவது ஒரு சாஸ் கலவை - இது காளான் சாஸ் அல்லது ப்ரொக்காலி சாஸ். பெரும்பாலும் காளான் சாஸ் மிகப் பொறுத்தமாக இருக்கும்.
  • சிறிய செர்ரி தக்காளிகள்
  • உப்பு - தேவையான அளவு
  • மிளகுத் தூள் - தேவையான அளவு

இந்த சமையல் செய்வதற்கு 20 நிமிடங்கள் போதுமானது.

skno2.jpg

ஒரு பாத்திரத்தில் நிறைய நீர் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அதில் மெல்லிய துணியால் சுற்றப்பட்டிருக்கும் உருளைக்கிழங்கு உருண்டைகளைப் போடவும். பத்து நிமிடங்கள் நன்றாக இந்தக் கிழங்கு உருணடைகள் வெந்ததும் மேலே வந்து விடும். அவற்றை மெதுவாக எடுத்து குளிர்ந்த தண்ணீரில் ஒரு முறை நனைத்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். இப்போது உருளைக்கிழங்கு உருணடைகளை மூடியிருக்கும் மெல்லிய துணியை நீக்கி விடவும்.

skno3.jpg


உருளைக் கிழங்கு கொதித்துக் கொண்டிருக்கும் போதே சாஸ் தயாரிக்க ஆரம்பிக்கலாம். சாஸ் கலைவையை 500 மி.லிட்டர் தண்ணீர் சேர்த்து அதனை நன்றாக கலக்கி மிதமான சூட்டில் வைத்து கிளறவும். 5 நிமிடங்கள் இவ்வாறு கிளறியவுடன் சாஸ் கலவை தயாராகி விடும்.

இப்போது ஒரு தட்டில் உருளைக்கிழங்கு உருண்டைகளை வைத்து அதன் மேல் சாஸ் தேவையான அளவு சேர்க்கவும். சுவையைக் கூட்ட செர்ரி தக்காளிகளைச் சேர்த்து கொஞ்சம் மிளகுத் தூளைத் தூவி அலங்கரித்து சாப்பிடவும்.

skno4.jpg


இது தெற்கு ஜெர்மனியில் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று.

Monday, October 31, 2011

தென்னிந்திய சினிமா கலைஞர்களின் நிகழ்ச்சி

ஐரோப்பாவில் என்றாவது ஒருமுறை தென்னிந்திய சினிமா கலஞர்களின் நிகழ்வுகள் நடப்பது வழக்கம். அப்படியே ஏற்பாடு செய்து நடந்தாலும் பெறும்பாலும் லண்டன், சுவிஸர்லாந்தில் பெர்ன் நகரிலோ அல்லது ப்ரான்ஸில் பாரிஸிலோ நடைபெறுவது உண்டு. ஒரு மாற்றமாக ஸ்டுட்கார்ட் நகரில் நேற்று ஒரு இசை நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. சனிக்கிழமை எனக்கு மின்னஞ்சலில் வந்திருந்த தகவலை வைத்து தொலைபேசியில் அழைத்து விசாரித்ததில் நிகழ்ச்சி நடைபெறுவது உண்மைதான் என்று உறுதியானதும் எனக்கும் ஒரு டிக்கெட் பதிவு செய்து கொண்டேன்.

லக்‌ஷ்மன் ஸ்ருதி இசைக் குழுவினர் பிரபல தமிழ் சினிமா பாடகர்கள் ஷைந்தவி, மாலதி, க்ரிஷ், ஹரிசரன் ஆகியோருடன் வந்திருந்து நிகழ்ச்சியை நடத்தினர்.






தொலைபேசியில் அழைத்து விசாரித்த போது மாலை 4 மணிக்கு நிகழ்வு என்று தெரிந்து சரியாக நான்கு மணிக்குச் சென்று விட்டேன். நான் எதிர்பார்த்ததற்கும் மாறாக ஒரு துருக்கியர்கள் திருமண மண்டபம் போன்ற ஒன்றில் இந்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. ஏறக்குறை 4:30 மணிக்குத்தான் கதவை திறந்து உள்ளே அனுமதித்தனர். உள்ளே அனுமதிக்கப்பட்டாலும் மேடையில் கலைஞர்களின் இசைக் கருவிகள் ஒழுங்கு செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் மாலை 6:20க்குத் தான் நிகழ்ச்சியைத் தொடங்கினர். அதில் பல தொழில் நுட்பச் சிக்கல்கள். ஏற்பாட்டில் நிகழ்ந்த சிற்சில பிரச்சனைகள் சரியான நேரத்திற்கு நிகழ்ச்சியை ஆரம்பிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்தி விட்டது.

நிகழ்ச்சியை ஆரம்பிக்க சிங்கையிலிருந்து வந்திருந்த ஒரு நடனக்குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது. நடனம் ஏமாற்றமாகவே அமைந்து விட்டது. பாடகர்களில் முதல்பாடலை ஆரம்பித்து வைத்தார் ஷைந்தவி. மிக அருமையான குரலில் இனிமையாக குறையொன்றுமில்லை என்ற கீர்த்தனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பாடகி மாலதி ஒரு பாடல் பாட பாடகர் ஹரிசரன் வந்து ஒரு சினிமா பாடலை பாடினார். அதற்குப் பிறகு பாடகர் க்ரிஷ் டி.ஆர்.ராஜேந்திரனின் சலங்கையிட்டாள் ஒரு மாது எனும் பாடலை பாடி மகிழ்வித்தார். இவருக்கு மிக நல்ல தமிழ் உச்சரிப்பு. ஏனைய சினிமா பிரபலங்கள் போல் இல்லாமல் தயங்காமல் மிகச் சரளமாகத் தமிழ் பேசுகின்றார். அத்துடன் மேடையை விட்டுடிறங்கி வந்து பொது மக்களில் சிலரையும் பாட வைத்து கலாட்டா செய்து வந்திருந்தவர்களை மகிழ்ச்சி படுத்தினார்.




திரு.லக்‌ஷ்மணன் நல்ல மிமிக்ரி கலைஞர் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. மிக நல்ல திறமையுடயவர். எல்லோரும் ரசித்து சிரிக்கும்படி மிமிக்ரி செய்து காட்டினார்.

அத்தனை பிரச்சனைகளையும் மேடையில் இருந்து சமாளித்துக் கொண்டே நிகழ்ச்சியை முடிந்தவரை நல்ல முறையில் கொண்டு செல்ல ப்ரயத்தனம் செய்து கொண்டிருந்தார். இடையிடையே மைக் செட் ஏற்பாடு செய்யும் ஊழியர் குறுக்கிட்டு தனது வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் பொறுமையுடன் அதனையும் சுவாரஸியமாக மாற்றி நிகழ்ச்சியைக் கொண்டு சென்றார். அதறகு எனது பாராட்டுக்கள்.


இந்த பாடகர்களோடு சிறுமி அமுதா, குமாரி.பிரியா ஆகியோரும் மிக அருமயான பாடல்களை வழங்கினர்.

நேரம் அதிகமாகிவிட்டதால் நான் இரவு 9 மணிக்கு புறப்பட்டு விட்டேன். நிச்சயம் மேலும் 2 மணி நேரங்கள் நிகழ்ச்சி நடைபெற்றிருக்கும் என்றே நினைக்கிறேன்.

அடுத்த முறை இம்மாதிரி நிகழ்வுகளை செய்ய வருபவவர்கள் ஒரு நாள் முன்னரே வந்து தயாரிப்பு ஏற்பாடுகளையும் சரியாக இருக்கின்றதா எனக் கவனித்துக் கொள்வது கலைஞர்கள் எந்த தடங்கலும் பிரச்சனையும் இல்லாமல் நிகழ்ச்சிகளை நடத்த உதவும். இதனை மனதில் கொண்டு செயல்பட்டால் தரமான இந்த இசைக் கலைஞர்கள் தங்கள் படைப்புக்களை திருப்தியாகச் செய்து முடித்து மன மகிழ்ச்சியுடன் திரும்பலாம்.

படங்கள்...



சிங்கை நடனக் குழுவினர்



சிங்கை நடனக் குழுவினர்



இசைக்குழுவினர்



செல்வி.அமுதா



பாடகர் க்ரிஷ் மற்றும் திரு.லக்‌ஷ்மன்



பாடகர் ஹரிசரன்



பாடகி ப்ரியா







அன்புடன்
சுபா

Monday, October 10, 2011

ஜெர்மானிய சமையல்... எப்படியிருக்கும்..? - 2 மவுல்டாஷன்


உங்கள் ஊக்கம் தரும் நம்பிக்கையில் முதல் உணவு வகையைப் பற்றி சில தகவல்கள் இன்று பகிர்ந்து கொள்கின்றேன்.

நான் வாழ்வது ஷ்வாபன் நகரத்திலே.. அதாவது பாடன் உர்ட்டெம்பெர்க் மானிலத்தின் மக்களை "ஷ்வாப",  "ஷ்வேபிஷ்" என அழைப்பது வழக்கம். இந்த மானிலத்து மக்களின் உணவு எனக்கு மிகப் பரிச்சயமாகி இருப்பதால் இதன் உதாரணங்களிலிருந்து ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்.

பொதுவாகவே ஷ்வாப என்றாலே அதற்கு மறைமுகமாக ஒரு கருத்தும் உண்டு.. அதாவது இந்த மக்கள் கஞ்சத்தனம் கொண்டவர்கள்.. பணத்தை வீணாக்க மாட்டார்கள்.. பணத்தைச் சேகரித்து வைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள் என்பது இவர்களைப் பற்றி மற்ற பகுதி ஜெர்மானியர்கள் கேலி செய்து பேசுவது வழக்கம்.

இங்கு நண்பர்கள் எனக்கு ஷ்வாபன் மக்களைப் பற்றி விளக்கிய போது ஒரு பாடலின் இரண்டு வரிகளை அறிமுகப்படுத்தினர்
Schaffe, schaffe, Häusle baue,
Und net nach de Mädle schaue.

ஒரு ஆட்டிடம் பேசுவது போல.. ஆடே.. ஆடே வீடு கட்டு.. அதோடு சும்மா அந்த இளம் பெண்ணை பார்த்துக் கொண்டிருக்காதே.. என்று கேலி செய்வது போல அமைந்த நீளமான ஒரு பாட்டு.

இந்தப் பாடலை முழுதுமாக பாருங்களேன்.. 60களில் பதிவு செய்யப்பட்ட பதிவாக இருக்கலாம். ஆனால் இந்தப் பாடல் இன்னமும் ஒரு சில முதியோர்களிடையே பிரபலம் தான்..!

http://www.youtube.com/watch?v=wayYus43QPw&feature=related

இதில் குறிப்பாக உணர்த்தப்படுவது ஒரு ஷ்வாப மனிதனுக்கு முக்கியமாக அமைவது ஒரு வீடு. .அவன் அருந்த பியரும் வைனும்.. மற்றவர்கள் சொகுசாக இருந்தாலும் எனக்கு எப்போதும் பணம் குறைவாகவே உள்ளது என்பதாகும்..
இவர்கள் எப்போதும் எவ்வளவு பணம் இருந்தாலும் குறைவாக இருக்கின்றது என்றே சொல்லிக் கொள்பவர்கள்..

சரி.. இன்று நாள் உங்களுக்கு எப்படி இருக்கின்றது என்று கேட்டால்.. ஹ்ம்ம்ம்.. இன்னமும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.. என்று தான் பதில் வரும்.

எப்படி இருக்கின்றீர்கள்..?  இன்று என்று கேட்டால்..    இருக்...கேன்.. (Ja .. es geht..) என்று தான் பதிலிருக்கும். ஆனால் மிக நன்றாக இருக்கின்றார்கள் என்று அதற்கு பொருள். :-)


சரி.. இன்றைய சமையலுக்கு வருவோமே..!

முதலில் இப்பகுதியை அலங்கரிப்பது "கெரொஸ்டெடெ மவுல்டாஷன்" (Gerostete Maultaschen) அதாவது வறுத்த மவுல்டாஷன் என்று மொழி பெயர்க்கலாம்.

மவுல்டாஷன் பற்றிய விபரம் 18ம் நூற்றாண்டு வாக்கிலேயே புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

மவுல்டாஷ்ன் என்றாலே பொதுவாக ரொட்டி தயாரிப்பது போன்று தயாரிக்கப்பட்ட ஒரு கலவைக்குள் அறைத்துக் கலந்த பொருட்களை திணித்து ஒரு சிறு பெட்டி போன்ற அமைப்பில் சுற்றி வைத்திருப்பதாகும்.

மவுல் என்றால் விலங்கின் வாய், டாஷன் என்றால் பெட்டி என்று மொழிபெயர்க்கலாம்.

எனக்குப் பிடித்த, மிக எளிய, விரைவில் அதாவது 20 நிமிடத்தில் தயாரிக்கக் கூடிய உணவு இது. மவுல்டாஷனின் இரண்டு வகை உண்டு.
1. பன்றி இறைச்சியுடன் மசித்து சேர்த்த காய்கறிகளைக் கொண்டது. இது தான் பாரம்பரியமானது.
2.கீரையுடன், உருளைக் கிழங்கு காரட் பீன்ஸ் மசித்து கலந்து அடைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கின்றது.

நாம் இன்று காணப்போவது சைவ மவுல்டாஷ்ன் (காய்கறிகள், மாவு மட்டுமே சேர்க்கப்பட்டது)

தேவையான பொருட்கள்:

  • வெஜிடேரியன் மவுல்டாஷன் - ஒரு பாக்கெட். இதில் ஆறு துண்டுகள் இருக்கும்
  • வெங்காயம் - 1 பெரியது
  • காரட் - 1  பெரியது விரும்பும் வகையில் வெட்டிக் கொள்ளவும்
  • சிவப்பு குடை மிளகாய் - விரும்பும் வகையில் நறுக்கிக் கொள்ளவும்.
  • ப்ரோக்கோலி - விரும்பும் அளவு சேர்க்கவும் - முழுதும் அல்லது பாதி
  • தக்காளி - 2 பெரியது. ஒவ்வொன்றையும் 6 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  • கோட்டேஜ் சீஸ் - 6 கரண்டி
  • ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • ஒரிகானோ - பொடி
  • மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
  • உப்பு - சுவைக்கேற்ப


முதலில் மவுல்டாஷனை அதன் பாக்கெட்டிலிருந்து பிரித்து ஒவ்வொன்றையும் 4 துண்டுகளாக நீளமாக வெட்டிக் கொள்ளவும்.



ஒரு ஃப்ரயிங் பேனில் 1 கரண்டி ஆலிவ் எண்ணெய் விட்டு சூடாவதற்கு முன்னரே மவுல்டாஷனைச் சேர்த்து சூடு மெதுவாக வர வர திருப்பிப் போட்டு பார்த்துக் கொள்ளவும். 5 நிமிடங்கள் இப்படி வைத்திருக்கலாம். மவுல்டாஷனின் தோல் பகுதி மொறு மொறுப்பாக பொன்னிறமாக மாறும்.

அதே வேளை வெங்காயம், குடை மிளகாய் காரட் ப்ரோகோலி ஆகியவற்றை விரும்பும் அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு  ஃப்ரயிங் பேனில் ஆலிவ் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தைச் சேர்த்து அது பொன்னிறமாக வந்ததும் காரட் ப்ரோக்கோலி சேர்த்து மூடி மிதமான தணலில் வேகவைக்கவும். 3 நிமிடங்கள் வெந்ததும் உப்பு சேர்த்து கிளறி அடுப்பை அனைத்து விடவும்.



இப்போது இதன் கலவையை மவுல் டாஷன் தயாராகிக் கொண்டிருக்கும் பேனில் சேர்க்கவும்.

மெதுவாக மவுல்டாஷன் உடையாதவாறு கிளறி, தக்காளி சேர்த்து, உப்பும் மிளகும் ஒரிகானோ பொடியையும் தூவி மெதுவாகக் கிண்டி விடவும்.

ஐந்து நிமிடங்கள் இப்படி கலந்து தயாரானதும் கோட்டேஜ் சீஸை நீங்கள் விரும்பும் அளவிற்குச் சேர்த்து மெதுவாக இரண்டு முறை கிளறி அடுப்பை அணைத்து விடவும்.



கெரொஸ்டெடெ மவுல்டாஷன் இப்போது தயார். விரும்பும் வகையில் அலங்கரித்து சாப்பிட்டு மகிழவும்.

மவுல்டாஷனை முதலில் கண்டு பிடித்தவர்கள் மாவுல்ப்ரோன் (Maulbronn)  மடத்தின் சாதுக்கள் என்றும் தாங்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் சைவமாக இருந்து விரதம் கடைபிடிக்க வேண்டிய அந்த ஒரு மாத கால கட்டத்தில் குறிப்பாக பன்றி இறைச்சியை இப்படி சுற்றி வைத்து சாப்பிடுவது இறைவனுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகக் கண்டு ப்டித்ததாக விக்கிபீட்டியாவில் குறிப்பு உள்ளது. இது உண்ண்மையான காரணாமா என்பது தெரியவில்லை.

ஆனால் இங்கு மடங்களின் சாதுக்கள் தாம் பெரும்பாலும் வெவ்வேறு விதமான பியர்களை உருவாக்கியவர்கள் என்பது ஒரு கூடுதல் தகவல் உங்களுக்காக!


அன்புடன்
சுபா