Tuesday, June 9, 2020

Georg Floyd - லியோபர்ட்டின் சிலை

Georg Floyd - ஜோர்ஜ் ப்ளோய்டின் மரணம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இனவாதத்திற்கு எதிரான குரலின் தொடர்ச்சியாக பெல்ஜியம் நாட்டின் கிபி 19ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர் 2ம் லியோபர்ட்டின் ( King Leopold II) சிலையைப் பொது மக்கள் அவமானப் படுத்தி நீக்கியுள்ளனர். பெல்ஜியம் வரலாற்றில் நீண்ட காலம் 1865 லிருந்து 1909 வரை ஆட்சி செயத மாமன்னர் இவர். அண்ட்வெர்ப் நகரிலும் கெண்ட் நகரிலும் உள்ள இவரது பிரமாண்டமான சிலைகளைப் பொது மக்கள் அவமானப்படுத்தி தகர்த்தி நீக்கியுள்ளனர்.

ஏன்..?

தனது ஆட்சி காலத்தில் ஆப்பிரிக்காவின் கோங்கோ நாட்டைக் கைப்பற்றி அதன்முழு வளத்தையும் சுரண்டியதோடு கோங்கோ மக்களை அடிமைகளாக்கி கசக்கிப்பிழிந்து துன்புறுத்திய ஒருவன் என்று `புகழ்பெற்றவர்` இந்த மாமன்னர். இத்தனைக்கும் இந்த மன்னன் கோங்கோ நாட்டிற்கு ஒருமுறையும் நேரில் சென்றதில்லை. பெல்ஜியம் அரண்மனையில் அமர்ந்து சொகுசு வாழ்க்கையை ரசித்துக் கொண்டே ஆப்பிரிக்க நாட்டின் மக்களை வாட்டி வேலை வாங்கி அதில் பெற்ற செல்வத்தை ஐரோப்பாவிற்குக் கொண்டு வந்து நாட்டை வளமாக்கிய மன்னர் இவர்.

பெல்ஜியம் நாட்டு மக்கள் இனவாதத்துக்கு எதிராக கோங்கோவில் அடக்குமுறையை வெற்றிகரபப்படுத்திய நிகழ்வுகளின் குறியீடான மன்னர் 2ம் லியோபர்ட்டின் சிலையைத் தகர்த்ததன் வழி தங்கள் கோபத்தை வெளிப்படுத்திக்கொள்கின்ற அதே வேளை உலகிற்கு தங்கள் இனவாத சிந்தனைக்கு எதிரான கருத்தியலைப் பதிய வைத்துள்ளனர். இதனைச் செய்தவர்கள் கோங்கோ நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. மாறாகா பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பொதுமக்கள் தான்.

கொரோனா கொள்ளை நோய் பரவலின் தாக்கம் ஐரோப்பாவில் குறைந்து வரும் வேளையில் தங்கள் நலனையும் மறந்து ஒட்டுமொத்த உலக மக்களின் நீதிக்காக, இனவாதம் ஒழியவேண்டும் என்ற ஒற்றைச் சிந்தனையுடன் ஐரோப்பாவில் கடந்த சில நாட்களாக எழுந்துள்ள இந்த எழுச்சி வியக்க வைக்கின்றது!






-சுபா

Georg Floyd & Edward Colston

Georg Floyd - ஜோர்ஜ் ப்ளோய்டின் மரணம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இனவாதத்திற்கு எதிரான எழுச்சியும் அதனை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் உலக மக்கள் யோசிக்க வேண்டிய ஒரு முக்கியச் செய்தி என்று நான் நினைக்கின்றேன்.

நேற்று முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் ப்ரிஸ்டல் நகரில் அந்த நகருக்கு கடந்த சில தினங்கள் வரை முக்கியஸ்தராகக் கருதப்பட்ட Edward Colston சிலை தகர்த்தெரிந்து ஆற்றில் வீசப்பட்டது.

யார் இவர்?

1680ல் Royal African Company (RAC) என்ற நிறுவனத்தை உறுவாக்கி ஆப்பிரிக்காவிலிருந்து மக்களை வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லும் அடிமைத்தொழிலை மிகத் தீவிரமாகச் செய்தவர். ஏறக்குறைய 100,000 மேற்கு ஆப்பிரிக்க மக்கள் இவரால் கரீபியத் தீவுகளுக்கும் அமெரிக்காவிற்கும் அடிமைகளாக விற்கப்பட்டனர். அடிமை வாழ்க்கையின் கொடூரம் வார்த்தைகளால் எழுத முடியாது.


இன்று இந்த மனிதரின் உருவச் சிலை ப்ரிஸ்டல் நகருக்கு பெருமையல்ல என பொதுமக்களே நினைத்து உடைத்து எரிந்து விட்டார்கள். உடைத்ததும், வீசியதும் சரியா தவறா என்பது இன்று ஒரு கேள்வியல்ல. மாறாக மக்கள் மனதிலிருந்து அடிமைத்தனத்தை வித்திட்டவர்கள் அகற்றப்படுவார்கள் என்பது இனவாதம் பேசுபவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
இந்திய மற்றும் தமிழ்ச்சிந்தனையிலிருந்து சாதி உயர்வு தாழ்வு பார்த்து இனவாதம் செய்யும் நபர்களும் இதனை யோசிப்பார்களாக!

https://www.euronews.com/2020/06/08/bristol-statue-toppling-who-was-edward-colston-and-why-did-anti-racism-protesters-target-h?fbclid=IwAR2yEWUq22-HEhEPKFTt_wl60Z8ZB_6sW0GG_mcC4S8r4S0CfN_sbqon8YQ



-சுபா

Monday, June 8, 2020

ப்ளோய்டின் மரணம் ஐரோப்பாவில் எதிரொலிக்கின்றது

உலகின் வேறொரு பகுதியில் அநீதி இழைக்கப் பட்டாலும் அதற்குக் குரல் கொடுப்போம் என்று ஜெர்மனியிலும் மக்கள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் குரல்களைக் கடந்த மூன்று நாட்களாக மிகப்பெரும் அளவில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜெர்மனியின் பெரு நகரங்களான பெர்லின், ஸ்டுட்கார்ட், மியூனிக், ஹாம்பர்க், லைப்சிக் போன்ற பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை எனக் கடந்த மூன்று நாட்களும் மிகப்பெரிய அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய அளவில் இனவாதத்திற்கு எதிரான பொதுமக்கள் பேரணி நடைபெற்றது.
கொரோனா பேரிடர் கால முடக்கம் இருக்கின்ற சூழலிலும் இந்தப் பேரணி மக்களின் சிந்தனையில் எழுந்துள்ள இனவாதத்திற்கு எதிரான கடும் கோபத்தை வெளிப்படுத்துவது என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது.
அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளோய்ட் கருப்பர் என்ற இனவாதத்தின் அடிப்படையில் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஐரோப்பாவின் பல நாடுகளிலும் கடந்த மூன்று நாட்களாக பேரளவிலான இனவாதத்தைக் கண்டிக்கும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளோய்டின் மரணம் ஐரோப்பாவில் குறிப்பாக, ஜெர்மனியிலும் இனவாத சிந்தனை தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு வகையில் ஊடுருவி இருப்பதை மக்கள் வெளிப்படையாக இப்போது பேசுகின்றார்கள். இந்தப் பேரணிகள் ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவிலும் வெள்ளையர் சிந்தனைப் போக்கு மீளாய்வு செய்ய ஒரு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறது!




-சுபா

Sunday, May 17, 2020

ஐரோப்பா - கொரொனா தொடர்பான தகவல்கள்


ஜெர்மனியின் எல்லை நாடான லுக்சும்போர்க் நாட்டிற்கான எல்லை போக்குவரத்துத் தடையை நீக்கி 15.5.2020 இரு நாடுகளுக்குமான போக்குவரத்தை அனுமதித்தது ஜெர்மனி.
நெதர்லாந்துக்கான எல்லையும் திறக்கப்பட்டது.

ஜெர்மனியிலிருந்து பிரான்ஸ் ஸ்விட்சர்லாந்து ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு உறவினர்களைச் சந்திக்கச் செல்பவர்களுக்கும் அலுவலக ரீதியாக பயணிப்பவர்களுக்கும் எல்லைகள் திறக்கப்பட்டன. முழுமையான எல்லைத் திறப்பு அல்ல இது என்றாலும் முதல் கட்ட நடவடிக்கை எனலாம்.
டென்மார்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய இரு நாடுகளுக்குமான எல்லை போக்குவரத்து வருகின்ற நாட்களில் இதேபோல சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என்பதை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஜூன் மாத மத்தியில் ஜெர்மனியின் எல்லா எல்லை நாடுகளுக்குமான எல்லை கட்டுப்பாட்டை நீக்கும் முயற்சியை ஜெர்மனி தொடங்கியுள்ளது.
ஜூன் 3 முதல் இத்தாலி தனது எல்லையை திறக்கின்றது. சுற்றுலாத்துறை மற்றும் விவசாயத் துறையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

படிப்படியாக ஜூன் மாதம் தொடக்கம் ஐரோப்பா இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தெரிகிறது.





-சுபா

Saturday, April 25, 2020

கொரோணா தொற்று - ஐரோப்பிய நிலவரம்


25.4.2020

ஒட்டு மொத்தமாக விமானப் பயணங்கள் முடங்கிக் கிடக்கின்றன. ஒவ்வொரு விமானச் சேவை நிறுவனமும் மீண்டு எழ அதனதன் நாடுகளின் நிதி உதவி கட்டாயம் தேவை. KLM, Air France இரண்டு விமானச் சேவை நிறுவனங்களுக்கும் நிதி உதவியை அதன் நாடுகள் வழங்க உள்ளன. ஜெர்மனி Lufthansa விமானச் சேவை நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்குவது பற்றி பரிசீலனையைத் தொடங்க உள்ளது.

பிரான்சில் மே 11ம் தேதி ஊரடங்கை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றிய திட்டங்களை அதன் முதலமைச்சர் Edouard Philippe வருகின்ற செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் வாசிக்க உள்ளார்.
ஸ்பெயினில் தற்சமயம் நிலமை சற்று முன்னேற்றம் கண்டிருப்பதால் மே 2ம் தேதி முதல் பொதுமக்கள் வெளியில் நடமாட அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.


இன்று ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரிலும் தலைநகர் பெர்லினிலும் நூற்றுக்கனக்கான பொதுமக்கள் ஒன்று கூடி தங்களுக்குச் சுதந்திரமாக வெளியில் நடமாட அனுமதி தேவை எனப் போராட்டம் நடத்தினர். பெர்லினில் மட்டுமே 1000 பேர் கூடியிருக்கின்றனர். போராட்டக்காரர்கள் எங்களுக்கு எங்கள் வாழ்க்கை மீண்டும் வேண்டும் என முழக்கமிட்டனர். ஜெர்மனியின் சுகாதாரத்துறை இந்தப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை என்ற போதிலும் இந்தப் போராட்டம் இன்று நடந்திருக்கின்றது. ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப்பொறுக்கலாமே என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.


ஜெர்மனியில் அங்காடிகள் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு இயல்பாக இயங்குகின்றன. பள்ளிக்கூடங்கள் சிலமாநிலங்களில் கடந்த வாரம் தொடங்கப்பட்டு விட்டன. படிப்படியான ஊரடங்கு தளர்த்தும் நடவடிக்கைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் வெளியில் நடமாடும் போது மாஸ்க் அணிந்து செல்வதை கட்டாயமாக்கியிருக்கின்றன எல்லா மாநிலங்களும்.
 
-சுபா

Wednesday, April 22, 2020

கொரோனா வைரஸ் antibody பரிசோதனை

நோய்த்தொற்று வீதங்களை மதிப்பிடுவதற்கும் வைரஸின் பரவலைக் கண்காணிப்பதற்கும் ஜெர்மனி பெரிய அளவிலான கொரோனா வைரஸ் antibody பரிசோதனையைத் தொடங்குகிறது.

இரத்தத்தில் உள்ள antibody ஒருவருக்கு வைரஸ் வந்து எதிர்ப்புசக்தி தோன்றி மறைந்ததற்கு அறிகுறியாகும். முழு நோய் எதிர்ப்பு சக்திக்கு இதனால் உத்தரவாதம் இல்லை என்றாலும் கூட மக்களுக்குக் குறைந்தபட்சம் ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும் என்பதை இதன் வழி அறியலாம். ஐரோப்பாவில் மிகப் பெரிய அளவில் இவ்வகை ஆய்வினை தொடங்கியிருக்கும் முதல் நாடாக ஜெர்மனி அமைகின்றது.

https://www.euronews.com/2020/04/19/germany-starts-mass-testing-for-coronavirus-antibodies-in-bid-to-learn-more-about-covid-19?fbclid=IwAR34ySA3LJgcG6U73VMzInkoHFN3CIrWncFSCt4PKKQV2zmJHTUaGVIXH9w

Tuesday, April 21, 2020

கொரோனா வைரஸ் தடுப்பூசி

பிரிட்டனில் வருகின்ற வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சியின் சோதனைக்காக மனித மருத்துவ பரிசோதனை தொடங்க உள்ளது. பிரிட்டிஷ் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த வியாழக்கிழமை மக்கள் மீது தடுப்பூசி ஒன்றை பரிசோதிக்கத் தொடங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்-

மே மாத நடுப்பகுதியில் சுமார் 500 தன்னார்வலர்களிடம் இதைச் சோதிக்க திட்டம் உள்ளதாகவும் இச்சோதனை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், இன்னும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி சோதனை செய்யப்படும் என்றும் தெரிகிறது.